Tuesday, June 29, 2010

பயணங்கள் !


ஸாதிக் ஹாஜியார் வழமைக்கு மாற்றமாக அதிக நேரம் பள்ளியில் கழித்தது பற்றி எல்லோருக்கும் ஆச்சரியம். தொழுது முடிய ஸலாம் கொடுத்தவுடன் எழுந்து கடைக்குப் போய்விடும் அவரை இப்படி பள்ளியில் பார்த்தால் ஆச்சரியம் இல்லாமல் இருக்குமா?

கொட்டிக்கிடக்கும் பணத்தில் ஒரு சின்ன பகுதியை வெறும் புகழுக்காக செலவழித்துவிட்டு, தான் ஹாஜியார் என்று முத்திரை குத்திக்கொள்ளாத குறையாக பெருமையாக பேசித் திரிபவர் அவர்.

இப்போது இந்த இரண்டு நாட்களாக அவரது நடவடிக்கையில் பெருத்த மாற்றம் இருந்தது. தான் அந்த ஏழைக் கன்னி பஸீனாவுக்கு செய்த அநியாயமே தற்போது தன் மகளுக்கு வந்து மு(வி)டிந்திருக்கிறது என்று எண்ணம் வரும் போதெல்லாம் வலது கையால் இடது நெஞ்சைத் தடவி சமாதானம் தேடிக்கொண்டிருந்தார்.

***************

உயர்தர வகுப்பு டியூஷனுக்கு போகும் போதெல்லாம் பஸீனாவின் சிறந்த குணத்தை அறிந்து அவளுடன் நெருங்கிப்பழக முயன்று கொண்டிருந்தான் சமீர். வீட்டுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமாக வளர்ந்த பஸீனாவுக்கு சமீரின் நடவடிக்கைகள் எரிச்சலையூட்டின. அவனது போக்குக்கு அவள் அடிமையாகவில்லை.

ஏ.எல் முடித்து கௌரவமான தொழில் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதே தற்போது அவளது தேவையாக இருந்தது. அதற்கு அப்பாற்பட்ட விடயங்களை அவள் நினைத்தும் பார்க்கவில்லை. உழைத்து ஓடாய் தேய்ந்து போன வாப்பா இனியும் உழைத்து தன்னையும் தனது தங்கையரையும் கரை சேர்ப்பது சாத்தியமில்லை என்பது அவளது அறிவுக்கு புலப்படாமல் இல்லை.

ஆகவே அவள் படித்து உழைத்துத்தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவள் விரும்பியோ விரும்பாமலோ அவளுக்கு சுமத்தப்பட்டிருந்தது. ஆண் பிள்ளையை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது பற்றி அவளது பெற்றோர் நடு இரவொன்றில் அழுததை தலையணையில் முகம் புதைத்தவாறு கேட்டுக் கொண்டிருந்ததன் தாக்கமே அவள் சமீரை ஏறெடுத்தும் பார்க்காதது.

சமீரும் அவளை எல்லோரும் போல் பார்க்கவில்லை. அவன் உண்மையிலேயே அவளை நேசித்தான். அவளும் அவளையறியாமல் தன்னை நேசிப்பது சமீருக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் பள்ளி செல்லும் மாணவியிடம் திருமணம் பற்றி பேசுவது அழகல்ல என்பதால் இரண்டு வருடங்களை அவளுக்காகவே காத்திருப்பதாய் நினைத்து உழைக்கவென்று வெளிநாடு புறப்பட்டான்.

அவனது உண்மையான அன்பைப் புரிந்தாலும்கூட தற்போதைக்கு பஸீனாவால் எதுவும் சொல்ல முடியாது என்பதால் காலத்தை கடத்தி வந்தாள். சமீர் தன்னை விட்டு விட்டுப்போனதாகவே அவள் எண்ணினாள். ஆனால் துளியும் வருத்தப்படவில்லை. கழாகத்ர் (விதி) படியே எல்லாம் நடக்கும் என்று எண்ணி தன் வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டாள்.

காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. வருடங்கள் இரண்டு முடிய சமீர் ஊருக்கு வந்திருந்தான். அவன் சற்று கொழுத்து, மிகவும் அழகாய் இருப்பதாக கேள்விப்பட்ட போதும் அவனைப் பார்க்க வேண்டும் என்று மனசு கிடந்து துடிக்கவில்லை. அவளது ஆசைகள் சிறகடிக்கவில்லை. காரணம் பணக்கார வாலிபர்கள் அனைவரையும் அவள் ஒரே மாதிரி எடைபோட்டிருந்தமையே.

அவன் பஸீனாவைப்பற்றி அவளது தோழி சுலைஹாவிடம் விசாரித்த போது பஸீனா ஆசிரியையாக தொழில் புரிவது பற்றி அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவளது இலட்சியங்களை அறிந்திருந்தவனுக்கு அவளது ஆசைப்படியே கௌரவமான தொழில் கிடைத்ததையிட்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினான்.

வெளிநாட்டிலிருந்தபோது ஒருநாள் ஸாதிக் ஹாஜியார் மகன் சமீருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது சமீரின் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அதனால் சமீரை திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும் படியும் கூறினார்.

‘தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் வாப்பா. என்னை எதுக்கு வற்புறுத்துறீங்க?’

‘அட நீ வேறப்பா. முதல்ல சிலோனுக்கு வா. அப்புறம் எல்லாத்தயும் வௌரமா சொல்றேன்’ என்றுவிட்டு போனை வைத்தார்.

இது நினைவு வர சமீர் ஒரு நாள் தன் வாப்பா ஸாதிக் ஹாஜியாரிடம் இது பற்றிக் கதைத்தான்.

மகனிடம் எப்படி தொடங்குவது என்றிருந்த ஸாதிக் ஹாஜியார் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

‘அதொன்டுமில்ல மகன். கண்டீல ஒரு பார்ட்டி. நல்ல சல்லிக்காரங்க. உன்ட தங்கச்சிய கெம்பஸில பாத்துட்டு அந்தப் பொடியன் விரும்பீட்டானாம். உன்ட தங்கச்சிக்கும் அவன் மேல ஆச இருப்பதாய் தெரியுது. அவன் நண்பன் மூலமா தன் வாப்பாட்ட செல்லீக்கியான். அவரு விசாரிச்சுப் பாத்ததில என்ட மகள்னு தெரிஞ்சீக்கி. கரீம் ஹாஜி என் நல்ல கூட்டாளி’

இதற்கும் நான் கல்யாணம் முடிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் என்று சமீர் நினைத்த போது அவரே பேச்சை மறுபடியும் தொடங்கினார்.

