Sunday, December 8, 2013

உறவுகள்

உலகத்தில் இறைவன் எமக்காகப் பல உறவுகளை அமைத்துள்ளான். முதன் முதலில் எமது பெற்றோரைத் தந்துள்ளான். அவர்களது தூய்மையான பாசத்துக்குப் பிறகு அவர்கள் மூலம் எமக்கு உறவினர்களை  ஏற்படுத்தியிருக்கிறான். நம்மோடு சேர்ந்திருக்க நமக்கு சகோதர சகோதரிகளைத் தந்திருக்கின்றான்.
ஆனால் இரத்த உறவுகள் மூலம் ஏற்பட முடியாத சில உறவுகளையும் காலத்துக்குக் காலம் இறைவன் நமக்கு காட்டிக் கொண்டுதான் இருக்கின்றான். அதில் யார், யார் இதயத்தை கட்டிப் போடுகின்றார்கள், யார், யார் வெட்டிப் போடுகின்றார்கள் என்பதையும் உணர்த்திவிடுகின்றான். இவ்வாறு என் நினைவுக் குதிரை கடிவாளமில்லாமல் சுற்றித் திரிந்தது.

உயர்தரம் முடித்துவிட்டு இருந்த காலப்பகுதியில் பத்திரிகைகளோடு எனக்கிருந்த தொடர்பு இன்னும் இறுக்கமானது. வாசிப்பின் தீவிரத்தில் நானும் ஏதாவது எழுத வேண்டும் என்ற நிலைக்கு ஆளானேன். கவிதைகளை எழுதியனுப்பினேன். அந்த சந்தர்ப்பத்தில்தான் என் கவிதை பத்திரிகையில் பிரசுரமாகியதைத் தொடர்ந்து எனக்கொரு பாராட்டுக் கடிதம் வந்திருந்தது. அனுப்பியருந்தவர் நஸீரா தாத்தா. நாமிருவரும் காலப்போக்கில் நல்ல நண்பிகளானோம். கிட்டத்தட்ட என் தாயைப் போலவே என்னுடன் அதிக நேசம் கொண்டுள்ள அவர் தன் சொந்த சகோதரிகளைப் போல என்னுடன் நடந்து கொள்ளும் விதம் இன்றுவரை தொடர்ந்திருக்கின்றது. இவ்வாறு இருந்து தலைநகருக்கு நான் வந்துவிட்டேன்.

தலைநகருக்கு வந்த ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்துக்கு புதிதாக வேலைக்குச் சென்றிருந்தேன். அந்த நிறுவனத்தில் உள்ள அதிகாரியும், அவரது மகனும் முதலில் நன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல அவர்களின் அதிகாரத் தொனியும், முதலாளித்துவக் குணமும் எல்லா ஊழியர்களையும் பாதித்தது. அதைவிடவும் பாதித்த விடயம் என்னவென்றால் எம்முடனேயே வேலை செய்யும் ஓரிரு பெண்கள் எம்மை துவேசக் கண்கொண்டு பார்ப்பதாகும்.

காலை வணக்கம் சொன்னபோதுகளில் கூட அவர்கள் அதற்கு மறுமொழி கூறாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டு செல்லும் ஒரு மனநிலையிலேயே காணப்பட்டார்கள். சில நேரங்களில் அவர்களின் பிரத்தியேக வேலைகளைச் செய்து தருமாறு கூறுவது கூட பரவாயில்லை. ஆனால் அதையுங் கூட ஆணவத்துடனும், அதிகாரத்துடனும் சொல்லும்தொனி அறவும் பிடிப்பதில்லை. எனினும் அவர்கள் சொல்வதை செய்யாத தருணத்தில் மேலாதிகாரியின் கோபத்துக்கு நாம் ஆளாக வேண்டிய அளவுக்கு அவர்களது அரசாட்சி அமையப் பெற்றிருந்தது.

பதினொரு மணியளவில் அலுவலகம் வந்து, நான்கு மணியாவதற்கு முதலே அவர்கள் செல்வதும், மற்றவர்கள் ஒன்பது மணிக்குப் போனாலும், ஐந்து மணிக்கு முதல் விடாததும் எமது அலுவலக ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மனக் கசப்பை ஏற்படுத்தியிருந்தது.

சில மாதங்களில் பிறிதொரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனுபவம் எனக்கு நேர்ந்தது. அதில் நம்முடனிருந்த ஊழியர்கள் மிகவும் நல்லவர்கள். உதவி செய்யத் தயங்காதவர்கள். ஆனால் அந்த அலுவலகத்தின் மேலதிகாரி ஒரு முரட்டுச் சுபாவம். ஒரு நிமிடம் பிந்தினாலும் கேவலமான பேச்சை பேசக்கூடியளவுக்கு அவரது பண்பின்மை காணப்பட்டது. நல்ல வேளையாக நமது கிளை அலுவலகத்துக்கு அவர் அதிகம் வருவதில்லையாதலால் எமது கிளையைச் சேர்;ந்த ஊழியர்கள் தப்பிய சந்தர்ப்பங்கள் பல.

