Saturday, October 29, 2011

வாக்குறுதிகள் !


அன்று காலை பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்த சுந்தருக்கு அந்தப் பேட்டியைப் பார்க்கப் பார்க்க மின்சாரம் தாக்குவது போல் இருந்தது. நீரின் முக்கியத்துவம் பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் குறிப்பிட்டு அந்த அதிகாரி பேட்டி கொடுத்திருக்கும் பத்திரிகை அவன் கையைச் சுட்டது. மேடையில் தனது பரிவாளங்கள் சூழ, ஒலிவாங்கி முன் உள்ள மேசையில் தனது ஒரு கையை ஊன்றியவாறு இருக்கும் அவரது புகைப்படங்களைக் கண்டதும் சுந்தருக்கு ஆத்திரம் வந்தது.

தோட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருந்த பொழுது மாவட்ட அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். மின்சார வசதி, குடிநீர் வசதி எல்லாம் செய்து தருவோம் என்று கூறி லயத்தில் இருந்த சிலரிடம் தோழமையாக பழகுவது போல நடித்து பத்திரிகைக்காக போட்டோவும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். தோட்டத்து மக்கள் யாவரும் அவர்கள் சொன்ன சொல்லை நம்பி தமது சோகம் தீர்க்க வந்த மகான்கள் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். போலி அறிக்கையை விட்டுச்சென்ற அந்த அதிகாரிகள் அதன் பிறகு அந்தப் பக்கத்துக்கே வரவில்லை.

‘எலக்ஷன் காலத்தில் மட்டும் என்னமாய் வந்து நடித்து பந்தம் பிடிப்பான்கள் ராஸ்கல். இப்போ மனுசன் போய் நின்னா கண்ணுக்கு விளங்காது இவனுங்களுக்கு. இன்னொரு முறை தேர்தல் வராமலா போயிடும். அப்போ பாத்துக்கலாம்’ சுந்தரின் மனசு குமுறியது.

ஆச்சி மெதுவாக வந்து பத்திரிகையை எட்டிப் பார்த்தாள். சுந்தர் ஏன் கோபமாக இருக்கிறான் என்பது புரிந்தது. எனினும் சமாளித்துக்கொண்டு அவனிடம் பேச்சு கொடுத்தாள்.

‘என்ர மவராசா... உன் கோவம் எனக்கு புரியுதுப்பா. ஆனா உன் வாழ்க்க வீணா கழியப்படாது ராசா. இந்தக் கிழவி சாக முன்னால ஒரு கல்யாணம் பண்ணி எனக்கு கொள்ளுப் பேரன பெத்துத் தா அப்பு’

‘கொஞ்சம் சும்மா இரு ஆச்சி. எப்பயும் ஒனக்கு இதே பேச்சு தான். திடீர்னு எங்க போயி பொண்ண தேட. அப்பிடித்தான் தேடினாலும் தண்ணியில்லாத இந்த லயத்துக்குள்ள வந்து எவ நிப்பா?’

சுந்தரின் சூடான வார்த்தைகளைக் கேட்டதும் ஆச்சிக்கு இதயம் கனத்தது. அவன் சொல்வதிலும் பிழையில்லைத்தானே?

இந்த லயத்து மேட்டுல வந்து குடித்தனம் பண்ண எவதான் விருப்பப்படுவா? விருப்பத்தோட வந்த வேதவல்லியும் என் மவன் சண்முகத்துடனேயே சாமிக்கிட்ட போய் சேந்திட்டா. என் தாயி! மருமவ போலயா என்ன பாத்துப்பா? மகள் போல எங்கூட இருந்து ஒத்தாச செய்வாளே...

ஆச்சிக்கு பழைய நினைவுகள் நெஞ்சில் அலைமோதின. அவளது மகன் சண்முகம் இந்த லயத்தின் மேம்பாட்டுக்காக பட்டபாட்டைத்தான் சுந்தரும் படுகிறான் என்று ஆச்சிக்குத் தெரியும். ஆனால் எதை செய்தும் வெற்றி பெறாமல் அற்ப ஆயுளில் இறந்துபோன தன் மகன் சண்முகத்தைப் பற்றியும், மருமகள் வேதவல்லியைப் பற்றியும் நினைத்தபோது அவளது விழியோரம் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

***************

சுந்தரின் அப்பா சண்முகம் சமூக அக்கறை மிக்கவர். யாருடைய பிரச்சனைகளைக் கேட்டாலும் அதை தீர்த்து வைப்பதற்கு தன்னாலான உதவிகளை வஞ்சகமின்றி செய்பவர். முன்பொருநாள் கூட இந்த லயத்தின் பாதை சீரின்மையால் மக்கள் படுகின்ற பிரச்சனைகளை கிராம சேவகரிடம் கூறி அதற்கான ஆரம்பகட்ட வேலைகளைச் செய்யுமாறு பேசிப் பார்ப்பதற்காகத்தான் கிராம சேவக அலுவலகத்துக்கு சென்றிருந்தார்.

அவர் சென்று பல மணிநேரம் கடந்தும் கிராமசேவகர் வந்து சேரவில்லை. அங்கிருந்த மற்றவர்கள் சண்முகத்தை முறைத்தப் பார்ப்பதும், கேள்வி மேல் கேள்வி கேட்பதாகவும் இருந்தார்கள்.

லயத்தானுக்கு வேற வேலயில்ல. ரோடு பிரச்சன... என்று அவர்களுக்குள் கருத்து பரிமாறப்பட்டதை சண்முகமும் கேட்டுக்கொண்டு தான் இருந்தார். லயத்தான் என்றால் என்ன? அவன் மனிதன் இல்லையா? அவர்களுக்கென்று ஆசாபாசங்கள் இல்லையா? குடும்பம், பிள்ளை என்று அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது தானே? காலம் காலமாக அடிமைப்பட்டு வாழ்வது எமது சமுதாயத்தின் தலையெழுத்தா? கண்டவன் நிண்டவனிடம் எல்லாம் கைகட்டி வாய்பொத்தி வேலை செய்வதும் காணும் நேரத்தில் எல்லாம் குனிந்து மடிந்து சலாமுங்க என்று சொல்லியும் வாழ்ந்து முடித்த மூதாதையர் மீது சண்முகத்துக்கு கடும் எரிச்சல் வந்தது.

