Monday, July 18, 2011

உறவுகள் !



நளீம் தலையைக் கவிழ்த்துக்கொண்டு யோசித்தவாறு இருந்தான். அக்பர் சாச்சாவின் நிலைமையை எண்ணி அவனுக்குள் இனம்புரியாத ஒரு வலி இருந்தது. தன் தந்தையின் பேராசை காரணமாக சகோதரன் என்று கூட யோசிக்காமல் அக்பர் சாச்சாவின் குடும்பத்தாரை இந்தப் பெரிய வீட்டைவிட்டு வாப்பா துரத்தியது அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது மட்டுமாயிருந்தால் பரவாயில்லையே. இப்போது இருக்கும் சிறிய நிலப்பரப்பையும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்காக வேலிச் சண்டையை ஆரம்பித்திருக்கும் வாப்பா மீது கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டது.

ஆனால் அந்த காணித்துண்டை மகான் போல விட்டுக்கொடுத்தது நளீமின் வாப்பாவல்ல. அது அக்பர் சாச்சாவின் மனைவியின் சொத்து. அதிலாவது நிம்மதியாக இருக்கவிடாமல் சதாவும் அவர்களை நச்சரிப்பதும், இன்று காலை அவன் எதிர்பாராத விதமாக கண்ட காட்சியும் நளீமுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

பாவம் அக்பர் சாச்சா. மிகவும் நல்லவர். இரண்டு பெண் பிள்ளைகளுக்கும், ஒரு ஆண் பிள்ளைக்கும் தகப்பனான அவர் அந்த பெண் பிள்ளைகள் இருவரையும் திருமணம் செய்து கொடுப்பதற்காகவும், பாடசாலை செல்லும் தனது கடைசி மகனின் செலவுக்குமாக மிகவும் பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர். இன்றைய காலத்தில் விலைபோகும் சில மணமகன்களுக்கு ஆதனம் சீதனம் என்று கொடுக்க வேண்டுமல்லவா?

‘அல்லாஹ்வே அவரின் நிலைமையை இலகுவாக்க நீதான் அருள் புரிய வேண்டும்’ என்று மனதுக்குள் இறைஞ்சிக் கொண்டான் நளீம்.

***************

நளீமின் வாப்பாவான உஸ்மான் ஹாஜி ஊருக்கு செலவழிப்பதாக காட்டிக்கொள்பவர். பெரிய பள்ளிக்கு கொழும்பிலிருந்து ஜமாத் வந்தால் பெருமைக்காக சாப்பாடு கொடுப்பார். ஆனால் ஏழைகள் யாராவது கேட்டுப்போனால் அவர், அவர்களை விட ஏழையாகி விடுவார். இந்த மாதிரி குணமுடைய உஸ்மான் ஹாஜி பலமுறை ஹஜ்ஜூக்கும், உம்ராவுக்கும் போய் வந்தவர். ஆனால் அந்தப் பயணமானது தன் வியாபார விடயங்களை முக்கியப்படுத்திக் கொண்டுதான் தீர்மானிக்கப்படும். இப்போதைக்கே டவுனில் ஐந்து கடைகளுக்கு சொந்தக்காரர். காசு, சொத்து என்று அவருக்கு அல்லாஹ் நிறைய அபிவிருத்தி செய்திருக்கிறான். ஆனால் இல்லாதவர்களுக்கு தர்மம் செய்யும் மனப்பான்மை அவருக்கு பிறவியிலிருந்தே இல்லாத பழக்கமாக இருந்தது. பேர் புகழுக்காக அள்ளிக்கொடுப்பவர். உண்மையான ஏழைகளுக்கு கிள்ளியும் கொடுக்கமாட்டார். அதாவது ஷநான் எனக்கு எனது| என்ற தன்னிலைக் கொள்கையுடடையவர் உஸ்மான  ஹாஜி.