எனக்கு நன்கு தெரிந்த ஒரு சகோதரி பிரபலமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தின் அதிகாரி, சாதாரண தரம் கூட சித்தியடையாதவர். ஆனால் அவரது பண பலமும், ஆங்கிலப் புலமையும் அவரை பணக்காரனாக மாற்றியிருக்கின்றது. அடிப்படையில் அவர் கொஞ்சம் பரவாயில்லை என்றபோதும், அந்தச்  சகோதரிக்கு சிக்கன்குன்யா காய்ச்சல் ஏற்பட்டு சுகவீனமாக இருந்த தருணத்தில் அவருக:கு கால் வீங்கி நடக்க முடியாத நிலையில் இருந்தார்.

வைத்தியர்கள் குநைதது மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என பணித்திருந்தனர். ஆனால் அந்த சகோதரி வெறுமனே இரண்டு கிழமைகள் மாத்திரமே விடுமுறை எடுத்திருந்தார். விடுமுறை எடுத்த காரணத்தால் சகோதரியை பலவந்தமாக வேலையை விட்டு நீக்கியதும், சம்பளக் காசில் மூவாயிரம் ரூபாவை கழித்துக் கொடுத்ததும் ஒரு சோக நிகழ்வாக இன்னும் பதிந்திருக்கின்றது.

இப்படியிருக்க இறைவனின் நாட்டத்தினாலும், எனது பெற்றோர், சகோதரர்கள், ஆசிரியர்கள், உறவினர்களின் பிரார்த்தனையாலும் ஒரு நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. உலகத் தலைவர்களில் முக்கியமான ஒருவரின் பெயரைக் கொண்டிருக்கும் அவர், ஒரு தலைவராகவே என் மனதில் ஆசனமிட்டு அமர்;ந்திருக்கின்றார். பிறரது வேலைகளைத் தனது சொந்த வேலையாகக் கருதி தொழிற்படும் நல்மனம் படைத்த அந்த அண்ணா, எனது பிரச்சனைகளை விளங்கிய பின், தனது நிறுவனத்தில் உள்ள தொழில் இடைவெளியை நிரப்புவதற்காக என்னை தேர்ந்தெடுக்க உதவினார். அவருக்கு என் இதய நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.

நான் இதுவரை வேலை செய்த இடங்களை விடவும் இது நல்லதொரு இடம் என்பதில் என்னைவிட எனது பெற்றோருக்கு மகிழ்ச்சி அதிகம். அங்கு முதன்முதலாக நான் நேர்முகத் தேர்வுக்காக சென்றபோது அங்கே இருந்த ஒரு யுவதி சிநேகபூர்வமாக என்னைப் பார்த்துச் சிரித்தாள். பதிலுக்கு நானும் சிரித்தேன். நேர்முகத் தேர்வு நடந்து முடிந்த பிறகு என்னிடம் வந்து எனது பெயர், ஊர் என்ன என்பவற்றை பாசத்துடன் வினவியபோது எனது மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது. பெரும்பான்மை இனத்தைச் சேர்;ந்தவர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் எந்தவித பாகுபாடும் இன்றி ஆழ் மனசிலிருந்தே புன்னகைத்தார்கள். இந்த நிறுவனத்தில் என்னை தொழிலுக்கு இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் மனதாரப் பிரார்த்தித்தேன்.

இரண்டு கிழமைகளின் பின்னர் அந்த நிறுவனதிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் தெரிவு செய்யப்பட்டுவிட்டதாக அவர்கள் அறிவித்தார்கள். பின்னர் இறைவனைப் புகழ்ந்துவிட்டு, பெற்றோரின் ஆசியுடனும், நஸீரா தாத்தா மற்றும் நான் முதல் கூறிய அண்ணாவின் வாழ்த்துக்களுடனும் புதிய வேலைக்குச் சேர்ந்தேன்.

எனக்கு தரப்பட்ட அலுவலக மேசைக்கு சென்றபோது எல்லோரும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் கணினி முன்னால் அமர்ந்து எனக்கான வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நான் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்தபோது சிரித்த அந்தப் பெண், கொஞ்ச நேரத்தில் வந்து எனக்கான வேலையை தந்துவிட்டு அதைச் செய்யுமாறு அன்புடன் சொல்லிவிட்டுப் போனாள். அவளருகே இருந்த இன்னொரு சின்னப் பெண், என்னை அக்கா என்று அன்புடன் அழைத்துப் பேசினாள். எனக்கு இதயம் இலேசாகியது. இதுவரை முன்னர் வேலை செய்த அலுவலகங்களில் பட்ட துன்பங்களுக்கு வடிகால் கிடைத்துவிட்ட பிரம்மை எனக்குத் தோன்றியது.