அவர்கள் பழகிய பழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்க வேண்டுமா? இல்லையே... அப்படி ஒரு சட்டம் எங்கும் எழுதி வைக்கப்படவில்லையே. நாட்டின் அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற தோட்டத்து மக்களை மனிதப் பிறவிகளாக எந்தக் காலத்தில் யோசித்திருக்கிறார்கள்? அவர்களது வளமான வாழ்வு பற்றி எவர்தான் அக்கறை காட்டியிருக்கிறார்கள்? வெயிலும், மழையும், பனியும், காற்றும் மட்டுமே அந்தத் தொழிலாளர்களின் சுயம் அறியும். வியர்வை என்றால் ஏசி அறையில் தூங்கும் சுகம், குளிர் வந்தால் பஞ்சு மெத்தையில் படுக்கும் இதம்... இவை எல்லாவற்றையும் வாழ்வில் ஒரு நாளாவது இந்த ஏழை மக்கள் அநுபவித்திருப்பார்களா?

அட்டைக்கடியிலும், பாம்புப் புற்றுகளிலும் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முழங்கால் அளவுக்கு பொலித்தீன் பைகளைக் கட்டிக்கொண்டு முதுகு வலிக்க வலிக்க தேயிலைச் சுமை சுமக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள் மீது கருணை காட்ட எந்தத் தலைவன் முன்வந்தான்? காலங்காலமாக தேர்தல் காலங்களில் மாத்திரம் இந்தத் தோட்டங்களில் பாதம் வைத்து போலிப்பாசம் காட்டி, இறுதியில் ஏமாற்றும் இந்த வித்தைக்காரர்களைத் தொடர்ந்தும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டிருப்பது யார் குற்றம்?

உலகம் இன்று எவ்வளவோ முன்னேறிக்கொண்டு வருகிறது. இன்டர்நெட், ஈமெயில் என்றெல்லாம் சொல்கின்றார்கள். தோட்டத்துப் பாடசாலைகளில் இந்தக்கல்வி போதிக்கப்படுகின்றதா? வழமையான பாடங்களே பெரிய பாடசாலைகளில் ஒழுங்காக நடப்பதில்லை. அப்படியிருக்க தோட்டத்து பாடசாலைகளில் கல்வி நிலை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

காலில் செருப்பில்லாமலும், புத்தகப் பை இல்லாமலும் வருகின்ற அப்பாவி மாணவர்களை நிறுத்தி வைத்து கேள்வி கேட்கவும், பிரம்பினால் தோலுரிக்கவும் தெரிந்த ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டு நிலவரத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்து வைத்திருப்பாரா? வேண்டாம். தெரிந்துகொள்ள முயற்சியாவது எடுத்திருப்பாரா? ஐந்தாறு பிள்ளைகளின் சாப்பாட்டுத் தேவையையே பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் ஒரு குடும்பத்துக்குள் இருந்து கல்வி கற்பதற்காக புறப்பட்டு வரும் அந்த மாணவனை தட்டிக்கொடுக்க ஒருவருமில்லை. ஆனால் அயன் கலையாத ஆடையுடனும், பொலிஷ் பண்ணப்பட்ட சப்பாத்துடனும் வரும் ஒரு சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் என்னே கௌரவம் கொடுக்கிறார்கள்? அப்பப்பா...

‘மாத்தியா என்டலு..’ (ஐயா வரச்சொல்றார்)

சிந்தை கலைந்த சண்முகம் கிராம சேவகரின் மேசையருகில் வந்து பவ்வியமாக நின்றார். அந்த மேசையின் வலது புறத்தில் பல கோப்புக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடது புறத்தில் கறை படிந்த தொலைபேசி ஒன்று இருந்தது. ஆதி காலத்து மின்விசிறி ஒன்று தன் இறக்கைகளைப் பரத்தியவாறு லொடக் லொடக் என்ற சத்தத்துடன் சுற்றிக்கொண்டிருந்தது.

ஒரு கிளாசில் தண்ணீர் நிறைத்து அதை பீரிஸ் ஒன்றினால் மூடிவிட்டுச் சென்றான் அலுவலகப் பையன். கிராம சேவகர் மேற்சட்டையில் பட்டன்கள் இரண்டை கழற்றியவாறு காற்று வாங்கிக்கொண்டிருந்தார். அவரது கறுத்த உடம்பிலும், அடர்த்தியான மீசை அருகிலும் கொட்டி விடப்போகிறேன் என்பதுபோல வியர்வை பெருக்கெடுத்திருந்தது. தண்ணீரை குடித்துக்கொண்டு சண்முகத்தை ஏறிட்டு நோக்கினார் அவர்.

‘பெயர் என்னாதி?’

‘சண்முகம் சேர்’

‘உக்காருங். நீங்க எங்கருந்து வாறது?’

சண்முகம் தனது தோட்டத்தின் பெயரைச் சொன்னார்.

சற்று அதிர்ந்த அந்த கிராம சேவகர் சண்முகத்தை நிமிர்ந்து பார்த்தார். ஏனெனில் பல காலங்களாக இந்த பாதை பிரச்சனைப் பற்றி இவருக்கு முன்பிருந்த கிராம சேவகர்களிடமும் தெரிவித்தாகிவிட்டது. எனினும் இன்னமும் அதற்கான ஒரு தீர்வும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதை அறிந்திருப்பார் போலும். தொண்டையை செருமிக்கொண்டு அவரே பேசினார்.

‘ரோடு பிரச்சன பற்றியா பேச வந்ததி? அங்கு என்ன புரொப்ளம்?’

‘பாதைகளின் சீரின்மை காரணமாக பள்ளத்து வீடுகளில் இருக்கும் மக்களுக்கு பெரும் அசௌகரியமாக இருக்கிறது ஐயா. மழைக் காலங்களில் மண்சரிவு ஏற்பட்டு பல சேதங்கள் ஏற்படுகின்றன. பாதுகாப்புக்காக போடுவதாகச் சொல்லியிருந்த மதில்களையும் இன்னும் செய்து தரவில்லை. அந்த வேலைகளுக்காக அரசாங்கம் குறிப்பிட்டதொரு பணத்தொகையை ஒதுக்கியிருப்பதாகவும் அறிகிறோம். அந்த பணத்துக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை ஐயா. பலரிடம் கூறியும் இன்னும் எந்தத் திட்டமும் அமுலுக்கு வரல்லீங்க. நீங்களாவது நமக்கு இந்த உதவிய பண்ணிப்புடுங்க. புள்ளக் குட்டிங்களாட நீங்க கொறயில்லாம வாழணும்..’

‘ஓகே. நாங் பாக்குறன். கவலப்படாம போயிட்டு வாங்க’

இந்த சம்பாஷனைக்குப் பிறகு சண்முகம் மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டுக்கு வந்தார். நடந்த அனைத்தையும் ஊரார்களிடம் கூறி சந்தோஷப்பட்டார். தமக்கு விடிவு காலம் பிறக்கப் போவதாகக் கூறிக்கொண்டு திரிந்தார். அவர் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்டு ஊரே சந்தோஷப்பட்டது.