அவர் தனது பிள்ளைகளுக்கு எந்தவித குறையும் வைத்ததில்லை. உம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்து வைக்குமுகமாக அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

தற்போது கூட தனது மூன்றாவது மகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் யோசனையில் இருக்கும் அவர் தனது வியாபார விடயங்களில் இன்னும் மும்முரமாக இருக்கிறார். ஏனெனில் தன் இரண்டு மருமகன்மாரை விட இப்போது வரப்போகும் மருமகனுக்கு அதிகமாக சீதனம் கொடுக்க வேண்டும். இவ்வாறான திருமணங்களை தன் சகோதரிகளுக்கு செய்து கொடுப்பதில் நளீமுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. எனினும் என்ன செய்ய? வாப்பாவைப் போலவே தாங்களும் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சகோதரிகளை என்ன செய்யலாம்?

உம்மா இருந்தாலாவது நல்ல விடயங்களை சொல்லிக் கொடுத்திருப்பார். ஆனால் அல்லாஹ்வின் நாட்டத்தை யாரால் மாற்ற முடியும். உம்மா மௌத்தாகி இன்றைக்கு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டதே என்று எண்ணி தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வான்.

சீதனமின்றி ஒரு ஏழைப் பிள்ளையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற நற்குணமுடையவன்; நளீம். நளீமின் உம்மா கூட அவ்வாறே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால் வாப்பாவான உஸ்மான் ஹாஜிக்கு அதில் ஒரு துளி கூட இஷ்டமில்லை. தன் பணக்கார நண்பர் ஒருவரின் மகளுக்கே கொழுத்த சீதனத்துடன் நளீமை திருமணம் செய்து கொடுப்பது என்ற வைராக்கியத்தில் அவர் இருந்தார்.

நளீம் சில பொழுதுகளில் சாச்சாவின் வீட்டுக்குப் போவதுண்டு. அந்த சந்தர்ப்பங்களில் சாச்சா மிகவும் பயந்து போய்விடுவார். தன் நானாவின் குணமறிந்தபடியால் நளீமுக்கு ஏதும் ஏசி விடுவாரோ என்று யோசித்துக்கொண்டிருப்பார். ஆனால் அவர்கள் அனைவரும்; நளீமின் வருகையால் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

தன்னையும் சொந்தமகன் போல அவர்கள் எண்ணுவது நளீமுக்கு மனதுக்கு குளிர்ச்சியாக இருக்கும். அவனும் அங்கு போகின்ற சந்தர்ப்பங்களின் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்களை கொண்டு செல்வான். பாடசாலைபோகும் சாச்சாவின் சின்ன மகனுக்கும், சகோதரிகளுக்கும் தன்னால் முடிந்தளவு தொகை காசு கொடுத்துவிட்டு வருவான். ஒரு சகோதரனாக அனைத்தையும் தானே செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டவன் நளீம் என்பது அவர்களுக்கும் தெரியும். வஞ்சகமில்லாத அவனை நினைத்து அவனின் சுகவாழ்வுக்காய் சதாவும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்.

ஆனால் அவர்களை அடிக்கடி போய் பார்த்துக்கொள்ள முடியாமல் இருந்தான் நளீம். ஏனெனில் தான் அங்கு போவது தன் சகோதரிகள் அறிந்து விட்டால் வாப்பாவிடம் கூறி விடுவார்கள். இனி அந்த நாள் முழுவதும் வாப்பாவின் ஷபோதனை| தொடர்ந்த வண்ணமிருக்கும். நல்லெண்ணம் கொள்ளும்போது என் வாப்பா ஏன் இப்படி முட்டுக் கட்டையாக இருக்கிறார் என்று கவலை வரும். அதை விட தன்னைப் புரிந்து கொள்ளாமல் நடக்கும் தன் சகோதரிகள் மீதும் கவலையாக இருக்கும். எனினும் தன் சகோதரிகளுக்கும் வாப்பாவுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட வேண்டும் என்று ஐவேளையும் தொழும்போது பிரார்த்தித்துக் கொள்வான் நளீம்.