அறையின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண், பகலுணவு நேரத்தல் என்னருகில் வந்து எனது பெயரை விசாரித்தார். பிறகு மற்றவர்களிடம் பகலைக்கு என்னை சிற்றுண்டிச் சாலைக்கு அழைத்துப் போகுமாறு சொல்லிவிட்டு அகன்று சென்றார். அந்த அறைக்கு தலைவியாக செயற்பட்டு எல்லோரையும் பாசத்தால் கட்டிப்போட்டு கண்காணிக்கும் அந்த அக்கா, அகன்று அப்பால் சென்ற பின்னாலும் அவரது அன்புத் தொனி நிறைய நேரம் என்னை மகிழ்ச்சியிலாழ்த்தியது.
நான் சாப்பிட்டால் என்ன? சர்பபிடாவிட்டால் என்ன என்ற எண்ணம் சிறிதுமின்றி என்னை அவரது தங்கையாகவே எண்ணிய அந்த உரிமை எனக்கு சந்தோசத்தைத் தந்தது. இங்கு எனக்குக் கிடைத்த மூன்று பேருமே மிகவும் நல்லவர்கள்.

இன்னொருநாள் எனக்கு வேலை அதிகமாக இருந்தபோது அந்த அக்கா தானே என்னிடம் வந்து வேலையைப் பகிர்ந்து கொண்டார். வேறு யாரும் அவ்வாறு செய்ய மாட்டார்கள். தனக்கிருக்கும் வேலையை தமக்கு கீழிருப்பவர்களுக்கு சுமத்திவிட்டு, தொலைபேசியில் அரட்டை அடிப்பார்கள். அக்கா அப்படியில்லை. எல்லோரையும் சமமாகவே மதிப்பார்.  அக்காவின் வெள்ளை மனம் நன்கு பளிச்சிட்டது. அதுபோல தாம் கொண்டு வரும் டொபி, பிஸ்கட் முதலானவற்றைக்கூட எல்லோருக்கும் கொடுத்து அவர்கள் பகிர்ந்துண்ணும் பழக்கம் என்னைக் கவர்ந்தது. ஒருநாள் அக்கா விடுமுறை எடுத்துக்கொண்டார். அக்கா இல்லாத அலுவலகம் நம் எல்லோருக்கும் தண்ணீரில்லாத சோலை போல் இருந்தது.

எமது மேலாதிகாரியாகத் திகழும் மெடம் அவர்களும் மிகவும் மென் மனது படைத்தவர். கல்வி நடவடிக்கைகளுக்காக உதவி செய்யக் கூடியவர் என்றும் நான் அறிந்தேன். முன்பெல்லாம் ஒன்பது மணிக்கு அலுவலகம் செல்லப் பிடிக்காது, ஆனால் இப்போது ஏழு மணிக்கே செல்லப் பிடிக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இறைவனுக்கே புகழனைத்தும்!!!

Tuesday, May 14, 2013

வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


வைகறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் 




இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியினூடாக தன்னை ஒரு சிறந்த கவிஞராக இனங்காட்டிய தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறுகிய காலத்துக்குள் வைகறை என்ற சிறுகதை தொகுப்பின் மூலம் தான் சிறுகதையாளர் என்பதையும் நிதர்சனப்படுத்தியிருக்கிறார்.

மலைநாட்டை பிறப்பிடமாகக்கொண்ட இவர் வைகறை என்ற சிறுகதைத் தொகுதியின் அட்டைப் படத்தில்கூட மலைப் பிரதேசத்திலிருந்து உதிக்கும் சூரியனைக் காட்டி மலையகத்தின் மேல், அவர் கொண்டுள்ள பற்றுதலை காட்டுகிறார். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இத் தொகுதி 21 கதைகளை உள்ளடக்கி 114 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.


ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டி, யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டி, மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி, யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டி, மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டி ஆகியவற்றில் ரிஸ்னா பங்குபற்றி பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது சிறுகதைகள் பற்றி திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் தனதுரையில் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

'ரிஸ்னாவின் சிறுகதைகளில் பெரும்பாலானவை கற்பனா உலகிலிருந்து ஆக்கப்பட்டவை. ஒரு பகுதி ஆக்கங்கள், அவரது அனுபவங்களின் அருட்டலால் புனையப்பட்டவை. இச்சிறுகதைகள் வாசகர்கள் இலகுவாகப் படித்து இரசிக்கக் கூடியனவாக இருக்கின்றன. இவற்றில் அநேகமானவை கற்பனாரசக் கதைகள். ரிஸ்னா தனது கதைகளை இலாவகமாக நகர்த்திச் செல்கின்றார். இதற்கு அவரது மொழிவளம் துணைபுரிகின்றது. இவரது பாத்திரப் படைப்பு இயல்பாக உள்ளது. பாத்திரங்கள் கதைசொல்லல், ஆசிரியர் கதைகூறல், பின்னோக்கிக் கதைநகர்த்தல் போன்ற உத்திகளைக் கையாண்டு கதைகூறுகிறார்'.