‘விசயம் என்னன்டா சமீரு.... அவன்ட தங்கச்சிய நீ முடிக்கோணும். அப்போ எல்லா சொத்தும் நமக்கு வந்த மாதிரித்தான். உங்களிருவரயும் நல்ல இடத்தில் கரசேத்த திருப்தியோட நானும் மௌத்தாகிடுவன். பொடியனுக்கு உன் தங்கச்சியும், அவன்ட தங்கச்சிக்கு உன்னையும் மாத்தி செய்றதா வாக்கு கொடுத்திட்டன்’

‘வாக்கு கொடுத்தீங்களா? என்னை ஒரு வார்த்தை கேட்காமல் என் வாழ்க்கையை தீர்மானிக்கிறீங்களே வாப்பா? என் மனசில் இருக்கும் ஆசை தெரியுமா? நான் விரும்பும் என் தேவதை யார் என்று தெரியுமா? உங்களிடம் இவ்வளவு பணமிருந்தும் நான் ஏன் வெளிநாடு போய் உழைத்து வந்தேன் தெரியுமா? எல்லாம் பணத்துக்காக வாப்பா. பஸீனா ஏழைனு தெரிஞ்சா நீங்க கட்டாயமா ஒத்துக்க மாட்டீங்க. அதனாலதான் நானே ஒழச்சி அந்தப் பணத்தையெல்லாம் அவ மூலமா ஒங்களுக்கு தர வச்சிருந்தன்’

உடைந்து சிதறிய வார்த்தைகளை கஷ்டப்பட்டு கோர்த்து அவன் அவருக்கு சொல்லிக்கொண்டிருந்தான். சொல்லி முடியுமுன்பே அவனுக்கு தலைசுற்றுவது போலிருந்தது. அதிர்ச்சி நீங்கி நிதானித்து பார்த்தபோது அவனது சிவந்த கன்னத்தில் ஹாஜியாரின் கை அச்சு உக்கிரமாய் பதிந்திருந்தது. அதற்குப்பிறகு இது பற்றி அவனும் பேசவில்லை. அவரும் பேசவில்லை. அவன் மிகவும் நொந்து போயிருந்தான். பெண்களுக்கு மட்டும்தான் மனசிருக்கிறதா? அப்படியில்லையே. இதோ இன்று பஸீனாவை எண்ணி என் மனம் படுகிற வேதனையை அறிந்த நாயனே எனக்கு நல்ல வழியொன்றை காட்டித்தா என்று சமீர் புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனது பிரச்சனைகளை தன் தாயிடமும் சொல்லியழ முடியாத சோகம் அவனுக்கு. வாப்பாவின் கத்தலுக்கே சுவரோடு ஒடுங்கிப்போகும் ரகம்; அவனது உம்மா. வாப்பாவை எதிர்த்து பேசும்படி உம்மாவை தூண்டிவிட்டு அதன் பிறகு தன் உம்மா கண்கலங்குவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியாது.

அது தவிர, தன் தங்கையின் நிலைமையையும் நினைத்து உருகினான் சமீர். தான் அந்த கண்டி ஹாஜியாரின் மகளை மணமுடிக்க ஒத்துக்கொள்ளாவிட்டால் தன் தங்கையின் ஆசைகள், கனவுகள் என்னாவது? அவனுக்குள் பெரும் போராட்டமாய் இருந்தது. மகனது நடிவடிக்கைகளில் எவ்வித மாற்றத்தையும் அறியாத ஹாஜியார் அடுத்தகட்ட காரியமாக பஸீனாவின் வீட்டை நோக்கி புறப்பட்டார்.

ஒரு நாளும் இல்லாமல் முக்கிய விடயமொன்றைக்கூற வந்திருந்த தோழி சுலைஹாவுடன் பேசிக்கொண்டிருந்தாள் பஸீனா. எதிரே முற்றத்தில் திடீரென வந்து நின்ற காரிலிருந்து இறங்கி வேகமாய் வந்து கொண்டிருந்த ஸாதிக் ஹாஜியாரைப் பார்க்க இருவருக்கும் பயமெடுத்தது. சுலைஹா விடயத்தை ஓரளவு உணர்ந்து கொண்டாள்.

‘ஏய் தாவூத் வெளில வா. மாசச் சம்பளத்த வாங்குறத்துக்கு முதலாளிக்கிட்ட கையேந்தி நிக்கிற கூட்டத்தைச் சேர்ந்தவன் நீ. உன் புள்ளக்கி என்ட மகன் கேக்குதாமா? வசதியான பையன வளைச்சு போட சொல்லிக்கொடுத்தியா? எல்லா வினையும் இதோ.. உன் மகளால தான். இன்று அவன் என் பேச்சை கேட்காமல் இவள் வேணும்னுகிட்டு இருக்கான். எல்லாத்தயும் மரியாதயா விட்டிரச் சொல்லு. அப்புறம் போலீசுல நாய் படாத பாடு படுவே’

நரம்பில்லாத நாக்கால் குத்தலாய் பேசி அடிக்கடி பஸீனாவை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார் ஹாஜியார். அவரது கதைகளைக்கேட்டு காதை பொத்தியவாறு அழுது கொண்டிருந்தாள் பஸீனா.

நான் சமீரை விரும்புறேனாமா? வாப்பாவை எப்படி கீழ்த்தரமாய் பேசிவிட்டார் இந்தப் பெரிய மனுசன்? இவரெல்லாம் அஞ்சு நேரம் அல்லாவ தொழுறவங்க தானா? இன்னும் என்னென்னமோ ஹாஜியார் சொல்லிக்கொண்டிருக்க, சுவரில் அடித்த ஆணியாய் பஸீனாவின் உம்மாவும் வாப்பாவும் பேச திராணியற்று மௌனமாக இருந்தார்கள்.

ஹாஜியார் தன் கொடூர பேச்சை முடித்துவிட்டு செல்ல, தன் மீது படியும் பெற்றோரின் பார்வையை ஒருமாதிரியாக உணர்ந்தாள் பஸீனா. ஆனால் அந்தப் பெற்றோருக்கு தம் வளர்ப்பின் மீது நம்பிக்கையிருந்தது. அதை விட பஸீனா மேல் அதிகம் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர்கள் பஸீனாவை சமாதானப்படுத்த, அவள் நெஞ்சுருகி தன் தாயின் தோளில் சாய்ந்து அழுதாள்.