சண்முகத்துக்கு இவ்வாறான பொது வேலைகள் செய்வதில் அக்கறை அதிகம். தனது குடும்பத்தைப் போலவே அனைவரையும் நேசிப்பார். அவரது மனைவியான வேதவல்லியும் அப்படித்தான். அவரது சுக துக்கங்களிலும், ஆசாபாசங்களிலும் சம பங்கெடுத்துக்கொள்வாள். அவர்களின் இனிமையான இல்லற வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்க வந்து பிறந்தவன்தான் சுந்தர். சுந்தரின் மீது சண்முகத்துக்கு அலாதி பிரியம். எந்நேரமும் அவனைத் தூக்கி அணைத்தும், விளையாட்டு காட்டிக்கொண்டும் இருப்பார்.

பெரும்பாலான அப்பாக்களைப் போல் அல்லாமல் சுந்தரின் கழிவுகளையும் சுத்தப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு ராஜா போலவே சுந்தரை வளர்த்து வந்தார் சண்முகம். வேதவல்லிக்கும் சுந்தர் மீது பாசம் அதிகம் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சற்று கண்டிப்புடன் நடந்து கொள்வாள். காரணம் கேட்டால்

‘அது வந்துங்க... ரெம்ப பாசமா வளத்துப்புட்டா அப்பறம் பொறுப்பில்லாம போயிருவான் பையன். கொஞ்சம் அடக்கித்தான் வளர்க்கணும். இல்லாட்டி நம்ம தலையிலயே மொளகா அரச்சி புடுவானுங்க...’

வேதவல்லி சொன்ன தத்துவத்தைக் கேட்டு ஆமோதித்து புன்னகைத்தார் சண்முகம். ஆச்சியும் வேதவல்லியின் கருத்துக்களுக்கு செவி சாய்த்தாள்.

கிராம சேவகரிடம் பேசி விட்டு வந்த பிறகும் பல மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் எந்தப் பிரயோசனமும் நிகழாத காரணத்தால் நிலைமையை விசாரித்து வருவதற்காகத்தான் டவுனுக்கு புறப்பட்டுச் சென்றார் சண்முகம். நாழிகை பல கழிந்தும் அவர் இன்னும் வீட்டுக்கு வந்து சேரவில்லை. பதறிப்போன ஆச்சி பக்கத்து வீட்டு ராமசாமியை அழைத்து விடயத்தைச் சொன்னாள். உடனே அனைவரும் உஷாராகி சண்முகத்தை தேடினார்கள். எங்கு தேடியும் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

இருள் சூழ்ந்துவிட்டது. சண்முகத்தை காணவில்லை. ராமசாமி அடிக்கடி பாதையைப் பார்த்தார். ஆச்சியும், வேதவல்லியும் கையைப் பிசைந்து கொண்டிருந்தார்கள். ராமசாமிக்கும் அவனது மனைவிக்கும் மிகுந்த யோசனையாகவே இருந்தது.

கொஞ்ச நேரத்தில் பாதையின் அந்தப்பக்கத்திலிருந்து ஒரு உருவம் மிக வேகமாக ஓடி வருவது விளங்கியது. ஆச்சிக்கும் விளங்கியிருக்க வேண்டும். கண்களை சுருக்கிக்கொண்டே மிகவும் சிரமப்பட்டு லாம்பு வெளிச்சத்தில் உற்று உற்றுப் பார்த்தாள். ஓடி வந்தது சண்முகம் அல்ல. எனினும் வந்த சிறுவன் சொன்ன தகவல் சண்முகம் பற்றியது.

‘ஆச்சி ஒன் மவன் போன பஸ்சு எக்சிடன்ட் ஆயிடுச்சாம். டவுனாஸ்பத்திரியில அவர சேத்திருக்காங்களாம்...’

ஆச்சிக்கும், வேதவல்லிக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென்று ராமசாமிக்குத் தெரியவில்லை. பட்டப்பகலிலேயே அந்தப் பாதையில் போவது கஷ்டமான காரியம். இந்த இருட்டுக்குள் எப்படிப்போவது? அனைவரும் விடியும் வரை காத்திருந்தார்கள். மணித்தியாலங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. விடியற்காலையில் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

அங்கே சண்முகம் முனகலோடு படுத்திருந்தார். அவரது தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அவருக்கருகே அவரது மஞ்சள் நிற சட்டை இருந்தது. அந்த சட்டையில் இரத்தம் பட்டு அந்தி நேர வானம் போல காட்சியளித்தது. அப்பா.. என்றபடி சிறுவன் சுந்தர் அவர் கால்களைப் பிடித்தவன் அதிர்ந்தான். அங்கே அவரது கால்கள் நீக்கப்பட்டிருந்தன. ஆச்சி தன் பொக்கை வாய் திறந்து ஓவென கதறியழ வேதவல்லி மயக்கம் ஏற்பட்டு விழுந்தாள்.

‘யனவா அரபெத்தட்ட. லெடாட கரதர கரன்னெத்துவ...’ (நோயாளிக்கு கரைச்சல் கொடுக்காமல் போ அந்தப் பக்கம்) நர்ஸ் திட்டிக் கொண்டிருந்தாள். அந்த நர்ஸ் தன் கைகளில் வெள்ளை நிற கையுரை அணிந்திருந்தாள்.

சண்முகத்தின் தலையில் கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்தாள். திட்டுத்திட்டாக படிந்திருந்த இரத்தம் அவளது கையுரையிலும் அப்பியது. அருவருப்பாக பார்த்த நர்சின் பார்வை சுந்தரின் இதயத்தில் அனலாயிற்று. பாதைகளின் சீரின்மையால் ஏற்பட்ட இந்த பயங்கரமான விபத்தை எண்ண, அவனுக்கு அதிகாரிகள் மீது வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது.

சண்முகத்தின் கால்கள் அகற்றப்பட்டிருந்ததால் வேதவல்லி மிகவும் உடைந்து போயிருந்தாள். சில மாதங்கள் அந்த வீடே இழவு வீடு போல் காட்சியளித்தது. நாட்கள் நகர ஒருநாள் காலை பதினொரு மணியளவில் பலத்த பேய் மழை பெய்து கொண்டிருந்தது.

சண்முகத்தின் குடிசை கப்பலாக மாறி மழை நீரில் மிதந்து கொண்டிருந்தது. மழைக்கு முன் விறகு பொறுக்குவதற்காக மலைக்குச் சென்றிருந்த ஆச்சி, முனுசாமியின் வீட்டில் குளிரில் நடுங்கியவாறு மழை விடும் வரை காத்திருந்தாள். பாடசாலைக்கு சென்றிருந்த சுந்தரும் இன்னும் வீடு வந்திருக்கவில்லை.