இவரது சிறுகதைகள் மலையகம், முஸ்லிம் சமூகம், பெண்ணியம் போன்ற வௌ;வேறான தளங்களில் நின்று நோக்கத்தக்கவை. மூன்று தளங்களிலும் இவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் கற்பனைக் கதைகளையும் எதிர்பாராத முடிவினைத் தந்து இவர் யாத்திருப்பது சிறப்பம்சமாகும்.

தான் சிறுகதைகளை எழுவதற்குரிய காரணத்தையும் நூலாசிரியர் தனதுரையில் இவ்வாறு மனந்திறந்து கூறுகிறார்.

'அன்றாடம் நான் பார்த்த அல்லது கேட்ட சில விடயங்கள் என் மனதைக் குத்திக் கீறி ரணப்படுத்தின. அவ்வாறான சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சிறுகதைகளை யாத்தேன். எனது சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சனைகளின் கருவானது, என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறுவடிவம் என்றும் கூறலாம். ஆகவே அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால், அந்த ஆறுதலைத்தான் என் சிறுகதைகளினூடாக நான் காணும் வெற்றியாக கருதுகிறேன்'.

பின்னட்டைக் குறிப்பில் டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் ரிஸ்னாவின் சிறுகதைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

'பரந்த அனுபவங்களும், அவற்றை மனதில் தக்க வைத்து இரைமீட்டு, அசை போடும் மென்னுள்ளமும் கொண்ட ஒருவரால்தான் சமூக அக்கறையுள்ள படைப்பாளியாக தன்னை இனங்காட்ட முடியும். தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா அவர்களுக்கு மலையகம், நகர்புற வாழ்வு, முஸ்லிம் சமூகப் பின்னணி என முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் நனைந்தூறும் வாய்ப்பு இளவயதிலேயே வாய்த்துள்ளது. இதனால்தான் நீதி மறுக்கபட்ட சகமனிதர்களின் அவலங்களை அவரால் தனது படைப்புகளில் யதார்த்தமாகச் சித்தரிக்க முடிந்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர், பெண்களின் பாடுகள், சீதனக் கொடுமை, போர் அவலம் போன்ற பலவற்றையும் தனது சிறுகதைகளில் பாடுபொருளாகக் கொண்டு, உணர்வுபூர்வமாகச் சித்தரிப்பதை அவதானிக்க முடிகிறது. மனதுறையும் அக உணர்வுகளை மறைபொருளாய் வெளிப்படுத்தும் திறன்மிக்கவர். நூலாசிரியர் அலங்கார வார்த்தைகளால் வாசகனிடமிருந்து அந்நியப்படாது, பேசுதமிழை வசப்படுத்தி உருவேற்றி வாசகனுடன் உறவாடுவதில் கைதேர்ந்தவர்'.

அழகன் என்ற முதல் கதை. இரண்டு பக்கங்களில் அமைந்திருக்கிறது. சந்தியாவின் கற்பனையோட்டத்தால் கதை நகர்கிறது. பஸ்ஸில் தான் பார்த்த அந்த அழகனின் நினைவுகளை முதலில் வாசிக்கும்போது சந்தியா அவனை காதலிக்கப் போகிறாளா என்ற ஆர்வம் வாசகருக்கு ஏற்படுகிறது. எனினும் இறுதியில் நூலாசிரியர் வாசகர்களை அழகாக ஏமாற்றுகிறார். அதாவது சந்தியா அத்தனை நேரமும் மூன்று வயதுகூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையைப் பற்றியே எண்ணியிருக்கிறாள். கதையின் இறுதி வாக்கியம் இவ்வாறு முடிவுறுகிறது 'எனக்கும் வேண்டும் இப்படி ஒரு அழகான பிள்ளை'.