சுலைஹாவின் முன் இப்படி அவமானப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த போது, சமீர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பின் ஒருநாள் தன்னிடம் பஸீனா பற்றி விசாரித்ததாகவும், அதை சொல்லவே இன்று வந்ததாகவும் கூறிச் சென்றாள் சுலைஹா.

பஸீனாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது. சமீர் இன்னமும் என்னை நெனச்சிக்கிட்டு இருக்காரா? ஆனால் அவருக்கு மனைவியாக வாழுற பாக்கியம் எனக்கில்லையே. ஸாதிக் ஹாஜியார் வந்து பேசிவிட்டுப் போன பேச்சுக்கள் கொஞ்சநஞ்சமா? உண்மையில் நேசித்திருந்தாலும் விட்டுவிட வேண்டிய நிலைமையல்லவா இது?
பெற்றோரிடமிருந்து பிள்ளையை பிரிக்கும் கல்நெஞ்சம் கொண்டவள் அல்லவே பஸீனா. எல்லாம் அல்லாஹ் விட்ட வழி என்று தன் மனசை திசை திருப்பினாள். ஆறேழு மாதங்கள் கடந்த நிலையில் பஸீனா வேறொருவரை மணமுடித்து சந்தோஷமாய் சென்றாள். அவளது வாழ்க்கை மிகச்சிறப்பாய் இருந்தது. அவளை கரம்பற்றியவரும் அதிர்ஷ்டசாலி.

ஆனால் சமீர் இன்று உருக்குலைந்து, தானும் வேலையும் என்று காலம் கடத்துகிறான்.

ஹாஜியாருடன் மொத்தமாக அவன் பேசவில்லை. இதெல்லாம் ஹாஜியாருக்கு மன வருத்தத்தைக் கொடுக்கவில்லை. பஸீனா என்ற தொல்லை கழிந்தது. இனி சமீரை சம்மதிக்க வைத்து விடலாம் என்று எண்ணியிருந்த போதே அவரது தலையில் இடி விழுந்தது.

அதாவது கண்டியிலுள்ள கரீம் ஹாஜியார், ஸாதிக் ஹாஜிக்கு ஒரு மடல் அனுப்பியிருந்தார்.

அன்பின் நண்பருக்கு,

அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும். உங்கள் பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்ற ஆசையில் பெரும் பணக்காரர்களான மணமக்களையே எதிர்பார்த்தீர்கள். என் மகனும் உங்கள் மகளைத்தான் இன்னமும் விரும்பிக்கொண்டிருக்கிறான். அதற்கு என்ன செய்ய? நானும் உங்களைப்போல ஒரு தகப்பன்தானே? என் பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்றுதானே நினைப்பேன். ஆதலால் உங்களை விட மிகவும் வசதியான ஒருவரின் மகளுக்கு என் மகனை மணமுடித்து வைக்க ஏற்பாடு நடந்துவிட்டது. வஸ்ஸலாம்.

இப்படிக்கு
கரீம் ஹாஜியார்.

தனது பிள்ளைகள் நன்றாயிருக்க வேண்டும் என்ற பெயரில், தான் பேராசைப்பட்டதை எண்ணி மனசு வெடித்தார் ஸாதிக் ஹாஜி. தன் மகளின் கனவுகள், தன் மகனின் ஆசைகள் எல்லாம் தன்னால் எரிக்கப்பட்டு விட்டதாய் உணர்ந்தார். அன்று அவர் பஸீனாவுக்கு செய்த அநியாயத்தால் வந்த பாவத்தைக் கழிக்கவே இப்போதெல்லாம் அதிக நேரத்தை பள்ளிவாசலில் கழிக்கிறாரோ என்னவோ!!!

Thursday, June 24, 2010

சிட்டுக்குருவி !



ரவீனா உயர்தரத்துக்கு தெரிவாகியிருந்த போது அதே வகுப்பில் படிப்பதற்காக தூர கிராமத்துலிருந்து வந்திருந்தாள் ஷியாமளா. வந்த புதிதில் யாருடனும் பெரிதாக ஒட்டிக் கொள்வதில்லை. தானும் தன் படிப்பும் என்றிருப்பாள். பாடசாலை இடைவேளை நேரத்தில்கூட யாருடனும் கலந்து கொள்வதில்லை. இவளுடைய இந்தப் போக்கு ரவீனாவுக்கு கவலையை ஏற்படுத்தியது. எனவே அவளே வலிய சென்று ஷியாமளாவுடன் பேச்சுக்கொடுத்தாள்.

ஷியாமளாவுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. புதிய பாடசாலைக்குப் போனால் அங்குள்ளவர்கள் முதலில் கதைத்தால் தானே சந்தோஷமாக இருக்கும். அந்த சந்தோஷத்தை ரவீனாவின் நட்பில் உணர்ந்தாள் ஷியாமளா. ஒவ்வொரு நாளும் சோகத்துடனேயே பாடசாலைக்கு வருவதில் உள்ள கஷ்டத்தை ஷியாமளா சொல்லாமலேயே ரவீனா புரிந்து கொண்டாள். ஷியா பிரிதொரு விடுதியிலிருந்தே பாடசாலைக்கு வருவதாய் ரவீனா எண்ணியிருந்தாள்.

‘ஏன் ஷியா இங்க உங்கட சொந்தக்காரங்க யாரும் இல்லயா?’

ரவீனாவின் இந்தக் கேள்வி ஷியாவுக்கு உள்ளூர வருத்தத்தை ஏற்படுத்தியது. ஷியாமளா விழித்தாள். விடை சொல்ல முடியாமல் தவித்தாள். ஷியாவின் மௌனம் யாரும் இல்லை என்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். அல்லது இருப்பவர்கள் பெரிய வசதிக்காரராய் இருந்து அவள் அங்கே தங்குவது பிடிக்காதவர்களாயிருக்கலாம். அதை ரவீனா ஊகித்துக்கொண்டாள்.