அப்போது அவர்கள் யாருமே கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாதவாறு திமுதிமுவென இடம்பெயர்ந்து வந்த மற்குவியல்கள் சண்முகத்தின் குடிசையை கொஞ்சம் கொஞ்சமாக மூடிக்கொண்டிருந்தன. மழை காரணமாக எவரும் வெளியே வந்திருக்கவில்லை என்பதால் இந்த கோரமான காட்சியை யாரும் கவனிக்கவில்லை.

சோவென பெய்த மழை சத்தத்தில் வேதவல்லியின் அபாயக்குரல் யார் காதிலும் விழவில்லை. காலில்லாத கணவனை காப்பாற்ற முடியாமலும், சண்முகத்தை தனியே விட்டுவிட்டு தான் மட்டும் தப்பிச்செல்ல முடியாமலும் வேதவல்லி தவித்தாள். கல்லானாலும் கணவனல்லவா? சந்தோஷமாக வாழ்ந்த அந்தக் குடிசையிலேயே அவளும் சண்முகத்துடன் மூச்சடங்கி சமாதியாகிப் போனாள்.

***************

இந்த மழையின் தாக்குதலால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஓடிக்கொண்டிருந்த சிறிய ஓடைகளும் மூடப்பட்டுவிட்டன. அந்த லயத்தில் வாழ்ந்தவர்களுக்கு குடிநீர் பிரச்சனை தாங்க முடியாததாய் இருந்தது. சண்முகத்தைப் போலவே சுந்தரும் பல அதிகாரிகளை சந்தித்து தண்ணீர் பிரச்சனையைப் பற்றி கூறிவிட்டான். எல்லா விதமான பிரச்சனைகளும் அந்த லயத்தை மாறி மாறி வதைத்துக்கொண்டிருந்தன.

மூன்று நாட்களுக்கு ஒரு தடவை என்ற தவணை முறையில் கடந்த ஆறேழு வருடங்களாக நீர்த்தாங்கிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகின்றது. நீர்த்தாங்கிகள் வராமல் இருக்கும் நாட்களில் மக்கள் படும் அவஸ்தையை ஆச்சியாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

வாக்குறுதிகளை காற்றில் பறக்;கவிட்டு பத்திரிகையில் மட்டும் தண்ணீர் பிரச்சனைக்கான தீர்வு பற்றி பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த அந்த அதிகாரியைப் பார்த்து ஆச்சியின் வாய் கோபமாக முணுமுணுத்தது.

‘கட்டையில போவான்கள்... கள்ள நாயிகள்’!!!

Monday, July 18, 2011

உறவுகள் !



நளீம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு யோசித்தவாறு இருந்தான். அக்பர் சாச்சாவின் நிலைமையை எண்ணி அவனுக்குள் இனம்புரியாத ஒரு வலி இருந்தது. தன் தந்தையின் பேராசை காரணமாக சகோதரன் என்று கூட யோசிக்காமல் அக்பர் சாச்சாவின் குடும்பத்தாரை இந்தப் பெரிய வீட்டைவிட்டு வாப்பா துரத்தியது அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது மட்டுமாயிருந்தால் பரவாயில்லையே. இப்போது இருக்கும் சிறிய நிலப்பரப்பையும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்காக வேலிச் சண்டையை ஆரம்பித்திருக்கும் வாப்பா மீது கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டது.

ஆனால் அந்த காணித்துண்டை மகான் போல விட்டுக்கொடுத்தது நளீமின் வாப்பாவல்ல. அது அக்பர் சாச்சாவின் மனைவியின் சொத்து. அதிலாவது நிம்மதியாக இருக்கவிடாமல் சதாவும் அவர்களை நச்சரிப்பதும், இன்று காலை அவன் எதிர்பாராத விதமாக கண்ட காட்சியும் நளீமுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

பாவம் அக்பர் சாச்சா. மிகவும் நல்லவர். இரண்டு பெண் பிள்ளைகளுக்கும், ஒரு ஆண் பிள்ளைக்கும் தகப்பனான அவர் அந்த பெண் பிள்ளைகள் இருவரையும் திருமணம் செய்து கொடுப்பதற்காகவும், பாடசாலை செல்லும் தனது கடைசி மகனின் செலவுக்குமாக மிகவும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர். இன்றைய காலத்தில் விலைபோகும் சில மணமகன்களுக்கு ஆதனம் சீதனம் என்று கொடுக்க வேண்டுமல்லவா?

‘அல்லாஹ்வே அவரின் நிலைமையை இலகுவாக்க நீதான் அருள் புரிய வேண்டும்’ என்று மனதுக்குள் இறைஞ்சிக் கொண்டான் நளீம்.

***************

நளீமின் வாப்பாவான உஸ்மான் ஹாஜி ஊருக்கு செலவழிப்பதாக காட்டிக்கொள்பவர். பெரிய பள்ளிக்கு கொழும்பிலிருந்து ஜமாத் வந்தால் பெருமைக்காக சாப்பாடு கொடுப்பார். ஆனால் ஏழைகள் யாராவது கேட்டுப்போனால் அவர், அவர்களை விட ஏழையாகி விடுவார். இந்த மாதிரி குணமுடைய உஸ்மான் ஹாஜி பலமுறை ஹஜ்ஜூக்கும், உம்ராவுக்கும் போய் வந்தவர். ஆனால் அந்தப் பயணமானது தன் வியாபார விடயங்களை முக்கியப்படுத்திக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். இப்போதைக்கே டவுனில் ஐந்து கடைகளுக்கு சொந்தக்காரர். காசு, சொத்து என்று அவருக்கு அல்லாஹ் நிறைய அபிவிருத்தி செய்திருக்கிறான். ஆனால் இல்லாதவர்களுக்கு தர்மம் செய்யும் மனப்பான்மை அவருக்கு பிறவியிலிருந்தே இல்லாத பழக்கமாக இருந்தது. பேர் புகழுக்காக அள்ளிக்கொடுப்பவர். உண்மையான ஏழைகளுக்கு கிள்ளியும் கொடுக்கமாட்டார். அதாவது ஷநான் எனக்கு எனது| என்ற தன்னிலைக் கொள்கையுடடையவர் உஸ்மான  ஹாஜி.

அவர் தனது பிள்ளைகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை. உம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்து வைக்குமுகமாக அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

தற்போது கூட தனது மூன்றாவது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் யோசனையில் இருக்கும் அவர் தனது வியாபார விடயங்களில் இன்னும் மும்முரமாக இருக்கிறார். ஏனெனில் தன் இரண்டு மருமகன்மாரை விட இப்போது வரப்போகும் மருமகனுக்கு அதிகமாக சீதனம் கொடுக்க வேண்டும். இவ்வாறான திருமணங்களை தன் சகோதரிகளுக்கு செய்து கொடுப்பதில் நளீமுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. எனினும் என்ன செய்ய? வாப்பாவைப் போலவே தாங்களும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சகோதரிகளை என்ன செய்யலாம்?