பெண்பிள்ளை பெற்றால் உன்னை விவாகரத்து பண்ணிவிடுவேன் என்ற பிற்போக்குக் கொள்கை கொண்டவர்கள் இன்னும் நம் மத்தியில் வாழ்க்கிறார்கள். இறைவனின் தீர்ப்பை மாற்ற முயன்றால் முடிகிற காரியமா? காதல் கல்வெட்டு என்ற ரிஸ்னா எழுதிய சிறுகதை தன் காதலியின் கருப்பப்பை பிரச்சினை பற்றி அறிந்தும் அவளை மணக்க விரும்புகின்ற வசீகரன் பற்றியது. வசீகரனின் கீழுள்ள கூற்றை வாசிக்கையில் வாசகருக்கும் இதயம் கனத்துவிடுகின்றது. 'நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச் சென்றான்'.
மலையக தோட்டத் தொழிலாளிகள் தேயிலைக் காடுகளில் காலங் காலமாக கஷ்டப்படுகிறார்கள். போதாக் குறைக்கு தமது ஆண், பெண் பிள்ளைகளை தலைநகருக்கு வேலைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு சிறுவயதிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்ட வனிதாவின் நிலையை விதி என்ற கதை சித்தரிக்கிறது. தனது வீட்டாருக்காக தனக்கு இழைக்கப்படும் பல கொடுமைகளையும் வனிதா தாங்கிக்கொள்வதாக கதை முடிவுறுகிறது. அந்த வனிதாவின் சோகக்குரல் இதோ.. 'விடிந்தால் ராத்திரி வரைக்கும் வேலை. விருந்தினர்கள்னு வீட்டுக்கு யாராச்சும் வந்தா எந்த ஒத்தாசயும் இல்லாம முதுகு முள்ளு ஒடியங்காட்டிக்கும் தனியாக்கெடந்து சாவனும். இரவில் நீங்க சுகமாக தூங்குறதுக்கு தாய்ப்பாலும் கொடுக்காமல் புள்ளையை எங்கிட்ட தந்துடரீங்க. சின்னக் குழந்த பாவம். தினமும் ராத்திரிக்கு புட்டிப்பால் அடிச்சுக் கொடுத்தாலும் அது குடிக்கமாட்டேங்குது. ராவைக்கெல்லாம் கண்முழிச்சி, பகலில வேல செஞ்சி இன்னமும் இங்கயே கதின்னு இருக்கேனே. உண்மைக்கும் நீங்க சொல்ற மாதிரி நான் எரும மாடுதான். எரும மாடேதான்'.

இறைவன் சிலருக்கு வசதியையும், பலருக்கு வறுமையையும் கொடுத்திருக்கிறான். பணமிருப்பவர்களிடம் ஏழைகளுக்கு கொடுத்துதவுமாறும் கட்டளையிட்டிருக்கிறான். ஆனால் ஏழைகளின் கொஞ்சநஞ்ச உடமைகளையும் பறிப்பதற்கே பலர் முதலைகளாய் வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறானதொரு மனிதர்தான் உஸ்மான் ஹாஜி. தனது ஏழைச் சகோதரனை வாழ விடாதவர். இறுதியில் உஸ்மான் ஹாஜி விபத்தில் சிக்க அவரது சகோதரர் அக்பர் இரத்தம் கொடுத்து உதுவுகிறார். அதைக் கேள்விப்பட்டு திருந்திய உஸ்மானின் ஆதங்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது. 'நான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக'.

தன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரையே பிள்ளைகள் வெறுத்தொதுக்கும் கலிகாலம் இது. பாசம் யாவும் பணத்தால் மதிக்கப்படும் நிலை இன்று. அப்படியிருக்க தனது பாட்டி, பாட்டனை அன்பாக பார்க்க யாருக்கு மனது விசாலமாயிருக்கிறது? அவர்களின் மறைவை எண்ணி அழுவதற்கு யாருக்கு நேரமிருக்கிறது? வேதனை என்ற சிறுகதையை ரிஸ்னா தனது பாட்டி, பாட்டனை நினைவுகூர்ந்து மிகவும் உருக்கமாக எழுதியிருக்கிறார். அவர்கள் மேல் தான் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துகிறார். 01. 'நான் மௌத்தாகின காலத்துக்கு என்னை ஞாபகம் வரும் போது யாஸீன் சூரா ஓதிக்கொள்' என்றார். (யாஸீன் சூரா என்பது அல்குர்ஆனின் ஒரு அத்தியாயம்) நான் எதுவுமே பேசவில்லை. காரணம் அவர் மௌத்தாகும் விடயமொன்றை என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. 02. 'உம்மம்மா பக்கத்தில் அவரது கம்பளிப் போர்வையை போர்த்தி அவரின் பழைய ஞாபகங்களை கேட்டபடியே படுக்க ரொம்பவும் ஆசை எனக்கு. அந்த போர்வை இப்போது எங்கள் மாமா வீட்டில் இருந்தாலும் உம்மம்மா இல்லாத இப்போதுகளில் அதைப் போர்த்த மனசு அடம் பிடிப்பதேயில்லை'.

சிட்டுக்குருவி என்ற கதையில் தனது ஒன்றுவிட்ட தங்கை ஷியாவை, அதாவது சிற்றன்னையின் (தாயின் சகோதரி) மகளை தன் வீட்டில் தங்கியிருந்து படிக்கும்படி சொல்கிறார் அபி டீச்சர். எனினும் அவரது சுயரூபம் ஓரிரு கிழமைகளில் தெரிகிறது. நம்பியோர் கழுத்தறுக்கப்படுவர் என்ற புதுக் கூற்றுக்கமைய அபி டீச்சர் தன் வீட்டிலிருந்து ஷியாவை தீடீரென போகச் சொல்கிறார். படிக்க வந்த ஷியா ஒன்றுவிட்ட சகோதரியின் வார்த்தைகளால் துடிக்கிறாள்.