***************

ஷியாவுடைய பெரியம்மாவின் மகளான அபி டீச்சர் இந்தப் பிரபலமான பாடசாலையில்தான்; தமிழ் மொழி விசேட ஆசிரியராக கடமையாற்றிக் கொண்டிருந்தார். பாடசாலையில் அவருக்கு செல்வாக்கு அதிகம் என்று அவரே சொல்லித்தான் தெரியும். ஷியாவை எப்படியாவது அந்த பாடசாலையில் சேர்த்து படிக்க வைக்க பேரவா கொண்டார்கள் ஷியாவின்; பெற்றோர். தனது சகோதரியின் மகள் தனது மகளுக்கு உதவுவாள் என்ற நம்பிக்கை ஷியாவின் தாயாருக்கு இருந்தது.

அதே போல் தங்கள் வீட்டில் வந்து ஷியாவை தங்கியிருக்குமாறும் டியூஷன் வகுப்பு தேடித்தருவதாயும் அபி டீச்சர் சொன்னதால் அவர் தனக்கு பக்கபலமாக நின்று உதவுவாள் என்று ஷியாவும் எண்ணினாள். ஆனால் அவையெல்லாம் வெறும் பித்தலாட்டங்கள் என்று பிறகே தெரிந்தது.

அம்மா அப்பாவின் ஆசைப்படி நன்றாக படிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் மட்டுமே ஷியாவின் மனதில் படிந்திருந்தது. கிராமத்து பாடசாலையில் இருந்த உயிர்த்தோழிகளை மறந்தது, பசி தாகம் பாராமல் பொறுமையாக இருந்தது எல்லாம் லட்சியங்களை நனவாக்கிக் கொள்ளத்தானே.

ஆனால் அந்த அபி டீச்சருக்கு பாடசாலையில்; செல்வாக்கு இருந்ததே ஒழிய அவர் சொல்வாக்கில் தவறியவராகவே இருந்தார். தெரியாத இடத்தில் விடுதி தேடிப்போகுமாறு அடிக்கடி ஷியாவுக்கு கட்டளையிட்டார். தன் பிள்ளைக்கு சுகமில்லை என்றால்; ஷியா மேல் எரிந்து விழுந்தார். ஆயிரம் கனவுகளை சுமந்து பறந்து வந்த ஷியா எனும் சின்னச் சிட்டின் சிறகுகள் மாதம் ஒன்று செல்லும் முன்பே கத்தரிக்கப்பட்டன. படிப்பின் மீதுள்ள ஆர்வம் காரணமாக வாய் மூடி மௌனம் காத்தாள் ஷியா.

ஊரிலிருந்து அம்மா தொலைபேசியில் கதைக்கும் போதெல்லாம் தொண்டை அடைக்கும். அழுகை முட்டும். சிரிக்கவே தோன்றாது. அப்பா, தம்பியுடனும் கொஞ்சமாக பேசிவிட்டு வைத்துவிடுவாள். பிறகு தலையணை நனையும். தன் அக்காவுடன் மாத்திரம்; ஷியா கூடுதலாக ஒட்டுவதுண்டு. பாடசாலையில் உள்ள மாணவர்கள் ஷியாவுக்கு காதல் மனு போட்டதையெல்லாம் கூறுமளவுக்கு நெருக்கமாகப் பழகினார்கள் அவர்கள்.

ஆனால் இப்போது அருகில் அக்காவும் இருக்கவில்லை. ஓரிரு முறைதான் தொலைபேசியில் கதைத்தார். அப்போதும்கூட தன் பிரச்சனைகளை கூறவில்லை ஷியா. கூறவில்லை என்பதை விட கூறும் வாய்ப்பு இருக்கவில்லை. முதன்முதலாக தான் சந்தோஷமாக இருப்பதாயும் படிப்பதாயும் அக்காவிடம் பொய் சொன்னபோது உள்ளம் பற்றி எரிந்தது ஷியாவுக்கு.

இன்றைய காலத்தில் கல்விக்கு கொடுக்கப்படும் மதிப்பு மிகவும் உச்ச நிலையில் உள்ளது. வறுமைப்பட்டவர்களும் தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விருப்பம் மட்டும் இருந்;;தால் போதுமா? கல்வி மனதில் பதிவதற்கு என்றொரு சூழல் வேண்டுமே. அது கிடைக்காத போது படிபடி என்று சொல்லுவதில் அர்த்தமில்லை.

‘ஏய் என்ன யோசிக்கிற?’ அவளைப் பிடித்து உலுக்கிய போது சிந்தை கலைந்தாள் ஷியா.

‘எங்களுக்கு பெரிய வீடு இருக்கு. 3 பேர் இருக்கோம். அப்பா வியாபாரத்துக்காக வெளிநாட்டுக்குப் போனால் ஒரு மாசம் கழிச்சி வருவாரு. அம்மாகிட்ட சொல்லிட்டா நீயும் வந்து தங்கிக்கலாம். என்ன வர்ரியா?’

ஷியாவுக்கும் உண்மையில் வேறெங்காவது போனால் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. உடனே தாயாருடன் தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னாள் ஷியா. தன் மகள் படிக்கிறாள் என்று எண்ணியிருந்த பெற்றோருக்கு இந்த செய்தி உண்மையை உணரச்செய்தது. அவள் அங்கே படிக்கவில்லை. துடித்துப் போயிருக்கிறாள் என்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இப்போது ஷியா தன் தோழி ரவீனாவுடன் மிகவும் சந்தோஷமாயிருக்கிறாள். இரத்த பந்தத்தை விட இந்த உறவுகள் வலிமை கூடியது.

சிறகொடிக்கப்பட்டிருந்த சிட்டுக்குருவி ஷியாவின் ஆசைகள் மீண்டும் சிறகடிக்கத் தொடங்கி விட்டன!!!

என்னை அறிந்த போது !



கவின் தேனீரை குடிப்பா!

தயாள் அண்ணா என்னை எழுப்பிய போது நான் திடுக்கிட்டு எழுந்தேன். மணி ஆறைத் தாண்டும் முன் என்னை எழுப்பினால் நேரத்துக்கு வேலைக்கு போகலாம் என்பது அவருக்குத்தெரியும். ஏனெனில் கொஞ்சம் சுணங்கினாலும் எங்கள் மேலதிகாரி வசிட்டராகி விடுவார். ஏதோ என்னுடைய செலவுகளை கொஞ்சமாவது சமாளித்துக் கொள்ளவும் ஆத்திர அவசரமென்றால் லீவு போட்டுவிட்டு போவதற்கும் சுதந்திரம் உண்டு. அதனால் வேறு வேலைகளுக்கு போக நினைத்தாலும் இவற்றை நினைத்து மௌனியாகி விடுவேன்.

