Thursday, June 24, 2010

சொந்தம் !


‘ப்ளீஸ் ரவி நான் சொல்றத கேளுங்க’

அவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை. முன்பிருந்தவனா இவன்? என்ன நினைப்பு? என தனக்குள்ளேயே கூறிக்கொண்டு திரும்பிய சுகிர்தா ஒரு கணம் அதிர்ந்தாள். அவளருகே நமட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி சதீஷ் எதிர்ப்பட்டான். சமாளித்துவிட்டு நடக்கத் தொடங்கினாள். அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்தவள் மெதுவாக குளியலறைக்கு சென்று கதவைத் தாளிட்டுவிட்டு குமுறி அழுதாள்.

சதீஷ் சொந்தமாக ஒரு கம்பனியை நடாத்துகிறான். அழகுக்கு குறைவில்லை. லேசான மீசை தாடியுடன் கம்பீரமாக இருப்பான். இவன் முதன் முதலாக சுகிர்தாவை காணும் போதே இதயத்தை இழந்துவிட்டான். என்றாலும் ஆண்டவன் சித்தம் இருக்க வேண்டுமே? இரண்டு நிமிடம் கழியும் முன்பே இவள் ரவியின் பின்னால் வலிய சென்று பேசுவதை அவதானித்தான். இந்த ஊமை நாடகத்தை சதீஷ் சமீப காலமாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அவனுடைய இதயக் கோவிலில் சுகிர்தா என்று குடியேறுவாளோ?

இன்னுமொருவனை அவள் விரட்டி விரட்டி காதலிக்கும் போது அவன் எப்படி தன் காதலைச் சொல்லுவான்? அது நாகரீகமில்லையே? சொல்லி விட்டாலும் சுகிர்தா அதை ஏற்பாளா? அல்லது தெரிந்து தெரிந்து என்னை காதலிக்கிறியேன்னு அவனை தப்பாக நினைக்க மாட்டாளா? அதனால் சதீஷின் காதல் மனசினுள்ளே புதைந்து கிடந்தது.

‘அம்மா சாப்பிட்டாச்சா?’ என்றபடி புத்தம் புது மலராய் குளியலறையிலிருந்து வந்தாள் சுகிர்தா. மனசோ சலனப்பட்டுக் கொண்டிருந்தது. மனசிலுள்ள கவலைகளை அம்மாவிடம் கூறி அவளை சங்கடத்தில் சிக்க வைக்க நினைக்கவில்லை. என்றாலும் அம்மாவிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது.

‘இதோ வந்திடுறேன்மா’ என்ற படி அடுக்களையிலிருந்து வந்த அம்மாவுக்கு மகளின் முக மாற்றம் புலப்பட வெகுநேரம் எடுக்கவில்லை.

‘என்ன சுகிர்தா ஒரு மாதிரி இருக்கே?’

அம்மாவின் கேள்வி சுகிர்தாவின் கண்களில் நீர் வரச் செய்யவே பதறிப் போனாள் அம்மா. ரவியை கண்டது முதல் சதீஷிடம் அவமானப்பட்டது வரை ஒன்று விடாமல் கூறினாள். அவற்றை எல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு நிதானமாக அம்மா கூறிய பதில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘வேண்டாம் விட்டுடு. நம்மள மதிக்காதவனை நீ ஏன் தேடிப் போற? நீ ஏன்மா வலியுற?’

சாத்தி வைத்து சவுக்கால் அடித்தது போலிருந்தது. என்ன இந்த அம்மா இப்படி பேசுகிறாள்? மற்றவர்களை விட அம்மா புரிந்துகொள்வாள் என்றல்லவா கூறினேன். இல்லை அது பொய் என்பதைப் போல அம்மா நடந்துக்கிறாளே? இறைவனே! உன் படைப்பினங்களில் யாருமே இதயத்தோடு படைக்கப்படவில்லையோ?

‘அம்மா நீ என்ன பேசற? ரவியை மறந்திட்டு எப்படிம்மா?’

சுகிர்தா அப்படி வலிமையாக கூறியபோது தாயுள்ளம் தப்பு செய்ததுபோல தவித்தது. விடிய விடிய நீரை இறைத்து விட்டு கடைசியில் குடத்தை உடைத்துப் போட்டது போன்ற குற்ற உணர்வு அம்மாவை ஆர்ப்பரித்துக் கொண்டது.

மறுநாள் வகுப்பிற்கு போய் வரும்போது பாதையைக் கடக்கையில் பெரியெதொரு லொறி தன்னை நோக்கி வருவதைக் கண்டு அச்சத்தால் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

‘என்ன சுகி கொஞ்சம் அக்கம் பக்கமா பார்த்து வரக் கூடாதாம்மா’ என்ற சதீஷின் குரலைக்கேட்டு முழுமையாக அவன் வார்த்தைகளுக்குள் சுருண்டு போனாள் சுகிர்தா.

‘சுகி’ என்றா கூப்பிட்டான்? அந்த வார்த்தையில் எத்தனை இதம்? எத்தனை மென்மை? பட்டாம் பூச்சி சிறகடித்தது. ஒரு கணம் தான். திடீரென மூளைக்குள் சந்தேகப் பொறி தட்டியது. என் பெயர் எப்படி இவனுக்குத் தெரியும்? வெகுவாக குழம்பியவள் அதைக் கேட்க வாயைத் திறந்து ஏமாந்தாள். சதீஷ் எப்போதோ போய்விட்டிருந்தான்.