உம்மா இருந்தாலாவது நல்ல விடயங்களை சொல்லிக் கொடுத்திருப்பார். ஆனால் அல்லாஹ்வின் நாட்டத்தை யாரால் மாற்ற முடியும். உம்மா மௌத்தாகி இன்றைக்கு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதே என்று எண்ணி தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வான்.

சீதனமின்றி ஒரு ஏழைப் பிள்ளையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற நற்குணமுடையவன்; நளீம். நளீமின் உம்மா கூட அவ்வாறே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வாப்பாவான உஸ்மான் ஹாஜிக்கு அதில் ஒரு துளி கூட இஷ்டமில்லை. தன் பணக்கார நண்பர் ஒருவரின் மகளுக்கே கொழுத்த சீதனத்துடன் நளீமை திருமணம் செய்து கொடுப்பது என்ற வைராக்கியத்தில் அவர் இருந்தார்.

நளீம் சில பொழுதுகளில் சாச்சாவின் வீட்டுக்குப் போவதுண்டு. அந்த சந்தர்ப்பங்களில் சாச்சா மிகவும் பயந்து போய்விடுவார். தன் நானாவின் குணமறிந்தபடியால் நளீமுக்கு ஏதும் ஏசி விடுவாரோ என்று யோசித்துக்கொண்டிருப்பார். ஆனால் அவர்கள் அனைவரும்; நளீமின் வருகையால் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

தன்னையும் சொந்தமகன் போல அவர்கள் எண்ணுவது நளீமுக்கு மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அவனும் அங்கு போகின்ற சந்தர்ப்பங்களின் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களை கொண்டு செல்வான். பாடசாலைபோகும் சாச்சாவின் சின்ன மகனுக்கும், சகோதரிகளுக்கும் தன்னால் முடிந்தளவு தொகை காசு கொடுத்துவிட்டு வருவான். ஒரு சகோதரனாக அனைத்தையும் தானே செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டவன் நளீம் என்பது அவர்களுக்கும் தெரியும். வஞ்சகமில்லாத அவனை நினைத்து அவனின் சுகவாழ்வுக்காய் சதாவும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்.

ஆனால் அவர்களை அடிக்கடி போய் பார்த்துக்கொள்ள முடியாமல் இருந்தான் நளீம். ஏனெனில் தான் அங்கு போவது தன் சகோதரிகள் அறிந்து விட்டால் வாப்பாவிடம் கூறி விடுவார்கள். இனி அந்த நாள் முழுவதும் வாப்பாவின் ஷபோதனை| தொடர்ந்த வண்ணமிருக்கும். நல்லெண்ணம் கொள்ளும்போது என் வாப்பா ஏன் இப்படி முட்டுக் கட்டையாக இருக்கிறார் என்று கவலை வரும். அதை விட தன்னைப் புரிந்து கொள்ளாமல் நடக்கும் தன் சகோதரிகள் மீதும் கவலையாக இருக்கும். எனினும் தன் சகோதரிகளுக்கும் வாப்பாவுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும் என்று ஐவேளையும் தொழும்போது பிரார்த்தித்துக் கொள்வான் நளீம்.

***************

இன்று ஒரு விடயமாக வங்கிக்கு சென்றிருந்தான் நளீம். அவன் வந்ததை அறியாத அக்பர் சாச்சா வங்கி முகாமையாளரிடம் பேசுவது இவனுக்கு தெளிவாக விளங்கியது.

‘சேர். நாங்கள் இப்போது இருக்கும் வீட்டை வித்திட்டு வேறு ஊரு பக்கமா போக முடிவெடுத்தீக்கிறோம். அதோடு கூட்டாளியின் மகனொருவன் மூத்த மகள நிக்காஹ் செய்ய விரும்பியிருக்கிறான். சீதனம் அது இது என்று ஒன்றும் கேக்கல்ல. என்ட கொமரு புள்ளயளோடு இதுக்குள்ள இருந்துக்கிட்டு நானாவோட வாக்குவாதப்படுறதும் சரில்ல தானே? அதுகளுக்கும் ஒரு வாழ்க்கைய அமைச்சிக் கொடுத்தமென்டா அதுக்குப் பொறவு அல்லாஹ்ட காவலா நாம இருந்திடுவோம் தொரே’
‘ஓகே. மிஸ்டர் அக்பர். நான் உங்களுக்கு என்ன செய்யணும்?’

‘சேர் எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கடனாக வேணும். எப்படியாவது நான் அதை சம்பாரித்து தந்திடுவேன். தயவு பண்ணுங்க சேர்!’

‘ஓம் மிஸ்டர் அக்பர். அதற்கான வசதியை செய்திடலாம். ஆனால் வங்கிக்கென்று சில சட்டதிட்டங்கள் இருக்கு. ஆகக்குறைந்தது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆதனமொன்றின் உறுதிப் பத்திரத்தை நீங்க வங்கிக்கு சமர்ப்பிக்கணும். அப்படி செஞ்சிட்டீங்க என்டால் அந்த டொக்கியூமன்ட பார்த்திட்டு கடன் வசதிய செஞ்சி தரலாம்’

‘என்னா சேர்! அந்தளவு சல்லி ஈக்கியதென்டால் நான் எதுக்கு இங்க வருவன்? முடிஞ்ச வரைக்கும் பாருங்க. ப்ளீஸ்’

‘இதோ பாருங்க. வங்கி என்பது தனிநபரோட விருப்பத்துக்கு செயல்படுற நிறுவனமில்ல. முடிஞ்சா சொன்னத செய்ங்க. இல்லன்னா ஐ அம் வெரி ஸொரி’

‘சேர் ப்ளீஸ்...’

‘நோ நோ. யூ கென் கோ’

***************

இந்த சம்பவம்தான் நெருஞ்சி முள்ளாய் நளீமின் மனதை குடைந்து கொண்டிருந்தது. ச்சீ! நம்மிடம் இவ்வளவு வசதியிருந்தும் குறிப்பிட்டதொரு தொகையை கொடுக்க முடியாமல் இருக்கே. ஷகரண்ட் எக்கவுண்ட்| இருப்பதால் காசு எடுப்பதற்காக காசோலையில் வாப்பாவும் ஒப்பமிட வேண்டுமே. இது நடக்கிற காரியமா? நான் மட்டும் தான் காசோலையில் ஒப்பமிட வேண்டும் என்றால் ஒரு பிரச்சனையுமில்லையே. எப்படி இதை சாத்தியப்படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தான்.