தயாள் அண்ணா ஊற்றித் தந்த தேனீரை வைத்துக் கொண்டு மிக்ஷர், பிஸ்கட் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். முடிந்து போயிருந்தது. வீட்டில் அப்பா ஏதாவது வாங்கி வைத்திருப்பார். எனக்கு யோகட், ஆப்பிள் இப்படி ஏதாவது சாப்பிடுவது பிடிக்கும்.

என்றாலும் நான் வீண் செலவுகளை செய்வதில்லை என்றபடியால் எதைக் கேட்டாலும் வசதி இருந்தால் தயாள் அண்ணா வாங்கித் தராமல் இருக்கமாட்டார். இந்த இடத்தில் இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. அன்றும் ஒரு நாள் அப்படித்தான். நான் ஏ.எல் செய்து கொண்டிருந்த காலமது. அவசரத்தில் சீசன் டிக்கட்டை எடுக்காமல் போய்விட்டேன். எனவே மீண்டும் வீட்டுக்குப்போய் அப்பாவிடம் காசு இருபது ரூபாயும் கேட்க வேண்டும் என்று எண்ணியவாறு வந்து கொண்டிருந்தேன். வீட்டு வாசலை நெருங்கும் போது...

‘அண்ணனைப் பாரு எப்பவாச்சும் காசு கேட்கிறானா... நீயும் வந்து வாச்சிருக்கியே’ என்று தம்பிக்கு அப்பா அர்ச்சனை செய்துகொண்டிருந்தார். நான் வந்த சுவடு கூட தெரியாமல் நழுவிப் போய்விட்டேன்.

எனக்கொன்றும் பெரிய வயதில்லை.  தயாள் அண்ணா இருக்கும் தைரியத்தில்தான் அம்மா என்னை தலைநகருக்கு அனுப்பியுள்ளார். ஆம் தயாள் அண்ணா இப்போது என் இலக்கிய நண்பன் மட்டுமல்ல. அறை நண்பனும் கூட. அவர் தற்போது தனியார் கம்பனியொன்றில் கணக்காளராக பணிபுரிகிறார்.

கவின் என்ன எழுதுகிறாய்? என்று என் பாடசாலை நண்பனொருவன் கேட்ட போது நான் எழுதியிருந்ததை அவனிடம் கொடுத்தேன். அது பாடல் வரிகளையும் உள்ளடக்கிய எனது கற்பனை. அதற்கு சிறியதொரு அங்கீகாரம் கூட கிடைக்கவில்லை. மாறாக அவன் மற்றவர்களுக்கும் அதைக்காட்டி என்னை ஏளனம் செய்தான். (தற்போது என் கவிதைகளை பத்;திரிகைகளில் பார்ப்பதும் அவனுடைய நண்பர்களிடம் என்னுடைய நண்பனென தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதும் வேறு கதை)

எனினும் நான் என் முயற்சிகளை நிறுத்தவில்லை. சில நாட்களில் என் வரிகளை பார்த்துவிட்டு பெரிய கவிஞர்களின் வரிகளை ‘காப்பி’ பண்ணியிருக்கிறான் என்பார்கள். அப்போதெல்லாம் ஆஹா அந்தளவிற்கு நன்றாகயிருக்கிறதா என்று மனசுக்குள் சிரித்துக் கொள்வேன்.

நான் வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவன் என்று அம்மாவும் கூறுவார். தரம் மூன்றிலிருந்த போதே என் பெற்றோர் பல கதைப் புத்தகங்களை வாங்கித் தந்திருக்கிறார்கள். தரம் ஆறு வரைக்கும் பல போட்டிகளிலும் கலந்து கொண்டிருந்தேன். ஆனால் என்னை அடிக்கடி பாடசாலை மாற்றியதால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை என்னை வறுத்தெடுத்து செயலிழக்கச் செய்தது. இப்படி நாம் ஊர் விட்டு ஊர் செல்லக் காரணம் அம்மாவின் இடமாற்றம் என்பதை விட எங்கள் அப்பாவின் சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த வாக்குவாதம் என்று பின்னாட்களில் அறிந்தேன்.

என் சிறு பராயத்தில் எல்லாம் முதல் ஐந்து நிலைகளுக்குள் வந்த நான் மற்ற பாடசாலைகளில் ஒன்பதுக்கும் பிற்பட்ட ஸ்தானத்துக்கு வந்தபோது முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து யாருக்கும் தெரியாமல் அழுதிருக்கிறேன்.

அம்மாவைத் தவிர அனைவரும் என்னை குறைத்து மதிப்பிடும் போதெல்லாம் எனக்கென்று அன்பு காட்ட யாராவது இருந்தால்... என்றெண்ணியெல்லாம் உள்ளுக்குள் மருகியிருக்கிறேன்.

ஏதோ வாழ்க்கையை கடந்து கொண்டிருந்த போது என் வகுப்பு நண்பர்களுக்கும் உயர் வகுப்பு அண்ணாமார்களுக்கும் இடையில் பாடசாலையில் சண்டை நடந்தது. ஆனாலும் அதில் கொஞ்சமும் சம்பந்தப்படாத நானும் அம்மாவின் முன்னாலேயே அதிபரால் தண்டிக்கப்பட்டபோது வாழ்க்கை மீதிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போயிற்று. அம்மாவின் முகம் பார்க்க முடியாதளவுக்கு வேதனையாயிருந்தது. அதற்கான காரண கர்த்தாக்கள் சில ஆசிரியர்களே என்றபோது அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் எமது முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள் என்றும் உதட்டில் தேனும் நெஞ்சில் விஷமுடனும் பேசுபவர்கள் என்று சொல்லி அம்மா என்னை தேற்றினார்.

எப்படியோ புதிய பாடசாலையில் இருந்த மூன்று வருடங்களும் படிக்க முடியாதவர்களுடனேயே நட்புகொள்ள முடிந்தது. கெட்டிக்காரப் பிள்ளைகள் ஒரு ஆசிரியையின் மகன் என்றுகூட எண்ணாமல் என்னை ஒதுக்கியது ரொம்பவும் வருத்தமாயிருந்தது. பிறகு நான் சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகியிருந்ததால் என் சுட்டித் தனங்கள் யாவும் தற்காலிகமாக விடை பெற்றோடின. பின்னே? என் குடும்பத்தார் யாவரும் படித்து பெரியவர்களாயிருக்கும் போது நான் மட்டும் இப்படியே இருப்பதா என்ற சவாலுடன் பரீட்சைக்கு என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். என் தாயும், தந்தையும், சகோதரர்களும் எனக்கு பேருதவியாய் இருந்தார்கள்.

