Thursday, June 24, 2010

காதல் கல்வெட்டு !


வசீகரன் காரை ஸ்டார்ட் செய்தான். வழி நெடுகிலும் அவனுக்கு வலி தரும் காட்சிகளையே கண்டான். ஆங்காங்கே குடைக்குள்ளும் சீமேந்து கட்டுகளிலும் காதலர்கள் இவ்வுலகை மறந்து தத்தமக்குரிய தனிமையான, இனிமையான உலகத்துக்குள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு வருடங்கள் எவ்வளவு சீக்கிரம் ஓடி விட்டன. ஓ நிஷ்மிதா! வசீகரன் வாய்விட்டு அழுதான். அந்த சந்தோஷமும் பாதிதானே?

***************

பி.கொம் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் வசீகரனிடம் அதிகாலைகளில் வோக்கிங் செல்லும் பழக்கம் அவனது பதினொரு வயது தொடக்கம் கடமை போன்றே ஆகிவிட்டிருந்தது. வழமையாக அவன் வோக்கிங் போகும் பாதையில் வானை முட்டுமளவுக்கு உயரமாக கட்டப்பட்டுள்ள அந்த கட்டிடத்தை எண்ணி பிரமித்து ஒவ்வொரு தட்டாக எண்ணினான்.

ஒரு நிமிடம் கடவுளே!

அகோர ஒலி எழுப்பிய அவன், லிப்ட் இருப்பதையும் மறந்து மாடிப்படி வழியாக விரைந்து ஓடிப்போய் பார்த்தான். இன்னும் ஒரே ஒரு செக்கனை வீணாக்கினாலும் அவ்வளவுதான். துரிதமாக செயல்பட்டு அவளைப்பிடித்து பின்னால் இழுத்து ஓங்கி ஒரு அறைவிட்டான். எதிர்பாராத இந்தத் தாக்குதலினால் அதிர்ச்சியடைந்த அவள் அவனை மிரட்சியுடன் நோக்கினாள்.

‘ஏய் யாரு நீ? எதுக்கு தற்கொலைக்கு முயற்சி பண்ணினே?’

அவள் மௌனமாயிருந்தாள்.
‘என்ன காதல் தோல்வியா? இல்லேன்னா எவன்கிட்டயாவது...?’ அவன் முடிக்கு முன்னே அவள் சீறினாள்.

‘ஏய் மிஸ்டர்! நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? எதுக்காக என்னை காப்பாத்தினீங்க?’

வசீகரன் தயங்கிய படி அவளிடம் மன்னிப்பு கேட்டான். அவன் அப்படி இரங்கி வந்து தன்னிடம் பேசிய போது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். ஏனோ வசீகரனுக்கும் மீண்டும் அவளிடம் காரணம் கேட்க வெட்கமாக இருந்தது.

நிஷ்மிதாவுக்கு வாழ்வே வெறுத்தது. இந்த சமூகம் இப்படித்தான். நல்லாயிருந்தால் வாழவும் விடாது. கெட்டுப்போனால் சாகவும் விடாது. இப்போது கத்தி அழ வேண்டும் போல் இருந்தது. தன் கையாலாகாத நிலைமையை எப்படி போக்குவது என்று அறியாமல் கண்ணீரை துணைக்கழைத்தபடி அவள் தூங்கிப்போனாள். காலையில் அவள் தன் தோழியின் ஞாபகமாக எடுத்து வந்த ரோஜாவை ரசித்துக்கொண்டிருந்தாள்.

‘இந்த ரோஜாப்பூ கூட எத்தனை அழகானது. என் வாழ்வில் மட்டும் ஏன்...?’ அவளது மனதுக்குள் வெறுமை நிறைந்து மூச்செடுக்க தடை செய்தது. மாதங்கள் கழிந்தன.

நிஷ்மி குட்டிக்கு என்ன வாங்கலாம்? காதலர் தின வாழ்த்து அட்டை, உயிருள்ள பூனைக்குட்டி, நகைகள்... எதை வாங்குவதென்று அங்கே தவித்துக் கொண்டிருந்தான் வசீகரன். ஷஇவ என் காதலை ஏத்துக்கணுமே... ஏத்துக்குவாளா?

அடுத்த நாள் காலை ஒரு பார்சலை அவளுக்கு கொடுத்துவிட்டு அவள் கண்களில் தன் உருவம் பார்த்தான். பிறகு தன் இதயத்தை அவளுக்கு தர இருப்பதாக சாடைமாடையாக காதலைக் கூறினான். அவனுடைய காதல் இப்படி அவளது கண்ணீரில் மிதக்கும் என்று நினைத்திருப்பானா? அவனது பார்சலை அவனிடமே திருப்பிக்கொடுத்துவிட்டு அழுதுகொண்டே சென்றாள் நிஷ்மிதா.

அப்படி முகத்திலடித்தாட்போல வந்தது நிஷ்மியின் மனதில் நெருடிக்கொண்டே இருந்தது. அவளும் அவனைக் காதலிக்கிறாளா? வெளிமனம் ஆனந்தத்தால் துள்ளிப் பாய்ந்தாலும் ஆழ்மனம் எச்சரித்து அவஸ்தைப்படுத்தியது. உண்மையைச் சொன்னால் அவன் தாங்குவானா? அவளால் உண்மையைச் சொல்ல முடியுமா?