கொடுக்க வேண்டும் என்று உண்மையான மனசிருந்தும் நளீமுக்கு கொடுக்க முடியாத நிலை. எந்த கணக்கு வழக்கு என்றாலும் ஷகரண்ட் எக்கவுண்ட்| இருக்கும் காரணத்தினால் வாப்பாவுடன் கலந்தாலோசிக்காமல் அவனுக்கு முடிவெடுக்க முடியாது. அவன் தன் நண்பர்களிடமாவது கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நளீமின்; கைத்தொலைபேசி அலறியது.
‘ஹலோ. சொல்லுங்க தாத்தா’

‘தம்பி எங்கயிருக்கீங்க? சீக்கிரம் வாங்க. ஹொஸ்பிட்டலால கோல் வந்திச்சி. வாப்பா எக்ஸிடன்ட்பட்டு இருக்காங்களாம்’

‘என்ன தாத்தா. என்ன சொல்றீங்க? இதோ வந்துடுறேன்’ என்றவனாக பதற்றத்துடன் பாதையில் வேகமாக நடந்து கொண்டிருந்த போது சாச்சா எதிரில் தலைப்பட்டார்.

‘என்ன ராஜா. முகமெல்லாம் ஒரு மாதிரி கிடக்கு. சாப்பிட்டீங்களா? என்ன மவன் கண் கலங்கியிருக்கு. வாப்பா ஏதாச்சும் ஏசிட்டாங்களா?’ என்று அன்பொழுக விசாரித்தார்.

‘இல்ல சாச்சா. வாப்பா எக்ஸிடன்ட் ஆகிட்டாராம். தாத்தா இப்போ தான் கோல் பண்ணினாங்க. சாச்சா எனக்கு பயமாயிருக்கு’

‘யோசிக்க வேணாம் அல்லாஹ் இருக்கான் மகன். வாங்க உடனே வீட்டுக்கு போவம்’

இருவரும் அவசர அவசரமாக நடந்து நளீமின் வீட்டை அடைந்தார்கள். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க சாச்சா தயங்கியபடி இருந்தார். அதையெல்லாம் கவனிக்க நளீமுக்கு நேரமிருக்கவில்லை. வீட்டார்கள் அனைவரும் ஹொஸ்பிட்டலுக்கு சென்றிருப்பதாக பக்கத்துவீட்டு ஆதம் காக்கா சொன்னார். உடனே இருவரும் ஹொஸ்பிட்டலுக்கு விரைந்தார்கள். நளீமின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை படிந்திருந்தது. அவனது உதடுகள் அல்லாஹ்விடம் எதையோ மன்றாடிக் கேட்டுக்கொண்டே இருந்தன.

அங்கு ஹொஸ்பிட்டலில் சேலை நுனியால் வாயை பொத்தியவாறு அழுது கொண்டிருந்தார் தாத்தா. மற்ற தாத்தா இருவரும் மச்சான்மாரும் உடனே அங்கு வந்திருந்தார்கள். அது நளீமுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. டாக்டரிடம் சென்று விசாரித்த போது வாப்பாவுக்கு நிறைய இரத்தம் வீணாகியிருப்பதால் இரண்டு பைந்து இரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்.

மச்சான்மாரும் தமக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். நளீமுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் ஒரு ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த அக்பர் சாச்சா நளீமிடம்,

‘மவன். கொஞ்சம் வாங்களன். இதோ பாருங்க மவன். நான் அதிகம் படிச்சவனில்ல. ரத்தம் ஏத்தணும் என்டா ஏதோ ஏ குரூப், பீ குரூப் என்று இருக்காமே. எனக்கு அதெல்லாம் தெரியாது வாப்பா. என்ட ரத்தம் பொருந்துதா என்டு டொக்டர பாக்கச் சொல்லுங்க. சரி என்றால் ஒன்டுக்கும் யோசிக்க வேணாம் மவன்’

நளீமுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. புரிந்து கொள்ள அவகாசமுமில்லை. டாக்டரை அணுகி விசயத்தை சொன்னான். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு டாக்டர் நர்ஸ் இடம் ஏவினார். இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. டாக்டரின் முகத்தில் சந்தோஷத்தின் சாயல்கள்.

‘மிஸ்டர் நளீம். யு ஆர் லக்கி. இரத்தம் பொருந்திடுச்சி. மிஸ்டர் அக்பரை அழைத்து வாங்க’

அனைவருக்கும் ஆச்சரியமும் சந்தோசமுமாக இருந்தது. இரத்தம் ஏற்றி சுமார் நான்கு மணிநேரத்தில் உஸ்மான் ஹாஜியார் கண் விழித்தார். அவர் நா தழுதழுக்க டாக்டரை நோக்கி நன்றி சொல்ல முனைந்தார்

‘இல்ல ஹாஜியார். அல்லாஹ்ட காவலா நீங்க இப்போ இப்படியிருக்கக் காரணம் ஒரு ஏழை மனிதர் தான். உங்கள் மகன் இவரை அழைத்து வராவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே கஷ்டமா இருக்கு. இறைவனின் நாட்டத்தால் அவரின் இரத்தம் உங்களுக்கு பொருந்திருச்சி’ என்று அக்பரை காட்டினார் டாக்டர். கண்ணீர் ததும்பிய கண்களினூடே தன் தம்பி அக்பர் தயங்கியவராக அங்கிருப்பதை கண்டதும் ஹாஜியாருக்கு நெஞ்சு வெடித்து விடும்போல இருந்தது.

தான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். இந்த ஏழை மனிதர் ‘எங்கள் அக்பர் சாச்சா’ என்று பிள்ளைகள் டாக்டரிடம் சொல்லாத அளவுக்கு நான் அக்பரை எவ்வளவு தூரம் ஒதுக்கி வைத்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக! என்று எண்ணியவாறு தன் சகோதரனை அழைத்தார். அக்பர் உஸ்மான் ஹாஜியாரின் அருகில் வந்து தலைகுனிந்து நின்றபோது உஸ்மான் ஹாஜி அவரை அழைத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

அந்த அணைப்பில் அவர் ஆயிரம் சந்தோசம் கண்டார். இருவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். தம்பி.. தம்பி என்று உஸ்மான் ஹாஜி; அழுகையூடே உச்சரித்தார். அதைக்கேட்ட டாக்டரும் முதலில் அதிசயித்து, பின் விடயத்தை நிதானித்தவராக அறையை விட்டு மகிழ்வுடன் வெளியேறினார்.

விடயம் கேள்விப்பட்டு அக்பர் சாச்சாவின் மனைவி பிள்ளைகளும் அங்கு வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் சகோதரர்கள் இருவரும் இப்படி அன்பாயிருப்பது கண்டு மிகவும் சந்தோஷப்பட்டனர்.

நளீமின் சகோதரிகளும் சாச்சாவின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுடன் ஒன்றித்தார்கள். தங்கள் குடும்பம் ஒன்று சேர்வதற்காய் தூய மனம் கொண்டு நளீம் செய்த பிரார்த்தனைகளை அந்த வல்ல அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான்!!!