இவ்வாறு கற்பனை, பாசம், பெண்ணியம், மலையகம், சமூகம் என்ற பல்வேறு தளங்களில் நின்று சிறுகதைகளை படைத்திருக்கும் ரிஸ்னா, இன்னும் பல இலக்கியத் துறைகளில் கால்பதித்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வைகறை (சிறுகதை)
நூலாசிரியர் - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி - 0775009222
விலை - 300 ரூபாய்

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' 
சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை


சிவலிங்கம் சிவகுமாரன்

தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா இலங்கை முஸ்லிம் பெண் படைப்பாளிகளில் வளர்ந்து வரும் அதே நேரம் அறியப்பட்ட ஒருவராக விளங்குகிறார். இவரது முதலாவது சிறுகதை தொகுதியாக வைகறை என்ற படைப்பு வெளிவந்துள்ளது. இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 21 சிறுகதைகள் அடங்கியுள்ளன. 


உலக நாடக மேடைகளில் நாம் சந்திக்கும் வழமையான பாத்திரங்களே சிறுகதையில் இடம்பிடித்துள்ளன. வசிக்கும் சூழல் சார்ந்த அனுபவங்கள் இலக்கிய படைப்புகளாக வெளீவரும் போது பாத்திரங்களாக நாமும் அப்படைப்புகளில் நடமாட முயற்சிப்போம், எதிர்மறை எண்ணங்கொண்டவர்களுக்கு குறிப்பிட்ட பாத்திரங்களாக மாறி அறிவுரை கூறுதல் அல்லது சம்பவங்களை சிருஷ்டித்து பாடம் புகட்டுதல் போன்ற அம்சங்கள் புனைகதை சார்ந்த இலக்கியங்களில் சகஜம். அந்த வெளிப்படுத்துகை சில கதைகளில் தெரிகிறது. வாசிப்பவர்களுக்கு தடுமாற்றம் இல்லாத மொழி நடை பாராட்டப்பட வேண்டிய விடயம்,அதாவது வட்டாரவழக்குச்சொற்களும் பிரதேச மொழி நடையும் உள்வாங்கப்படாத அம்சம் எல்லோரையும் வாசிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்ததாக இருக்கலாம்.

ரிஸ்னாவின் படைப்புகளை பார்க்கும் போது ஒரு விடயத்தை முன்னிறுத்தலாம், பெண் படைப்பாளிகளில் குறிப்பாக முஸ்லிம் பெண்படைப்பாளிகள் சமூக கட்டுக்கோப்புக்குள் வாழ வேண்டும்,கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதால் அதே கட்டுக்கோப்போடு தான் இலக்கியம் படைக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்பதே அது. காரணம் சமூக சீர்கேடுகள், வறுமை, அதிகாரப்போக்கு, ஆணவம், கர்வம், ஏமாற்றுதல், வஞ்சம் போன்றவற்றை இவரது கதைகளில் பாத்திரங்களாக நடமாட விட்டு விளைவுகளை தண்டனைகளாக தந்திருக்கிறார். சிறு கதையானது அத்தளத்திலிருந்து சற்று வெளியே சென்று மீண்டும் கதைக்கு திரும்பும் பாணியை இப்போது எவரும் பின்பற்றுவதில்லை என்றே கூற வேண்டியுள்ளது. அதாவது கதைக்கு இடையே படைப்பாளி தரும் தத்துவங்கள்,வர்ணணைகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

ரிஸ்னாவின் கதைகளில் தேவையில்லாத அலட்டல்கள் இல்லை என்பதால் வாசிப்போருக்கு இலகுவாகவும் விரைவாகவும் வாசிக்க முடிகிறது. நடை மிகவும் இலகுவானது. விதி,கானல் நீர்,வாக்குறுதிகள்,கண்ணீர் போன்ற சிறுகதைகள் மனதை தொடுகின்றன. மலையகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ரிஸ்னா தற்போது தலைநகரில் வாழ்ந்து வருகிறார். எனினும் இவரை மலையக பெண் படைப்பாளிகளில் ஓருவராக பெயரிடவே எனது மனம் விரும்புகிறது. அவரது இலக்கிய பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர்: வைகறை (சிறுகதை தொகுதி)
நூலாசிரியர்: தியத்தலாவை எச்.எப்.ரிஸ்னா
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

Saturday, April 13, 2013

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர் - மாவனெல்ல

வைகறைப் பொழுதினில்
வைகறை வருவது
மனதுக்கு இனியது
சிறுகதை தாங்கி
சிறப்புடன் திகழ்வது
சிந்தைக்குச் சிறந்தது!