இந்த நேரம் பார்த்துத்தான் அந்த சந்தோஷமானதும் சங்கடமானதுமான செய்தியை என் சின்னம்மா என்னிடம் கூறினார். என் தங்கை பருவமடைந்திருந்தாள். ஒருவாறு மற்ற அனைத்து அத்தை பெரியம்மாமாருக்கும் சாடைமாடையாக விஷயத்தைச் சொல்லி வீட்டுக்கு வருமாறு கூறினேன்.

பின்பு நான் உயர்தரத்துக்கும் தெரிவாகியிருந்ததுடன் அறநெறி பாடசாலையில் ஆசிரியனாகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். இடைப்பட்ட இந்த காலத்திலேயே என் வாழ்வின் திருப்புமுனை ஏற்பட்டதென்று சொல்ல வேண்டும். மனதில் தோன்றிய அத்தனையையும் கவிதைகளாக மொழி பெயர்த்தேன். அவற்றை பத்திரிகைகளுக்கும் அனுப்புமாறு அம்மா சொன்னார். நன்றாய் இருந்திருக்க வேண்டும். மாதமொன்று செல்லு முன்பே பிரசுரமாகியிருந்தது.

எத்தனை மகிழ்ச்சி! எத்தனை கூச்சல்!! இதையெல்லாம் காட்டிய பின்பு ஷஇங்க பாருடா கழுதை கவிதை எழுதுது| என்று என்னை கேவலப்படுத்திய நண்பன், தன் காதலிக்கு கொடுப்பதற்காக என்னிடம் கவிதை எழுதி கேட்கத் தொடங்கினான். நான் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை. அவன் அசடு வழிந்தான். எனினும் மென்மேலும் என் திறமையை வளர்க்கும் முயற்சிக்கு உத்தரவாதங்கள் இருக்கவில்லை. எப்படி எழுதுவது, எதில் எழுதுவது என்று தெரியாமல் அவஸ்தை பட்டிருக்கிறேன். அப்படியிருக்கையில் ‘கவின் உனக்கொரு கடிதம் வந்திருக்கு’ என்று அம்மா கூறினார்.

முக்கியமானதொரு விடயத்தைக் கூற மறந்துவிட்டேன். உயர்தர வகுப்பில் இருந்த காலத்தில் சின்னதாய் ஒரு காதல் அரும்பியது. ஆனால் அவளுக்கு அப்படியிருந்திருக்காது. என்னைப் பார்த்து ஒரு நாளாவது வெட்கப்பட்டதில்லை. நகம் கடித்ததில்லை. நிலத்தில் கால் விரலால் கோலம் போட்டதுமில்லை. எனவே நட்பு ரீதியாகவேனும் கடிதம் போடுவதென்றால் எனக்கு அவளைத்தவிர யாரும் இருக்கவில்லை. அவளே இல்லை என்று ஆன பிறகு இப்போது யாராக இருக்கும்? என்று கலவரமடைந்தேன். கடிதத்தை வாசிக்க வாசிக்க கலக்கமும் சந்தோஷமும் ஒன்றாக உற்பத்தியானது. சாராம்சம் இதுதான்.

நான் தயாள். எழுத்தாளன். 

உங்கள் கவிதைகளின் தரம்பற்றி என் நண்பன் கூற கேட்டேன். 
கருத்துக்களை பரிமாறிக் கொள்ளலாம். தொடர்பு கொள்க.

- தயாள்.

ஓரிரு மாதங்களுக்குள் என் படைப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரமா? அல்லது வேறு யாருடைய கவிதை வரிகளாவது தெரியாமல் என் கவிதைகளில் உள்ளடக்கப்பட்டு விட்டதா என்ற பயம் என்னைத் தின்றது. தயங்கிய படியே கோல் பண்ணிய போது தயாள் அண்ணா மிக அன்புடன் கதைத்தார். என் கவிதைகள் பற்றி சிலாகித்து பேசினார். நன்றாக எழுதுவதாக சொன்னார். என் நண்பர்களுடன் அவரை ஒப்பிட்டு வியந்தேன்.

நாட்கள் செல்லச் செல்ல நானும் தயாள் அண்ணாவும் மரியாதை எனும் போர்வையிலிருந்து விலகி அன்பென்ற பந்தலுக்குள் இணைந்து கொண்டோம். நீண்ட ஒரு விடுமுறையின் போது தயாள் அண்ணா எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தபோதே இலக்கியத்தின் சுவை உணர்ந்து அதையே மூச்சாக எண்ணி செயல்பட்டேன் நான். இதைப் பார்த்து இலக்கியம் சோறு போடுமா என்று என்னை பரிகசித்தவர்களும் இருக்கிறார்கள். எனினும் என் இலக்கிய வேட்கைக்கு நல்ல பதிலை தயாள் அண்ணா தந்துகொண்டிருந்தார். அவர் தலை நகரில் வீடெடுத்தவுடனேயே என்னையும் அழைத்துக்கொண்டார்.

இங்கு வந்த பிறகுதான் நான் புதிய உலகமொன்றை கண்டு கொண்டேன். இலக்கியத்தின் நுணுக்கங்களை கற்றுத்தந்தார். என் சிறுசிறு குறைகளை சீர்படுத்தினார். எதிர்மாறான எண்ணங்களிலும் பல சிக்கல்களிலும் துவண்டிருந்த என்னை உற்சாகப்படுத்தினார். ஷஎன் நண்பன் துணிச்சல்காரன்| என்று சொல்லி என்னைப் பாராட்டினார்.

தலை நகரில் நடக்கின்ற பல இலக்கிய விழாக்களையும் நான் தரிசிக்கக் காரணம் அவரே. பிரபலமான எழுத்தாளர்களும், ஊடகவியலாளர்களும் என்னுடனும் பேசும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்தது தெரியுமா? என் குடும்பத்தார்கூட மிகவும் மகிழ்ச்சியடைந்தார்களே.

தற்போது நானும் ஒரு அறியப்பட்ட எழுத்தாளன். முழுக்காரணமும் என் தயாள் அண்ணாதான். அவருடைய மேலீடு இல்லாமல் என்னால் எதையும் சாதிக்க முடியாது. நான் அவரை மிக மதிக்கிறேன். நேசிக்கின்றேன்!!!

