Thursday, June 24, 2010

மே தின விடுமுறை!

குருமூர்த்தியின் மனது சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்தது. நாளை மே தினம். விடுமுறை நாள். வீதியெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நாளைய தினத்தில் மேதின ஊர்வலம் நடைபெறும் என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை வாசித்த போது அவனுக்கு சத்திமிட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.

மலைய மக்களின் வாழ்க்கைச் சுமையும் தேயிலைச் சுமையும் நிரந்தரமாக்கப்பட்டுவிட்டது. கடலோரப் பிரதேச வாசிகளின் வருமானம் பிடுங்கித்தின்னப்படுகிறது. நடுச்சாமத்தில் வலை வீசுபவர்களிடம் முதலுக்கும் மோசமாக்குவது போல குறைத்துத் தருமாறு விலை பேசுகிறார்கள். கம்பனிகள், கடைகள் வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் பணத்தின் அதிகாரம் தலைவிரித்தாடுகிறது. வருடம் முழுவதும் மாடாய் நடாத்திவிட்டு ஒரு நாளைக்கு மட்டும் தொழிலாளர்களுக்காக தொண்டைக்கிழிய கத்தப்போகிறார்கள்?

எல்லோரும் விடுமுறை நாள் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க இவன் மாத்திரம் இப்படி தவிப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. வறுமையில் வாடிக்கொண்டிருப்பது மட்டுமே அவனது வாழ்க்கையாகி விட்டதே. இதையெண்ணி கவலைப்படுவதைத் தவிர அவனால் வேறு என்ன செய்ய முடியும்?

அரச மரத்தை ஆயிரம் முறை சுற்றி வந்தும், விரதங்கள், நேத்திகள் என்று பல தவங்கள் செய்தும் சில பணக்காரர்களுக்கு ஆண்டவன் ஏனோ குழந்தைப் பாக்கியத்தை மட்டும் கொடுப்பதேயில்லை. ஆனால் ஏழைகளுக்கு உள்ள ஒரே சொத்து இந்த குழந்தை பாக்கியம் மட்டுமே. அந்த வகையில் குருமூர்திக்கும் ஐந்து குழந்தைகள் இருந்தன. கடைசிக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களும் பூர்த்தியாகவில்லை.

குழந்தைகள் பசி தீர உணவு சாப்பிட்டதை அவன் இன்று வரை பார்த்ததில்லை. அவனது வாழ்க்கையில் அவனுடன் கூடவே ஒட்டி வந்து நிலைத்த ஒரே உறவு வறுமை மட்டுமே. நன்றாக படித்தால் பிற்காலத்தில் நன்றாய் வாழலாம் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் சொல்லியிருக்கிறார்கள். எனினும் படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் அது நிறைவேறாமல் போனதற்குக் காரணமும் அந்த வறுமைதானே?

தன்னைவிட ஓரளவு வசதி வாய்ந்த தன் மனைவி தன்னைக் கல்யாணம் செய்துகொண்டதிலிருந்து அவள் கண்ட சுகம் என்ன? வாய்க்கு ருசியாய் சாப்பிட்டிருப்பாளா? ஆசையாக புதுத்துணி உடுத்தியிருப்பாளா? அவளுக்கென்றிருந்த கொஞ்ச சொத்தையும் அவளது பணக்கார சகோதரர்கள் பறித்துக்கொண்டாகிவிட்டதே?

குருமூர்த்தி பிரபலமான துணிக்கடையொன்றில் வேலை செய்கிறான். அவனது படிப்புக்கு இந்த வேலை கிடைத்ததே அதிஷ்டம் என்று மெனேஜர் உட்பட பலர் அவனை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில். அதில் கோபப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை. உண்மையும் அதுவே.

ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் சம்பளம் என்ற அடிப்படையில் ஏழு வருடங்களுக்கு முன்பு தொழிலுக்கு வந்தான் குருமூர்த்தி. கடை முதலாளியும் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது போன்றே இன்னமும் ஒரு ரூபாயேனும் அதிகமாக்கிக் கொடுக்கவில்லை.

