Thursday, June 24, 2010

தொலைந்த கவிதை !


நிஸ்தார் நானா கேற்றை திறந்து வெளியே வந்து பார்த்தார். எறும்புக்கூட்டங்களாய் வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன. இந்த நிமிடத்தில் அவசரமாக பாதையைக் கடக்க வேண்டும் என்றால் உயிரை விட வேண்டியிருக்கும்.

‘என்ன யோசிக்கிறீங்க... வாங்க சாப்பிடலாம்’

சொல்லிக் கொண்டு வந்த மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்.

‘புள்ளையள் ரெண்டு பேரும் டியூஷன் போயிட்டாங்களா?’

‘ஆமா. சாப்பாடு கொடுத்து அனுப்பிட்டேன். வாங்க நாம சாப்பிடலாம்’ என்று கூற அவரும் வீட்டுக்குள் வந்தார்.

அவருக்கு முப்பத்தியிரண்டு வயதிருக்கும். என்றாலும் இருபத்தியாறு வயது போலத் தோற்றம். காது மடலருகே எட்டிப் பார்க்கும் வெள்ளை முடியை பின்புறமாக சீவிவிட்டால் வாலிபன்தான் நிஸ்தார் நானா. மனைவி ரயீஸா மட்டும் என்னவாம்? இரட்டைக் குழந்தைகளின் தாயார் என்றால் யாருமே நம்பமாட்டார்கள்? இயற்கை இவர்களிடம் அதீத பாசம் கொண்டு இளமையை வாரி வழங்கியிருந்தது.

நிஸ்தார் நானா ஆசிரியர் நியமனம் பெற்று எட்டு வருடங்களிருக்கும். அவரது ஆசிரிய வாழ்வில் அடி, தண்டிப்பு, கோபம் என்றெல்லாம் மாணவர்களிடம் வெளிக்காட்டியதேயில்லை. அன்பும் பாசமும்தான் ஒருவனை நல்லவனாக்கும் என்று எப்போதோ அனுபவம் மூலம் அறிந்தவர். உயர்வகுப்பு மாணவர்களுக்கெல்லாம் இவர் தான் நல்ல நண்பர். மனசு விட்டுப்பேசி மாணவர்களின் குறை நிறைகளை அறிந்து உதவுவார். அவர்களுடனிருக்கும் போது தன் இளமை நினைவுகளில் மூழ்கிப்போவார்.

‘என்ன சேர் அந்தக்கால யோசினை வந்திட்டா?’ குறும்புக்கார மாணவன் கேட்டான்.

‘ஓமோம். ரோமியோ ஜுலியட் காலம். போய் திருக்குறள் பாடமாக்கு. நாளைக்கு பரீட்சை’

என ஆதரவாக கூறி அனுப்பினார். அவன் கேட்டதும் சரி தானே? எவ்வளவு வசந்தமான காலங்கள் அவை?

***************

ஆசிரிய பயிற்சிக் கலாசாலை. அங்குதானே அவருக்கு மறக்க முடியாத காலம். மேல்வகுப்பு மாணவர்;கள் எல்லாம் இவரை பாடச்சொல்லி அதட்டினார்களே?

‘பகிடிவதை’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் இப்படியுமா? பாடசாலைக் காலத்தில் எந்தவித வம்புதும்புக்கும் போகாதவர் இவர்களிடம் மிரண்டு போனார்.

‘நானா எனக்கு பாட வராதே’

‘என்னடா பாக்குற பாடுன்னு சொல்றேனில்ல..’ மீண்டும் அதட்டல்கள்.

‘பாடவா ஓஓர் பாஆஆடலை...’ குரல் நடுங்கியது நிஸ்தார் நானாவுக்கு.

மேல் வகுப்பு மாணவர்கள் எல்லாம் குடல் வெளியே தெரியுமளவுக்கு சிரித்தார்கள். பாடலை நிறுத்தச் சொல்லி, நிறுத்தியதற்காக பாராட்டினார்கள். பின்பு அவர்கள் அனைவரும் நண்பர்களாகி வாழ்க்கையை அனுபவித்ததெல்லாம் மனசில் பதிந்த இனிய நினைவுகள் அல்லவா?

‘டேய் மச்சான் சூப்பர் ஃபிகர்டா| வா போய் பார்க்கலாம்’

மேல் வகுப்பு மாணவன் கூப்பிட்டும் பேகாவிட்டால் என்ன நடக்கும் என்று முழு பல்கலைக்கழக வளாகமும் அறியும். குட்டி போட்ட பூனை போல நிஸ்தார் நானாவும் சென்றார். போய் அந்தப் பெண்ணைப் பார்த்தவர்...

***************

பாடசாலை விடுவதற்காக மணி ஒலித்தது. தன் மோட்டார் சைக்கிளின் உதவியுடன் அரை மணி நேரத்துக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தார். சாப்பிட்டுவிட்டு வந்தவருக்கு மனைவி நீட்டிய பானத்தில் பார்வை நிலை குத்தியது. அதனூடே மீண்டும் அந்தப் பெண் அவரது புலன்களுடே வந்து சலனமூட்டினாள்.