வசீகரனின் அன்புத் தொல்லை வாழ்நாள் பூராக வேண்டும்போல் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து இருவரும் சந்திக்க நேர்ந்தது. சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத நிஷ்மிதா அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அதை வசீகரன் புரிந்து கொண்டானோ என்னவோ? அவள் சொல்லப் போவது தனக்குத் தெரியும் என்று கூறிவிட்டு அனைத்தையும் கூறி சரிதானே என்றான். சிலையாகி நின்ற நிஷ்மிதாவை தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான். விதியின் கைகள் இத்தனை வலிமையானதா? என நொந்து கொண்டாள் நிஷ்மிதா.

‘சொரி நிஷ்மி உன் அனுமதி இல்லாமல் உன் மெடிக்கல் ரிப்போட்ஸ் பார்த்துட்டேன்’ என்று கூறி தலையைக் கவிழ்த்துக் கொண்டான். இந்த ஒரு வாக்கியம் போதுமே... அவள் அழவில்லை. மனசு கல்லாகியிருந்தது. அவன் தான் அழுதான். பின் சமாதானம் கூறினான்.

‘வசீ.. என்னை மறந்துருடா. நான் உனக்கேத்த பொண்ணில்ல’

‘வாயைமூடு. கொஞ்சம் உன் கழுத்தை அறுக்குறேன். வலியைப் பொறுத்துக்க என்பதுபோலதானே நீ பேசுறே. உனக்காக எதையும் செய்கிறேன் நிஷ்மி. ஆனால் உன்னை இழக்கமாட்டேன்’.

இரண்டு வருஷம் கழிச்சி நீ இதே இடத்துக்கு வர்ரே. நீ வர்ரப்ப உன் மனசு கண்டிப்பா மாறி இருக்கும். அப்பயும் மாறலேன்னா உன்னோடு எனக்கு திருமணம். என்னை நம்புப்பா.

பார்க்கலாம் நிஷ்மி. ரெண்டு வருஷம்கிறது அதிக காலம்தான். ஆனால் என் காதலை நிரூபிக்கிறேன். எனக்காக காத்திரு என்று கூறி விடைபெற்றான்.

***************

வசீகரன் இப்போது காரை மிக வேகமாக செலுத்தினான். நிஷ்மிதா சொன்ன அந்த நாள் இன்று தானே என்று எண்ணினான். அந்த கட்டிடம் அப்படியே கம்பீரமாக காட்சி தந்தது. ஆனால் அதன் வர்ணம் மங்கியிருந்தது. அதை நெருங்க நெருங்கத்தான் அவன் உள்ளத்தில் கொந்தளிப்பு. மெதுவாக காரை விட்டு இறங்கி மாடிப்படி ஏறி....

‘யாரங்கே என் நிஷ்மிதாவா?’ அவள் தான். சந்தேகமேயில்லை. வாழ்க்கைiயே வெறுத்தவள் போல் வெளிறிக் காணப்பட்டாள்.

அவனுக்கு கண்ணீர் பீறிட்டது. பெருமூச்சுடனே அவளருகே உட்கார்ந்தவனை அதிசயமாகப் பார்த்தாள் நிஷ்மி. அவளுக்கு என்ன பேசுவது எதைச்சொல்வது என்று தெரியவில்லை. சொன்னபடியே முழுசாய் வந்து நிற்கிறானே என்று ஆச்சரியமடைந்தாள்.

‘நீ எனக்குரியவள் மட்டும் தான்டா. உன் கர்ப்பப் பையில உள்ள குறையால நம்ம காதல எதுவும் பண்ணேலாதுடா. எனக்கு நீ, உனக்கு நான் குழந்தையா இருக்கலாம்’

தன் தெரிவு சரியானதாக இருப்பதாய் அவள் பெருமைப்பட்டாலும் அவனது வம்சம் துளிர்விட்டு வளர தன்னில் குறையிருக்கும் எண்ணம் அவளது சந்தோஷத்தை வெட்டிப்போட்டது.

‘நீ எதுவும் யோசிக்காத. எனக்கு வாரிசு தர முடியாமல் போயிடும்னுதானே தயங்குற. எனக்கு நீ குழந்தையடி. அது போதும். வா கார்ல ஏறு’ என்ற படி அவளை படியிறக்கி கூட்டிச்சென்றான்.

அவனது அதீத பாசத்தால் அவளில் பழைய உற்சாகம் ஒட்டிக்கொண்டது. அவனுடன் அவனது வீட்டுக்குச் சென்றாள். அவன் வாங்கித்தந்த நகைகள், சல்வார் செட், மியூசிக் கார்ட், சொக்லேட் என அனைத்தையும் பரப்பி ரசித்தாள். முப்பது நிமிடங்கள் கழிந்து அவன் மஞ்சட் கயிறைக் கொண்டு வந்தான். காதலை சாட்சியாக வைத்து மூன்று முடிச்சுகளை இட்டான். மெதுவாக அவளை இழுத்தணைத்தான். அவள் கண்களை மூடிக்கொண்டாள்!!!

No comments:

Post a Comment