ஒரு வேளைக்கு பருப்பும் தேங்காயும் பாணும் எடுத்தால் அன்றைக்கே இருநூறு ரூபாய் காலியாகி விடுமே? பீட்ஸா சாப்பிடும் பணக்காரர்களின் வாய்க்கு குருமூர்த்தியின் சாப்பாட்டைக் கொடுத்தால் என்ன செய்வார் என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலாளியிடம் பல முறை இது குறித்து சொல்லியும்; ஷஅடுத்த மாதம் பார்ப்பம்| என்ற ஒற்றை பதிலுடன் பேச்சை முடித்துவிடுவார்?

இந்தத் துணிக்கடையை வைத்துக்கொண்டு முதலாளி எவ்வளவு பெரிய மனிதராகிவிட்டார். அவரது சொல்பேச்சை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு தன்னிடம் வேலை செய்பவர்களையும் கிட்டத்தட்ட அடிமை போல வைத்திருந்தார் அவர். விஷேசமாக குருமூர்த்தியின் பங்களிப்பு அந்தக்கடைக்கு அத்தியவசிமானதாக இருந்தது. இருக்காதா பின்னே? பண்பட்ட நிலத்தில்தான் விளைச்சல் அதிகமாய் இருக்கும் என்பதற்கிணங்க ஏழு வருடங்கள் துளிக்கூட வஞ்சகமின்றி ஓடி ஓடி உழைத்து இந்தக்கடைக்காக தன் வாழ்க்கையையே தியாகமாக்கிக்கொண்டிருக்கிறான் குருமூர்த்தி. பெருநாள் தினங்களுக்கே லீவு கொடுக்காமலும், கடை மூடியிருக்கும் நாட்களில் சம்பளத்தை வெட்டியும் தன் அதிகாரத் திமிரைக் காட்டி ஏழைகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளும் இந்த அயோக்கிய முதலாளி, குருமூர்த்தியை அவ்வளவு சீக்கிரத்தில் வேறொரு இடத்துக்கு வேலைக்குப் போக விட்டுவிடுவாரா? முதலாளி விடுகிறாரோ இல்லையோ இந்த வேலையை விட்டு வேறொரு தொழிலுக்கு செல்ல குருமூர்த்திக்கும் வழியில்லை. அவன் பழகிக்கொண்ட ஒரே தொழில் இது மட்டுமே.

முதலாளிகள் என்று தம்மை என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டு தொழிலாளர்களை வெறும் இயந்திரங்களாக நடாத்தும் எத்தனைப்பேர் இன்று நன்றாக வாழ்கிறார்கள்? தம்மிடம் வேலைப்பார்ப்போரை ஏன் வாழவிடாமல் இருக்கிறார்கள்? 'கெஷியரில்' இருந்து கொண்டு ஆயிரங்களாக சம்பாதிக்கிறார்களே? வியர்வை சிந்த உழைத்தும் தினமும் மூட்டைத்தூக்கினாலும் ஏன் தொழிலாளி வர்க்கம் மட்டும் ஏழையாகவே எப்போதும்?