ஆம்! இளம் பெண் எழுத்தாளரும், கவிதாயினியும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியருமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, தனது இரண்டாவது நூலாக வைகறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே `இன்னும் உன் குரல் கேட்கிறது' என்ற பெயரில் கவிதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டிருந்தார். வாசகர் மனதில் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் வைகறை சிறுகதைத் தொகுதியும் வந்துவிட்டது.



இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27வது வெளியீடாகும். இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மேற்படி மன்றம், கவிதாயினியும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் `தென்றலின் வேகம்' என்ற கவிதைத் தொகுதியினையும் ஏற்கனவே வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பிரபல படைப்பாளியும், மூத்த எழுத்தாளருமான திரு. நீர்வை பொன்னையன் அவர்கள், சகல சிறுகதை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும் வகையில் மிகவும் அழகான, பொருத்தமான, பயனுள்ள சில கருத்துக்களைக் கூறியிருப்பது பிரயோசனமானதாக இருக்கிறது. சிறுகதை இலக்கணம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு அவரது கருத்துக்கள் பயன்பெறுகின்றன. பொதுவாக சிறுகதை ஒன்று ஆரம்பம், வளர்ச்சி, முதிர்வு (கிளைமேக்ஸ்) போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்  என்பது பொதுவான விதி. சிறுகதைக்கு அமைப்பு என்று ஒன்று இல்லை, எப்படியும் கதை சொல்லியாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் மொழி வளமும், பிரயோகமும், நடமாடும் பாத்திரப் படைப்புகளும், எதிர்பாராத திருப்பமும்தான் சிறுகதைக்கு சுருதி சேர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் பயிற்சிச் சிறுகதையாளர்களுக்கும், பயிற்சி பெற்றுத் திகழும் சிறுகதையாளர்களுக்கும் அறிவுரைகளைத் தரக்கூடியதாக இருக்கிறது. 

தியத்தலாவை எச்.எப். ரிஸ்னா, ஏற்கனவே தினகரன், தினக்குரல், வீரகேசரி, நவமணி, சுடர் ஒளி போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், ஞானம், மல்லிகை, செங்கதிர், ஜீவநதி, ஓசை போன்ற முன்னணி சஞ்சிகைகளிலும் எழுதி வருபவர். இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள அளவில் சிறியதும், பெரியதுமான 21 சிறுகதைகளில் அநேகமானவை மேற்படி பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கவிதையாகத் தோன்றி, காப்பிய உருக்கொண்டு, உரைநடை மாற்றம் பெற்று இன்று இருக்கும் நிலைக்கு சிறுகதை இலக்கியம் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும், அதிலே பல ரகக் கதைகள் பல பெயர்களில் அழைக்கப்படக்கூடியதாக உருவத்திலும், உள்ளடக்கத்திலும் வேறுபட்டதாக சிறுகதை வடிவம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சிறுகதைக்கு வரைவிலக்கணம் கூறியுள்ள அன்ரன் செக்கோ, எட்கார் அலன்போ, எம்.ஈ. பாற்ஸ், எரிக் சேர்விக், ஹர்தோன், கா. சிவத்தம்பி, மார்க்ஸிம் கார்க்கி, புதுமைப்பித்தன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களை விளக்கியிருக்கிறார் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள்.

ரிஸ்னாவின் இந்தத் தொகுப்பில் காதல் கதைகள், முஸ்லிம்களின் வாழ்வில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் போன்றவற்றை பிரதிபலிக்கும் பல்சுவைக் கதைகள் அடங்கியுள்ளன. நூலில் முதலாவதாக இடம்பெற்றிருக்கும் அழகன் என்ற கதை அளவில் சிறியதாக இருந்தாலும் அருமையானதொரு பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது. கதையை முழுமையாகப் படித்த பின்புதான் அதனைக் காதல் கதையாக எடை போடுபவர்கள் இறுதியில் ஏமாற்றத்தைக் கண்டுகொள்வார்கள். ஏனெனில் ரசிப்பு, சிரிப்பு, தொடுகை, உரையாடல் எல்லாம் காதலுக்குச் சொந்தமான பண்புகள் போல் காணப்படுவதுதான். அதே போன்று விதி என்ற சிறுகதை தோட்டத் தொழிலாளர்களின் வருமானக் குறைவினால் தமது பெண் பிள்ளைகளை கொழும்பில் உள்ள வீடுகளுக்கு அனுப்பி வைக்கும்போது பிள்ளைகள் படும் துயரினையும், நகர வாழ்வின் தன்மைகளையும், மனித நேயமற்ற மனிதர்களின் பண்புகளையும் விளக்குவதாக அமைந்துள்ளது.