வரம் !


வரம்



கால்களை நீட்டி சோபாவில் சாய்ந்திருந்தார் சுபா டீச்சர். அவரது சிந்தனைகள் யாவும் பத்து வருஷம் பின்னோக்கியதாய் இருந்தது. அவர் ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றும் பத்து வருஷங்களாகின்றன. தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தார். இந்த தவிப்பிற்குக் காரணம் வைஷ்னவி. அவள் படிப்பில் கெட்டிக்காரி. அவளது பரீட்சைப் புள்ளிகள் பல தடவை சுபாவை குளிர்வித்திருக்கின்றன. வைஷியை உதாரணம் காட்டி எத்தனை பிள்ளைகளை ஊக்குவித்திருப்பார் சுபா டீச்சர்?

சுபா டீச்சர் வங்கிக்குச் சென்றிருந்தார். கியூவில் வருமாறு இருந்த அறிவித்தல் எரிச்சலைத் தந்தது. அதன் பிரதிபலிப்பாக அங்குமிங்கும் பார்த்தவருக்கு அந்த ஜன்னலினூடாக அங்கிருந்த வைஷி தென்பட்டாள். முதலில் யாரென்று அனுமானிக்க முடியாமல் குழம்பினாலும் தீவிரமாக யோசித்ததில் ஆசிரிய மூளை சட்டென்று இனம் கண்டு கொண்டது. சந்தோஷப்பட முடியவில்லை. ஏனெனில் பாடசாலைப் பருவத்தில் துருதுரு என்று இருந்த வைஷி தற்போது களையே இல்லாமல் கறுத்து சிறுத்து இருந்தாள். அதையும் விட பல்கலைக்கழகம் போக வேண்டும் என்ற அவளது சதா பிரார்த்திப்பு?

‘என்ன டீச்சர். பெல் அடிச்சி பத்து நிமிஷம் ஆயிட்டுது’ - வகுப்புத் தலைவியாயில்லாத போதும் வைஷி வந்து கூப்பிட்டாள். பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராயிருந்த சுபா டீச்சருக்கு அளவில்லா ஆனந்தம்.

‘படிப்பில் எத்தனை ஆர்வம் இந்தப் பிள்ளைக்கு? கட்டாயம் நல்ல நிலைக்கு வருவா’

மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார் டீச்சர். ஆசிரியர்களின் பிரார்த்தனை தட்டுப்படுவதில்லையே? இப்போதும் கூட நல்ல ஸ்தானத்திலிருந்து கடமை புரிகிறாள். எனினும் சுபா டீச்சருக்குத்தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியவில்லை.

அவர் அப்படி கியூவில் நின்ற போது வைஷியும் அவரைக் கண்டிருக்க வேண்டும். பியூன் வந்து உள்ளே வருமாறு கூற சுபா ஆச்சரியமடைந்து பின் நிதானித்து உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் வைஷி எழுந்து நிற்க
‘பண்பாடு மாறாத பிள்ளை. இப்போதும் என்ன கண்டு எழுந்து நிண்டிட்டுது’ - வாழ்த்தினார் டீச்சர்.

அவர் வந்த காரணத்தைக் கேட்டு உடனே செய்து கொடுத்ததுடன் அவரது முகவரியையும் வாங்கி தனக்கு லீவு கிடைக்கும் போது வந்து போவதாகவும் கூறினாள். நன்றியுடன் விடைபெற்று வந்த டீச்சரை குறை கூறியவர்களாக கியூவில் இருந்தவர்கள் முணுமுணுத்தார்கள்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைஷி, சுபா வீட்டுக்கு வந்தாள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சுபாவின் வாழ்க்கை, கணவன், பிள்ளைகள் பற்றி வினவினாள். எதிர்பாராத இக்கேள்வியினால் திக்குமுக்காடிப் போனார் சுபா டீச்சர். அவரது முகமாற்றம் வைஷியின் மனதை என்னவோ செய்தது. செய்யக்கூடாத பெரிய தப்பை செய்து விட்டதாக கருதி தடுமாறினாள். அதை உணர்ந்த சுபா

‘அவர்கள் யாரும் எனக்கில்லைம்மா’ என்றார்.

இந்த ஒற்றை பதிலில் அதிர்ந்த வைஷி

‘ஏன் எல்லோரும் எங்கே? வெளியூரிலா அல்லது நாடிருந்த நிலையில் யுத்தத்துக்கு இரையாகி...’

இதைக் கேட்க நினைத்தாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். சற்று நேரத்தின் பின் வைஷி பற்றி ஆராய்ந்த போது அவள் பாதாளம் நோக்கிப் போவதை உணர்ந்து கொண்டார் டீச்சர். அது பாதாளமா? பூபாளமா? யாருக்குத் தெரியும்?

‘நீ இன்னமும் அவனைக் காதலிக்கிறியா?’

‘இ.. இல்லை டீச்சர்’ - உண்மையாகவே பொய்யைச் சொன்னாள் வைஷி.

ராகுலின் அப்பா வைஷியின் ஏழ்மை காரணமாகவே அவளை எதிர்ப்பதாக அறிந்த போது கோபம் தலை உச்சியில் ஏறியது சுபா டீச்சருக்கு. ராகுலின் அப்பாவுடன் தான் பேசுவதாக வைஷியை தைரியப்படுத்தினார்.

வைஷியின் காதலாவது வாழட்டுமே?
சுபாவின் காதல்தான் பட்டமரமாய் போயிற்று. அதை வைஷியிடம் வெளிப்படையாக கூற முடியுமா? குரு சிஷ்ய உறவுக்கு பாதிப்பு என்பதை விட சுபாவுக்கு ஒரு மகளிருந்தால் ஏறக்குறைய வைஷியின் வயது இருந்திருக்கும். அப்படியென்றால் மகளிடமே தன் காதல் தோல்வியை கூறுவது போல் ஆகிவிடாதா? அது அநாகரிகம் அல்லவா? வைஷி நாவலொன்றை பார்த்திருக்க, சுபா டீச்சர் இளமைக்கால நினைவுகளை மீட்டிக்கொண்டிருந்தார்.

***************

‘சுபா என்னைப் பாரேன் ப்ளீஸ்’

‘......................’

‘சொல்றத புரிஞ்சிக்க. உன்ன கலியாணம் செஞ்சா சீதனம் தர மாட்டியள் என்டு அப்பா சொல்றவர். மலேசியாவில் இருக்கும் அப்பாவின் நண்பரின் மகளை யோசிக்கினம். அதனால..’

‘அதனால...’