சில இடங்களில் குறிப்பிட்ட மாத சம்பளத்தை தாமதித்து அடுத்த மாதத்தில் கொடுக்கின்ற அடாவடித்தனங்களும் இடம் பெறாமல் இல்லை. காதலுக்கும் கல்யாணத்துக்கும் ஜாதி மதம் பணம் என்று பிரித்துப்பார்ப்பவர்கள் போன்று தொழிலாளர்களையும் பிரித்துப்பார்க்கும் ஈனபுத்தி விரல்விட்டு எண்ணக்கூடிய பல முதலாளிகளிடம் இருக்கிறது. அது மாத்திரமின்றி பெருநாள் தினத்தைக்கொண்டாடுவதற்கு தொழிலாளர்களை தத்தமது சொந்த ஊருக்கு போகவிடாமல் தனதும் தனது குடும்பத்தினரின் சுற்றுலாவுக்காக சாரதியாக வைத்துக்கொள்ளும் எத்தனைப் பேர்? சிங்களத்தமிழ் புத்தாண்டுக்கு, கிறிஸ்மசுக்கு, நோன்பு அல்லது ஹஜ் பெருநாட்களுக்கு என்று விடுமுறை தராமல் வேலை செய்யப்பணிக்கின்ற அரக்கர்கள் எத்தனைப் பேர்? சாப்பிடுவதற்கே வழியின்றி இவர்கள் தவித்துக்கொண்டிருக்கும்போது வீண் களியாட்டங்களில் ஈடுபடும் பாவிகள் எமது சமூகத்தின் சாபக்கேடுகள். முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்குமான பெரிய போராட்டமே நடப்பதும் இதனால் என்று அவர்கள் அறியவில்லையா? அல்லது அறியாதது போல் வேஷமிட்டுக் கொண்டு இருக்கிறார்களா? இஸ்லாத்தில் கூறப்பட்டிருக்கும் இக்கருத்து குருமூர்த்திக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதாவது

திருநபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு அருளியுள்ளார்கள்.

'கூலிக்காரனது கூலியை அவனது வியர்வை காயுமுன்னே கொடுத்துவிடுங்கள்'

இந்த கருத்தை மதித்து ஏற்றுக்கொள்ளும் எத்தனை முதலாளிகள் எங்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள்?

இந்தக்காலத்தில் ஆண்கள் பல தொழில்களை கற்று வைத்திருந்தால்தான் குடும்ப பாரத்தை ஓரளவாவது சமாளித்துக்கொள்ள முடியுமாக இருக்கிறது. குருமூர்த்திபோல ஒரு தொழிலை மாத்திரம் கற்றுக்கொண்டு இருந்தால் வேறொரு தொழில்வாய்ப்பு எப்படி அமையும்? நல்ல வசதியான தொழிலுக்கு செல்வதென்றாலும் முதலாளி வர்க்கம் அதற்கு இடம்கொடுப்பதில்லையே? 'இன்டர்வியூ' என்ற பெயரில் அரங்கேறும் அராஜகங்கள் எத்தனை? பணக்காரர்களில் புத்திரர்களுக்கு மாத்திரமாய் அமைந்துவிடும் இந்த தொழில் வாய்ப்புக்கள் வறுமையோடு பிறந்து வறுமையோடு வளர்ந்தவனுக்கு எட்டாத கனிதானோ?

நாளைய தினத்தை எப்படியெல்லாம் களியாட்டங்களில் கழிக்கலாம் என்றும் என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்றும், எந்த நண்பன் வீட்டுக்கு போகலாம் என்றும் பலர் யோசித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் குருமூர்த்தியின் கவலையோ வேறு விதமாக இருந்தது. அதாவது நாளைய தினத்தில் வேலை இல்லை என்றால் வழமையாக கிடைக்கின்ற இருநூறு ரூபாயும் கிடைக்காது. அதனால் அன்றைய செலவுகளை சமாளிப்பது எப்படியென்றும், வழமையாக இருவேளைக் கஞ்சியோடு மாத்திரம் தம் பசியை அடக்கிக்கொள்ளும் தன் குழந்தைகள் நாளைய நாள் முழுவதும் பசியோடு இருக்க நேரிடுமே என்றும்தான். பசி தூக்கம் மறந்து குடும்பத்தை பிள்ளைகளை நினைத்துருகி அயராது வேலை செய்து, முதலாளிகளுக்கு உழைத்துக்கொடுப்பவர்கள் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த மேதினத்தில் கொஞ்சமாவது ஆறுதல் பட்டுக்கொள்ளக்கூடும். ஆனால் அன்றாடங் காய்ச்சிகளான குருமூர்த்தி போன்றோரின் மனம், நிச்சியமாக மேதினம் என்ற விடுமுறை நாளை பொய்யாக கொண்டாடப்போவதில்லை!!!


(கொஞ்சம் கற்பனை)

No comments:

Post a Comment