அந்த சம்பவத்துக்குப்பின் அவளது மனம் அவன் பின்னால் அலை பாயத் தொடங்கியது. இந்த விசித்திரத்தைக் கண்ட அவளுக்கே தன்னை நம்ப முடியாமல் இருந்தது. அவள் அவனை காதலிக்கிறாளா? காதல் என்ற நோய்க்குள் தன்னை பலி கொடுக்கத் தயங்குபவளாச்சே சுகிர்தா. ‘என் மனசு எப்பவுமே என் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்’ என்று அடிக்கடி தோழிகளிடம் பெருமை பேசிய இவளுக்கு என்னவாயிற்று? மனம் தடுமாறிற்றா?

ஒரு வாரத்துக்குப் பின்பு வேலைக்கு தெரிவாகி இருப்பதாக அவளுக்கு கடிதம் வந்தது. கடிதம் உட்பட முக்கியமான சில ஆவணங்களை எடுத்துக் கொண்டு மேனேஜர் அறைக்குள் நுழைந்தவளுக்கு தேள் கொட்டியது போலிருந்தது. எதிரில் சதீஷ். அவனோ அவளை தெரியாதது போலிருந்தான். அது அவளுக்கு வசதியாகப் போனாலும் உள்ளுக்குள் என்னவோ செய்தது. அன்றைய மாலைப் பொழுதில் பஸ்ஸூக்காக காத்துக்கொண்டிருந்த போது, எதிர்பார்த்த விதமாக ரவியை தூரத்தில் கண்டாள். இதயத்தில் வெளிச்சம் பரவியது.

‘ரவி.. ரவி..!’

ரவியோ சுகிர்தாவைக் கண்டவுடன் நடையின் வேகத்தை அதிகமாக்கினான். உடனே சாரியை சற்று தூக்கி கையால் பிடித்துக் கொண்டு வேகமாக செல்ல முயன்ற போது அவளது தோளை ஒரு கை தொட்டது. சந்தேகமேயில்லை அது சதீஷ்தான்.

ஷசுகி உன்னை புரிஞ்சிக்காதவன நீ எதுக்கு தேடிப் போகணும்?| என்று அவன் ஒற்றையில் அவளை அழைத்தபோது ஒரு பக்கம் ஆச்சரியம் கலந்த ஆனந்தம். மறுபக்கம் அதிர்ச்சி கலந்த கோபம். ஆனாலும் இவ்வளவு இயல்பாக பேசுபவனிடம் எப்படி கோபப்படுவது? அவள் எதையும் பேசவில்லை.

‘என்ன யோசிக்கிற சுகி...?’ அவனது குரல் இளகியிருந்தது.

இப்போது சுகிர்தாவுக்கு கோபம் வரவில்லை. தன் மேனேஜர் என்பதால் சற்று நிதானித்து ‘ஒன்னுமில்ல சேர்’ என்றாள்.

‘என்னை பெயர் சொல்லியே கூப்பிட உனக்கு அனுமதிதர மாட்டேனா?’ தேக்கி வைத்திருந்த காதல் வெள்ளம், வார்த்தைகளாய் பீறிட்டுப் பாய்ந்தது. சற்று தயங்கியவள் சமாளித்துக்கொண்டு,

‘ஓகே சதீஷ்! நீங்க என்ன தப்பா விளங்கிட்டீங்க. நான் அவர் பின்னால அலையவில்லை. யாரையும் நான் காதலிக்கவுமில்லை’

‘என்ன சொல்ற சுகிம்மா?’ குரலில் உற்சாகம் ஒட்டிக்கொண்டது.

‘ஆமா சேர்.. சொரி சதீஷ்! அவர் எங்கள் அண்ணா. அவர் வேற்று மதப் பெண்ணைக் காதலிக்கிறார். அதை அம்மா அப்பா விரும்பவில்லை. அதனால் அண்ணா வீட்டைவிட்டு போயிட்டார்.  அவரை நான் எங்கு கண்டாலும் கெஞ்சி வீட்;டுக்கு கூப்பிடுறேன்’ சுருக்கமாக முழுவதையும் கூறியபோது சுகிர்தாவை அவமானப் படுத்திய சம்பவங்கள் சதீஷின் கழுத்தை நெரித்தன. மிகவும் மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டான்.

ஒரு வாரத்துக்குப்பின் ரவி அண்ணா வீட்டுக்கு வந்தார். அவரைக்கண்டு ஆனந்தமடைந்தவள், அவர் கூறியவற்றைக்கேட்டு பரவசமடைந்தாள்.

‘ரவியின்ர விஷயம் சரியாகிட்டு. அவன் விரும்புறபடியே அவனுக்கு திருமணத்தை நடாத்திரலாம்னு தீர்மானிச்சிட்டோம். அத்தோட உன்ர விஷயத்தையும்..’ என்ற போது முகம் வெளிறினாள் சுகிர்தா. ஏனோ சதீஷ் மனத்திரையில் வந்துதித்தான். அந்த மாற்றத்தைப் புரிந்த அம்மா,

‘சதீசு தம்பி நம்மகிட்ட ஏற்கனவே பேசிட்டாரு. நமக்கெல்லாம் ஓ.கே. நீ என்னம்மா சொல்றே?’ என்றாள்.

அவள் வெட்கத்துடன் மௌனித்தாள்!!!

No comments:

Post a Comment