அவர் குனிந்த தலை நிமிரவில்லை. அவரைப் பிடித்து உலுக்கிக் கேட்டதில் இனி அவர் தனக்கு சொந்தமில்லை என்பதை சுபா புரிந்து கொண்டாள். இறைவா! கனவில் அவருடன் வாழ்ந்து, பிள்ளைக் குட்டிகள் பெற்று.. ஒரே வார்த்தையில் வாழ்க்கையைச் சீரழித்துவிட்டாரே? காதலிக்கும் போது பெற்றோரைக் கேட்கிறார்களா? குதிரைக்கு பசித்தால் வைக்கோலையும் திண்ணும் என்பது எவ்வளவு நிதர்சனம். எந்த கஷ்ட நஷ்டம் வந்தாலும் பசித்தாலும் புல் திண்ணாத புலி போல் மனம் மாறமாட்டார் என்றல்லவா சுபா ஆழமாக நம்பியிருந்தாள்? அதே நிலைதானா வைஷ்ணவிக்கும்?

***************

சத்தியமாக வைஷி நாவலை படித்துக் கொண்டிருக்கவில்லை. அவளது கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. பாவம் அவளின் ஏழை பெற்றோர். வறுமை காரணமாக ராகுலின் அப்பாவிடம் பேசவே தயங்கினார்கள். டீச்சர் ராகுலின் வீட்டாரிடம் சென்று தனக்காக பரிந்து பேசுவதை வைஷி விரும்பவில்லை. அழகு, குணம், மார்க்கம் இருந்து என்ன பயன்? பணத்துக்கு முன் அவை எல்லாமே மண்டியிட்டு காணாமல் போகின்றனவே? அவற்றைக் கண்டு வைஷியினதோ, ராகுலினதோ காதல் நெஞ்சங்கள் மசியவில்லை. அவனும் தன் அப்பாவுடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டுதான் இருந்தான். அவர்கள் தம் காதல் கைகூடாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளவும் தயங்கமாட்டார்களோ? அப்படியென்றால் இத்தனை வருடங்களாக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டுவிட்டு ஓடுமளவுக்கு வலிமையைத் தந்தது எது? காதல் புனிதமானதா? தீய சக்தியா? உண்மையாக காதலிக்கும் அனைவரும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கு வைஷியும் முகம் கொடுத்திருந்தாள்.

***************

சுபா டீச்சர் கதவைத் தட்டினார். இருபததேழு வயது மதிக்கத்தக்க ஒரு அழகான வாலிபன் கதவைத் திறந்து பார்த்து புருவத்தை சுருக்கினான். அவனைப் பார்த்த டீச்சருக்கு முள்ளுக்குத்தியது போல் இருந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?

அப்போது ‘ராகுல் ஹூ இஸ் தெயார்?’ (ராகுல் யாரங்கே?) என்று கம்பீரமாக ஒலித்த குரல் டீச்சரை தடுமாறச் செய்தது. அந்த உருவம் அவர்களை நெருங்க நெருங்க டீச்சரின் மனமும் மூளையும் ஒருமித்தே விளித்துக்கொண்டன.

அடக்கடவுளே! பால் வாங்க பாம்பிடமா வந்திருக்கிறேன்? சுடர்விட்டு எரிந்த டீச்சரின் நம்பிக்கைத்தீ ராகுலின் தந்தையைப் பார்த்ததும் அணைந்தே போயிற்று. இருக்காதா பின்னே? அவன் அப்பன் ராகுலையும் மாற்றிவிட்டால்? இதோ இந்த ராகுலை எங்கும் பார்க்கவில்லை. இதோ இவரில்தான். மனசு ஓலமிட்டு அலறியது. அவரும் டீச்சரை அடையாளம் கண்டு கொள்ளாதிருப்பாரா? வந்த வேகம் குறைந்து பணிந்துபோய் இல்லையில்லை கூனிக்குறுகிப்போய் நின்றிருந்தார்.

ராகுலுக்கு சுபா டீச்சரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால்

‘டாடி இவங்களைத் தெரியுமா’ என்றான்.

‘இல்.. ஓம்.. இல்லை..’ தடுமாறினார் ராகுலின் தந்தை.

‘தெரியாதுப்பா. ஆனா உன்னப்பத்தி பேசத்தான் வந்திருக்கேன்’ என்றார் ராகுலிடம் டீச்சர்.

நாக்கு மேலண்ணத்தில் ஒட்ட கதிரையில் சாய்ந்து மௌனம் காத்தார் ஐங்கரன்.

ஐங்கரன்! சுபாவின் காதலர், இன்னொரு முறையில் சொன்னால் இப்போது ராகுலின் அப்பா.

எதை எப்படி சொல்வது என தவித்து, பின் நிதானித்து வைஷியைப் பற்றி கூறி முடித்தபோது ராகுல் மொத்தமாய் உடைந்திருந்தான். சுபா தன் மகளுக்கு ராகுலைக் கேட்டு வந்திருக்கிறாளா என்று நினைத்தாரோ என்னவோ 'செய்திடலாம்' என்றார் ஐங்கரன்.

அப்பாடா. வந்த காரியம் இனிமையாக முடிந்ததே. கண்மூடி இறைவனுக்கு நன்றி கூறினார் டீச்சர்.

திருமணத்தன்று..

‘அம்மா! இவங்க தான் எங்கள் விஞ்ஞான பாட டீச்சர்’ என்று வைஷி தன் ஏழைத் தாயிடம் கூறிக் கொள்ள அவள் சுபா டீச்சரைப் பார்த்து கைகூப்பினாள். அவளது விழிகளில் எத்தனை நன்றிப் பெருக்கும், சந்தோஷமும்.

இக்காட்சியைக் கண்ட ஐங்கரனுக்கு கண்ணைக்கட்டி நடுக்காட்டில் விட்டது போல் இருந்தது.

‘இவள்.. இவள் சுபாவின் மகளில்லையா? ஐயோ வைஷி தன் மகள் என்று சுபா என்னிடம் கூறவில்லைதானே? நான் எப்படி கற்பனை பண்ணி... சுபாவைக் கண்டதும் ஏற்பட்ட தடுமாற்றத்தில் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டேனா?’ - தவித்த ஐங்கரன் சுபாவை அழைத்து விபரம் கேட்டார்.

‘உங்களைத் தவிர வேறொருத்தன என்னால் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியல்லீங்க. நான் இன்னமும் கல்யாணமே பண்ணிக்கல. வைஷி என் பொண்ணுன்னு உங்ககிட்ட சொன்னேனா? இல்லையே. நல்ல குணமான மருமகப் பொண்ணு கிடைச்சிருக்கா. பயம் வேணாம். ராகுலை சந்தோஷமா வச்சிக்குவா. ஐயோ கெட்டிமேளம் சொல்றாங்க. வாங்க போகலாம்’

சுபா நகர அப்படியே சுவரில் சாய்ந்துவிட்டார் ஐங்கரன்.

அங்கே வைஷியின் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டிருந்தான் ராகுல்!!!