சிதைவு !


சாருமதி தலையில் அடித்து அழுது கொண்டாள். தன் வாழ்க்கை தன்னாலேயே இப்படி போகும் என்று அவள் நினைக்கவில்லை. உண்மையில் அவள் இப்படி அலறி அழுவதற்கான காரணம் தன் வாழ்க்கை தடம் மாறிப்போனதா? அல்லது அதோ அங்கே பைத்தியம் தெளிந்தும் தலைவிரி கோலமாய் நின்று தனக்குத்தானே ஏதோ சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருக்கிறாளே தங்கை புவனா, அவளைப் பார்த்தா?

எப்படியோ தன் பிடிவாதத்தால தான் எல்லாமே நடந்தது என்று எண்ணம் வரும்போதெல்லாம் உடம்பெல்லாம் கொதிக்கும் எண்ணெய் கொட்டியது போல உணர்வாள்.

தாயிருந்தும் தனியாக வளர்ந்தவர்கள் தாம் இருவரும். தந்தையின் மறைவுக்குப் பின் சாரு தாயாயிருந்து தங்கையைப்; பார்த்தாள். அப்போது மிஞ்சிப் போனால் அவளுக்கு இருபத்;து மூன்று வயது கூட இருக்காது. படிப்பையும் வேலையையும் ஒரே நேரத்தில் கவனித்து ஒருவாறு சமாளித்து வந்தாள்.

அவளும் பெண் தானே? வாழ்க்கையைப்பற்றி அவளுக்கும் கனவுகள் இருக்கவே செய்தது. தனது தகுதிக்கேற்ற ஒருவன் கிடைக்கும் வரை காத்திருந்தாள். எல்லோரும் வீடு ரொக்கமாகப் பணம் கேட்டு பெண் பார்த்தார்களே தவிர அவளது உள்ளத்தை பார்க்க யாரும் இருக்கவில்லை.

ஆம்! வந்தான் நரேன். அவளது கனவு கற்பனை எல்லாவற்றிற்கும் உயிரூட்டுவது போலவே அவனிருந்தான். சாருவின் மனசை போட்டு பிழிந்து அவளது சந்தோஷங்களை உறிஞ்சிக் கொண்டிருந்தான். உறக்கம் வராத இரவுகளை புதிதாக தந்து கொண்டிருந்தான். ஆனால் தப்பியும் அவள் தன் உணர்வுகளை அவனுக்கு காட்டிக் கொள்ளவில்லை.

அவனுக்குள்ளும் ஷீலா என்றொருத்தி நான்கு வருடங்களாக வாழ்ந்துகொண்டிருந்தாள். அந்த ஷீலாவை அவனால் இன்னமும் மறக்க முடியவில்லை. அவனையே தன் மூச்சு என்றவள் அவன் வாசமே தன் வாழ்க்கை என்றவள் காலத்தின் கட்டாயங்களுக்கு கட்டுப்பட்டு இன்னொருவனை மணமுடித்துக்கொண்டு போனாள். சில ஆண்களைப் போல் அல்லாமல் அவளது வாழ்வு சிறப்பாய் அமைய இறைவனை வேண்டினான் அவன். மறக்க வேண்டும் என்று நினைத்தவைகள் யாவும் ஏனோ மீண்டும் மீண்டும் வந்து அவனை தொல்லைப்படுத்தின. அவற்றையெல்லாம் துரத்தியடிக்க முடியாமல் திணறிய அவன் குடி, சிகரட் போன்ற பழக்கங்கள் இல்லாததால் தன் மனசில் புயலடித்தவைகளுக்கு எழுத்துருவம் கொடுக்கத் தொடங்கினான். கவிதை எழுதத்தொடங்கினான்.

அந்த கவிதை சாருவையும் நரேனையும் நண்பர்களாக்கின. தன்னையும் மீறி, தன் கட்டுப்பாடு இழப்பதை அவளாலும் தடை செய்து கொள்ள முடியவில்லை. ஆகவே உள்ளுக்குள் வைத்திருந்த ஆசைகள் பார்வைகளாய் வெளிப்பட்டன. சூடு கண்ட ஆணல்லவா? புரிந்தாலும் அவன் சும்மாயிருந்தான்.

எத்தனை முறை அவன் விலகிப் போனாலும் சாருவின் மனது அவனையே விரும்பியது. எப்போதாவது அவனுடன் தொலைபேசியில் உரையாடியவளுக்கு எப்போதுமே அவனுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது. இறுதியில் காதல் தீ பற்றிக்கொண்டது.

‘நரேன் என்ன ஏமாத்திட மாட்டிங்களே?’

அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் அவள் மறக்காமல் கேட்கும் கேள்வி இது. ஏற்கனவே ஷீலாவின் மூலம் ஏமாற்றத்தின் வலி கண்டிருந்தவன் தன்னால் அந்த வலி யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாயிருந்தான். இப்படியிருக்க சாபம் போல வந்து வாய்த்தான் சாருமதியின் நண்பன் சுதன்.

சுதனின் சிரிப்புகளுக்கிடையே ஊர்ந்து திரியும் பொய்மையை சாரு விளங்காததுபற்றி நரேனுக்கு பெரும் ஆச்சரியம். அட்டைக்கு மெத்தை எப்போதுமே பிடிப்பதில்லையே? அப்படியிருக்க இப்படிப்பட்ட ஒருவன் சாருவின் பார்வைக்கு கூட தகுதியில்லாதபோது அவனை எப்படி இவளால் நண்பனாக ஏற்க முடியும் என எண்ணி குழம்பியிருக்கிறான்.

சுதனின் நடவடிக்கை பற்றி நரேன் கூறுகையில், தன் ஐந்து வருட நட்பு என்று கதையை ஓரங்கட்டி விடுவாள். மிஞ்சி ஏதாவது பேசினால் சுதனின் நட்புக்கு பிறகுதான் உன் காதல் என்பாள். அன்புக்கும் காதலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் புரியாதபடிக்கு நரேன் வேண்டப்படாதவன் ஆகிவிட்டான்.
‘நட்பு படலை வரைக்கும்’ என்ற முதுமொழி மாறி, வீடு வரைக்கும் சாரு சுதனை அனுமதித்திருந்தாள். நரேன் கூட இதுவரை அவள் வீட்டுக்குப் போனதில்லை. இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு ஒரு ஆண் செல்வது சமூகத்தில் தமக்கிருக்கும் மரியாதையை குறைக்கும் என்பது படிப்பறிவுள்ள அவனுக்கு விளங்கியது. சில இரவுகளில் கோல் பண்ணுகையில் சுதனும் இருப்பதாக சாரு கூறுவாள். இரவு பத்தரை மணி வரை சுதன் என்ன செய்கிறான் என்று நரேனால் கேட்க முடியவில்லை.