***************

இன்று ஒரு விடயமாக வங்கிக்கு சென்றிருந்தான் நளீம். அவன் வந்ததை அறியாத அக்பர் சாச்சா வங்கி முகாமையாளரிடம் பேசுவது இவனுக்கு தெளிவாக விளங்கியது.

‘சேர். நாங்கள் இப்போது இருக்கும் வீட்டை வித்திட்டு வேறு ஊரு பக்கமா போக முடிவெடுத்தீக்கிறோம். அதோடு கூட்டாளியின் மகனொருவன் மூத்த மகள நிக்காஹ் செய்ய விரும்பியிருக்கிறான். சீதனம் அது இது என்று ஒன்றும் கேக்கல்ல. என்ட கொமரு புள்ளயளோடு இதுக்குள்ள இருந்துக்கிட்டு நானாவோட வாக்குவாதப்படுறதும் சரில்ல தானே? அதுகளுக்கும் ஒரு வாழ்க்கைய அமைச்சிக் கொடுத்தமென்டா அதுக்குப் பொறவு அல்லாஹ்ட காவலா நாம இருந்திடுவோம் தொரே’
‘ஓகே. மிஸ்டர் அக்பர். நான் உங்களுக்கு என்ன செய்யணும்?’

‘சேர் எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் கடனாக வேணும். எப்படியாவது நான் அதை சம்பாரித்து தந்திடுவேன். தயவு பண்ணுங்க சேர்!’

‘ஓம் மிஸ்டர் அக்பர். அதற்கான வசதியை செய்திடலாம். ஆனால் வங்கிக்கென்று சில சட்டதிட்டங்கள் இருக்கு. ஆகக்குறைந்தது நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆதனமொன்றின் உறுதிப் பத்திரத்தை நீங்க வங்கிக்கு சமர்ப்பிக்கணும். அப்படி செஞ்சிட்டீங்க என்டால் அந்த டொக்கியூமன்ட பார்த்திட்டு கடன் வசதிய செஞ்சி தரலாம்’

‘என்னா சேர்! அந்தளவு சல்லி ஈக்கியதென்டால் நான் எதுக்கு இங்க வருவன்? முடிஞ்ச வரைக்கும் பாருங்க. ப்ளீஸ்’

‘இதோ பாருங்க. வங்கி என்பது தனிநபரோட விருப்பத்துக்கு செயல்படுற நிறுவனமில்ல. முடிஞ்சா சொன்னத செய்ங்க. இல்லன்னா ஐ அம் வெரி ஸொரி’

‘சேர் ப்ளீஸ்...’

‘நோ நோ. யூ கென் கோ’

***************

இந்த சம்பவம்தான் நெருஞ்சி முள்ளாய் நளீமின் மனதை குடைந்து கொண்டிருந்தது. ச்சீ! நம்மிடம் இவ்வளவு வசதியிருந்தும் குறிப்பிட்டதொரு தொகையை கொடுக்க முடியாமல் இருக்கே. ஷகரண்ட் எக்கவுண்ட்| இருப்பதால் காசு எடுப்பதற்காக காசோலையில் வாப்பாவும் ஒப்பமிட வேண்டுமே. இது நடக்கிற காரியமா? நான் மட்டும் தான் காசோலையில் ஒப்பமிட வேண்டும் என்றால் ஒரு பிரச்சனையுமில்லையே. எப்படி இதை சாத்தியப்படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தான்.