மாற்றம் என்ற பெயரில் எழுதப்பட்டிருக்கும் கதையானது, தோட்ட மக்களின் வறுமை நிலையினைக் காட்டுவதோடு காலங்காலமாக அவர்கள் தேயிலைத் தோட்டத்தோடும், அழுக்கு உடைகளோடும்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, படித்து, முன்னேற வேண்டும் என்ற தைரியத்தை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளது. யதார்த்தமாக இருந்தாலும் கற்பனை வளம் பாத்திரப் படைப்புக்களை நன்றாக சித்தரிக்கிறது. தோட்டக்காட்டான் என்று அடைமொழி வழங்கி சித்திரா டீச்சரினால் கேவலமாக பார்க்கப்பட்ட முரளி என்ற சிறுவன் படித்து, முன்னேறி டாக்டர் பட்டம் பெற்று பிரபலம் அடைந்த பின்புதான் கைராசிக்கார டாக்டராக வந்திருக்கிறான். அதை அறியாமல் சித்திரா டீச்சர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்ட போதும் அது நிராசையாகிப் போனதால் அவமானம் தாங்காமல் தலைகுனிவுக்கு உள்ளாகிறார். இதனை அருமையான படிப்பினை ஊட்டும் கதை என்று சொல்லாம்.

அதே போன்று உறவுகள் என்ற கதை ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த அண்ணன் தம்பிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவு, விபத்தில் சிக்கிய சகோதரனை தனது இரத்தத்தைக் கொடுத்து காப்பாற்றியதனால் மறைந்தது. 

மேலும் தேயிலைச் செடிகளுக்கு உரமாய் உழைக்கும் அப்பாவி ஜீவன்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் போது அட்டைக்கடியிலும், பாம்புப் புற்றுகளிலும் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முழங்கால் அளவுக்கு பொலித்தீன் பைகளைக் கட்டிக் கொண்டு தேயிலை சுமை சுமக்கும் அவர்கள் மீது கருணைகாட்ட எந்தத் தலைவன் முன்வந்தான்? காலங்காலமாக தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்தத் தோட்டங்களில் பாதம் பதித்து போலிப் பாசம் காட்டி இறுதியில் ஏமாற்றும் இந்த ஏமாற்று வித்தைக்காரர்களை தொடர்ந்தும் தலைவர்களாக ஏற்றுக்கொள்வதா? என்ற கேள்வி மூலம் தோட்டங்களில் நிலவும் அரசியல் நிலவரம் துலாம்பரமாகிறது. 

அதே வேளை தோட்டப் பாடசாலைகளில் படிக்கப் போகும் பிள்ளைகளின் நிலவரங்களையும் எடுத்துக்காட்ட கதாசிரியர் மறக்கவில்லை `காலில் செருப்பில்லாமலும், புத்தகப் பை இல்லாமலும் வருகின்ற அப்பாவி மாணவர்களை நிறுத்தி வைத்து கேள்வி கேட்கவும், பிரம்பினால் தோலுரிக்கவும் தெரிந்த ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டு நிலவரத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பாரா? வேண்டாம். தெரிந்துகொள்ள முயற்சியாவது எடுத்திருப்பாரா? ஐந்தாறு பிள்ளைகளின் சாப்பாட்டுத் தேவையையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ஒரு குடும்பத்துக்குள் இருந்து கல்வி கற்பதற்காக புறப்பட்டு வரும் அந்த மாணவனை தட்டிக்கொடுக்க ஒருவருமில்லை. ஆனால் அயன் கலையாத ஆடையுடனும், பொலிஷ் பண்ணப்பட்ட சப்பாத்துடனும் வரும் ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்னே கௌரவம் கொடுக்கிறார்கள்?' என்று மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி கதையை சிறப்பாக நகர்த்தியிருக்கிறார். 

இன்று பெண் எழுத்தாளர்கள் என்ற வகையில் நிறையப் பேர் எழுதி வந்தாலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் ஒரு சிலரே எழுதுவதைக் காண முடிகிறது. மூத்த தலைமுறை முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் வயது மூப்பு, குடும்பப் பிரச்சினை, நேரமின்னை போன்ற பல்வேறு காரணங்களினால் எழுதுவதிலிருந்து தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். என்றாலும் இளைய தலைமுறை எழுத்தாளரான எச்.எப். ரிஸ்னா தொடர்ந்தும் சமூகத்துக்காக, சமூகத்திலுள்ள பிரச்சினைகளைப் புரியவைப்பதற்காக, சமூக சீரழிவுகளை சீர் செய்வதற்காக எழுத வேண்டும். சிறுகதை எழுத்தாளராக வர ஆசைப்படுபவர்கள் இந்நூலை வாங்கிப் படிப்பதன் மூலம் சிறந்ததோர் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியம். எச்.எப். ரிஸ்னாவுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - வைகறை
வகை - சிறுகதை
நூலாசிரியர் - எச்.எப். ரிஸ்னா
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
தொலைபேசி – 07750092220719200580
விலை - 300 ரூபாய்