அப்படித்தான். ஒருநாள் சிற்றுண்டிச்சாலைக்கு நுழைந்து தொண்டைவரை சாப்பிட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு குரல்..

‘அங்கிள் தோடம்பழச்சாறு ஒன்னு ப்ளீஸ்..’

திரும்பியவருக்கு வியப்பு. என்ன அழகான குரல். பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் அவரை நோக்கி நெருங்கிக்கொண்டு வந்தாள். பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா எனப்பார்த்தார். இல்லை. அவருக்கு மின்னலடித்தது. அவர் கைகளில் தோடம்பழச்சாறை தந்துவிட்டுப் போனாள். அடுத்த நாள் காலை சற்று லேட்டாகி எழுந்தவர் தனக்குத்தானே ‘கனவு முழுவதும் கன்னியவள் வருகை’ என்றார்.

***************

‘கனவு முழுவதும் கன்னியவள் வருகை’

அட கவிதை கூட வருமோ, கண்களை சிமிட்டிய படி ரயீஸா வர, வெலவெலத்துப் போனார் நிஸ்தார் நானா.

‘காப்பி பொடி தீர்ந்துடிச்சி. வாங்கிக்கிட்டு, நூலகத்தில புள்ளயள் நிப்பாங்க. அழச்சிக்கிட்டு வந்துடுங்க’

நூலகம்!

அது கூட நெஞ்சிலிருந்து அகலவில்லை. எதை மறக்க நினைக்கிறோமோ அது தான் அடிக்கடி நினைவில் வந்து போகும் என்று எங்கோ வாசித்த வரிகள் அவருக்கு ஞாபகம் வந்தது. எத்தனை முறை அவளிடம் பேசவென்று முயற்சித்திருப்பார். ஒரு பார்வை.. ஒரு புன்னகை.. இதையே பார்த்து எவ்வளவு நாள் சீவிப்பது?

ஆனால் நான்கு மாதங்கள் கழிந்து ஒரு கலைவிழாவின் போதே மனம் திறந்து ஒரு வார்த்தை பேசக்கிடைத்தது. நாளிரா கவிதை சொல்வதற்காக மேடை ஏறியபோது பலத்த கரகோஷம். கவிதையே கவிதை சொல்கிறதா? என்று வியந்தார். அதை சாட்டாக வைத்து பாராட்டினார். அவளும் சிரித்தாள்.

நாளிராவுடனான அவரது பார்வை மற்ற ஆண்களிலிருந்தும் வித்தியாசப்படுவதை உணர்ந்தாள் நாளிரா. அவரது காதல் மனம் அவளுக்கு விளங்கியது.

அதன் பிறகு பயிற்சிக் கலாசாலையிலிருந்து அவர் பாடசாலைக்கு மாறினார். இதன்போது தன் தந்தையின் உத்தரவுக்கிணங்க நாளிரா போவது கட்டாயமானது. சந்திப்புகள் யாவும் பிரிவுகள் ஆனதால் கண்ணீருக்கு கைகளை அணையாக்கிப் பார்த்தார்கள். முடியாமல் போகவே பிரிவு என்பது உண்மை என உணர்ந்தார்கள். அவர்களது எதிர்கால கனவுக் கோட்டையை காற்று அடித்துச்சென்று காணாமலாக்கும் என்று யாராவது நினைத்திருப்பார்களா?

ஊருக்குச் சென்ற நாளிராவின் தொடர்பு திடீரென்று குறைய மலை ஒன்று இடம் பெயர்ந்து தன் நெஞ்சில் இருப்பதை உணர்ந்தார். உண்மையாக காதலித்தவர்களுக்கு காத்திருப்பதில் தானாம் சுகம் அதிகம். ஆனால் மானசீகமாக காலித்த நிஸ்தார் நானாவுக்கு பொறுமை என்பது பொய்யாகிப் போனது. எனவே அவர் அவளைப் பார்க்கவென்று புறப்பட்டார். ஒரு வேளை போகாமல் இருந்திருந்தால் நாளிரா அவரை ஏமாற்றி விட்டுப் போயிருக்கிறாள் என்றோ அல்லது பெண்களே பேய் என்றோ பிதற்றித் திரிந்திருக்கலாம்.

ஆனால்....

இதோ அவள் பாதி நிர்வாணத்துடன் பிணமாக கிடந்ததாக ஊரார் பேசிக் கொள்கின்றார்களே. இதைக் கேட்கத்தான் ஓடோடி வந்தாரா? சிறுவயதிலிருந்தே நாளிராவுடன் ஒன்றாக விளையாடிய இனிய கடல் நண்பனா சுனாமியாக வந்து இப்படியான கொடுமையைச் செய்தவன்? மூர்ச்சித்து விழுந்தார் நிஸ்தார் நானா.

இன்றும் அவர் நினைவுகளில் நாளிரா வந்து போவதுண்டு. நாளிராவை மறந்த கயவராக அவர் இல்லை. அதே போல நாளிராவை நினைத்துக்கொண்டு ரயீஸாவுக்கு துரோகமும் செய்யவில்லை. அவரைப் பொறுத்தவரையில் நாளிராவை மறக்க முடியாது ஏனெனில் அந்த நாளிரா.. அவரது காணாமல் போன கவிதை!!!

No comments:

Post a Comment