கொடுக்க வேண்டும் என்று உண்மையான மனசிருந்தும் நளீமுக்கு கொடுக்க முடியாத நிலை. எந்த கணக்கு வழக்கு என்றாலும் ஷகரண்ட் எக்கவுண்ட்| இருக்கும் காரணத்தினால் வாப்பாவுடன் கலந்தாலோசிக்காமல் அவனுக்கு முடிவெடுக்க முடியாது. அவன் தன் நண்பர்களிடமாவது கேட்டுப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நளீமின்; கைத்தொலைபேசி அலறியது.
‘ஹலோ. சொல்லுங்க தாத்தா’

‘தம்பி எங்கயிருக்கீங்க? சீக்கிரம் வாங்க. ஹொஸ்பிட்டலால கோல் வந்திச்சி. வாப்பா எக்ஸிடன்ட்பட்டு இருக்காங்களாம்’

‘என்ன தாத்தா. என்ன சொல்றீங்க? இதோ வந்துடுறேன்’ என்றவனாக பதற்றத்துடன் பாதையில் வேகமாக நடந்து கொண்டிருந்த போது சாச்சா எதிரில் தலைப்பட்டார்.

‘என்ன ராஜா. முகமெல்லாம் ஒரு மாதிரி கிடக்கு. சாப்பிட்டீங்களா? என்ன மவன் கண் கலங்கியிருக்கு. வாப்பா ஏதாச்சும் ஏசிட்டாங்களா?’ என்று அன்பொழுக விசாரித்தார்.

‘இல்ல சாச்சா. வாப்பா எக்ஸிடன்ட் ஆகிட்டாராம். தாத்தா இப்போ தான் கோல் பண்ணினாங்க. சாச்சா எனக்கு பயமாயிருக்கு’

‘யோசிக்க வேணாம் அல்லாஹ் இருக்கான் மகன். வாங்க உடனே வீட்டுக்கு போவம்’

இருவரும் அவசர அவசரமாக நடந்து நளீமின் வீட்டை அடைந்தார்கள். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்க சாச்சா தயங்கியபடி இருந்தார். அதையெல்லாம் கவனிக்க நளீமுக்கு நேரமிருக்கவில்லை. வீட்டார்கள் அனைவரும் ஹொஸ்பிட்டலுக்கு சென்றிருப்பதாக பக்கத்துவீட்டு ஆதம் காக்கா சொன்னார். உடனே இருவரும் ஹொஸ்பிட்டலுக்கு விரைந்தார்கள். நளீமின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை படிந்திருந்தது. அவனது உதடுகள் அல்லாஹ்விடம் எதையோ மன்றாடிக் கேட்டுக்கொண்டே இருந்தன.

அங்கு ஹொஸ்பிட்டலில் சேலை நுனியால் வாயை பொத்தியவாறு அழுது கொண்டிருந்தார் தாத்தா. மற்ற தாத்தா இருவரும் மச்சான்மாரும் உடனே அங்கு வந்திருந்தார்கள். அது நளீமுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. டாக்டரிடம் சென்று விசாரித்த போது வாப்பாவுக்கு நிறைய இரத்தம் வீணாகியிருப்பதால் இரண்டு பைந்து இரத்தம் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்.

மச்சான்மாரும் தமக்கு தெரிந்த நண்பர்களிடம் விசாரித்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை என்று கூறினார்கள். நளீமுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவன் யோசித்துக் கொண்டிருந்தான். இதையெல்லாம் ஒரு ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த அக்பர் சாச்சா நளீமிடம்,

‘மவன். கொஞ்சம் வாங்களன். இதோ பாருங்க மவன். நான் அதிகம் படிச்சவனில்ல. ரத்தம் ஏத்தணும் என்டா ஏதோ ஏ குரூப், பீ குரூப் என்று இருக்காமே. எனக்கு அதெல்லாம் தெரியாது வாப்பா. என்ட ரத்தம் பொருந்துதா என்டு டொக்டர பாக்கச் சொல்லுங்க. சரி என்றால் ஒன்டுக்கும் யோசிக்க வேணாம் மவன்’

நளீமுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. புரிந்து கொள்ள அவகாசமுமில்லை. டாக்டரை அணுகி விசயத்தை சொன்னான். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு டாக்டர் நர்ஸ் இடம் ஏவினார். இரத்தம் பரிசோதிக்கப்பட்டது. டாக்டரின் முகத்தில் சந்தோஷத்தின் சாயல்கள்.

‘மிஸ்டர் நளீம். யு ஆர் லக்கி. இரத்தம் பொருந்திடுச்சி. மிஸ்டர் அக்பரை அழைத்து வாங்க’

அனைவருக்கும் ஆச்சரியமும் சந்தோசமுமாக இருந்தது. இரத்தம் ஏற்றி சுமார் நான்கு மணிநேரத்தில் உஸ்மான் ஹாஜியார் கண் விழித்தார். அவர் நா தழுதழுக்க டாக்டரை நோக்கி நன்றி சொல்ல முனைந்தார்

‘இல்ல ஹாஜியார். அல்லாஹ்ட காவலா நீங்க இப்போ இப்படியிருக்கக் காரணம் ஒரு ஏழை மனிதர் தான். உங்கள் மகன் இவரை அழைத்து வராவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே கஷ்டமா இருக்கு. இறைவனின் நாட்டத்தால் அவரின் இரத்தம் உங்களுக்கு பொருந்திருச்சி’ என்று அக்பரை காட்டினார் டாக்டர். கண்ணீர் ததும்பிய கண்களினூடே தன் தம்பி அக்பர் தயங்கியவராக அங்கிருப்பதை கண்டதும் ஹாஜியாருக்கு நெஞ்சு வெடித்து விடும்போல இருந்தது.

தான் அக்பருக்கு எவ்வளவு அநியாயம் செய்திருக்கிறேன். இந்த ஏழை மனிதர் ‘எங்கள் அக்பர் சாச்சா’ என்று பிள்ளைகள் டாக்டரிடம் சொல்லாத அளவுக்கு நான் அக்பரை எவ்வளவு தூரம் ஒதுக்கி வைத்திருக்கிறேன். கொமரு காரியத்துக்கு அவன் கஷ்டப்படுறது பார்த்தும் என்ட பணத்திமிரால அவமதிச்சிட்டேனே. யா அல்லாஹ்! அதற்கான சரியான தண்டனையத் தந்திட்டாய். அக்பர்ட ரத்தத்தை என்னில ஏத்தவச்சி அவனுடைய நல்ல புத்திய எனக்கும் தந்திட்டாய். இனியாவது நான் மனுசனா வாழுற பாக்கியத்தை தந்தருள்வாயாக! என்று எண்ணியவாறு தன் சகோதரனை அழைத்தார். அக்பர் உஸ்மான் ஹாஜியாரின் அருகில் வந்து தலைகுனிந்து நின்றபோது உஸ்மான் ஹாஜி அவரை அழைத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

அந்த அணைப்பில் அவர் ஆயிரம் சந்தோசம் கண்டார். இருவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். தம்பி.. தம்பி என்று உஸ்மான் ஹாஜி; அழுகையூடே உச்சரித்தார். அதைக்கேட்ட டாக்டரும் முதலில் அதிசயித்து, பின் விடயத்தை நிதானித்தவராக அறையை விட்டு மகிழ்வுடன் வெளியேறினார்.

விடயம் கேள்விப்பட்டு அக்பர் சாச்சாவின் மனைவி பிள்ளைகளும் அங்கு வந்திருந்தார்கள். அந்த நேரத்தில் சகோதரர்கள் இருவரும் இப்படி அன்பாயிருப்பது கண்டு மிகவும் சந்தோஷப்பட்டனர்.

நளீமின் சகோதரிகளும் சாச்சாவின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு அவர்களுடன் ஒன்றித்தார்கள். தங்கள் குடும்பம் ஒன்று சேர்வதற்காய் தூய மனம் கொண்டு நளீம் செய்த பிரார்த்தனைகளை அந்த வல்ல அல்லாஹ் நிறைவேற்றிவிட்டான்!!!

No comments:

Post a Comment