சந்தேகம் சந்தோஷத்தை தின்றுவிடும் என்பதால் சும்மாயிருந்தான். காலம் யாருக்காகவும் காத்திருக்காதே. காதலில் விழுந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் நரேனின் தொலைபேசிக்கு மிரட்டல் அழைப்புகள் வரத் தொடங்கிற்று. சாருவை விட்டு விலகும்படி அந்த மிரட்டல் அமைந்திருந்தது. தான் காதலிப்பவளைப் பற்றி ஒருவன் இப்படி கூறினால் எந்த ஆணுக்குத்தான் கோபம் வராது? என்றாலும் நரேன் பொறுத்தான். ஏனெனில் திக்கித்திணறி பேசும் இவன் சுதன் தான் என்பது புரிய நரேனுக்கு வெகுகாலம் செல்லவில்லை.

ஒரு நாள் அலுவலகம்விட்டு வந்து கொண்டிருந்த நரேன் அந்தக் காட்சியைக் கண்டு இரத்தம் உறைந்து போனான். சாருவின் தங்கை புவனா சுதனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். எதேச்சையாக திரும்பியவர்கள் இவனைக் கண்டு திக்குமுக்காடிப் போனார்கள். சுதனின் இந்த நாடகம் சாருவுக்குத் தெரியவில்லை. அவளைப் பொறுத்தளவில் தங்கையும் நண்பனும் தங்கங்கள்.

நரேன் அப்போதைக்கு எதுவும் பேசாதது மாத்திரமன்றி இது பற்றி சாருவிடமும் சொல்லவில்லை. சாருவிடம் சொல்லாமல் விடுவதுதான் பிற்காலத்தில் தனக்கு எமனாய் அமையும் என்று எண்ணவில்லை. வாழ்க்கை துணைவனாக வரப் போகும் நரேனை விட வழித்துணையாய் வரும் சுதன் பெரிதாக தோன்றினானா சாருவுக்கு? நரேன் புவனா மேல் மையல் கொண்டவன் என்பது போல் மாயையை தோற்றுவித்தான் சுதன். எதுவுமே தெரியாமல் தன்னையே சுதனிடம் இழக்குமளவுக்கு புவனா சுதனை காதலித்துத் தீர்த்தாள்.

விதி விளையாடிற்று. ஒரு நாள் பாதையோரத்தில் நஞ்சருந்தி மயங்கி விழுந்து கிடந்த புவனாவை நரேன் தூக்கி வரவும், எதிர்பாரா விதமாக அவ்வழியால் சாரு வரவும் சரியாயிருந்தது. சாருவிடம் சுதன் கூறியிருந்த பொய் அக்கணத்தில் வேதவாக்காய் மாறியது. புவனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். அவளது கர்ப்பத்துக்கு காரணம் நான்தான் என சாருவின் முன்னலேயே ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நரேன் இருந்தான். காதலில் விரிசல் விழ, நரேனும் சாருவும் சந்தோஷித்த காலம் எல்லாம் கண் முன்வந்து ஏளனமாய்; சிரித்தன.

மாதங்கள் இரண்டு கடந்த நிலையில் தங்கை குணமானாள். கண் விழித்தவுடனேயே நரேனைக் கேட்டாள். சாருவுக்கு கோபம் தலைக்கேற பச்சையாகவே திட்டினாள். நரேனை துரோகி என்றாள். நயவஞ்சகன் என்றாள். விஷயமறிந்து துடிதுடித்தாள் புவனா.

உண்மையில் தன் கர்ப்பத்துக்கு காரணம் நரேனல்ல. அந்த ராஸ்கல் சுதன் என்றும், எல்லாம் முடிந்த பின் தன்னிடமே சாருவை காதலிப்பதாய் கூறி அவன் தம்மை ஏமாற்றிவிட்டதையும் கூறினாள். புவனா மூலம் இவற்றைக் கேட்ட போது சாருவுக்கு உறைத்தது. ஒரு முறையேனும் சுதன் வைத்தியசாலை வந்து பார்க்காததும் ஞாபகம் வந்து தொலைத்தது.

எல்லாம் முடிந்து போயிற்று. கள்ளுக்கும் பாலுக்குமிடையே உள்ள வித்தியாசம் நன்றாகவே புரிந்தது சாருவுக்கு. இனி எத்தனைக்கும் நரேன் தனக்கில்லை என்று எண்ணியபோது நெஞ்சுக்குள் கடுமையாய் வலித்தது. சுவாசிக்க மறந்து தகிக்கும் அவளால் அப்போதைக்கு ஆழ்ந்த பெருமூச்சொன்றை மட்டுமே வெளியிட முடியுமாயிருந்தது!!!

ஓயாத நினைவலைகள் !



என் உள்ளம் உள்ளூர அழுது கொண்டது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு டீச்சரை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன். இன்று லீவு போடுமாறு கணவருக்கும் சொல்லிவிட்டு உம்மாவையும் அழைத்துக்கொண்டு டீச்சரைப் பார்க்க புறப்பட்டோம். ஆனால் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை எப்படியிருந்த டீச்சர்? இன்று இப்படி உருக்குலைந்து...

***************

நசீமா டீச்சர்!

பாடசாலை வாழ்க்கை பற்றிய எண்ணங்களின் போதெல்லாம் இந்த நசீமா டீச்சரின் ஞாபகம் வரத் தவறியதேயில்லை. அவர் மீது அளப்பரிய அன்பு எனக்கு. சின்ன வயதில் நான் படு சுட்டியாக இருந்தேன் என்று அடிக்கடி என் உம்மா கூறி சிரிப்பதுண்டு. டீச்சரும் என் குறும்புத் தனங்களை கூறி ‘இவள் ரொம்ப திறமைசாலியா வரணும்’ என்று துஆ கேட்டது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. உம்மாவின் உயிர்த் தோழியான ஆதிலா மாமியை விடவும் நசீமா டீச்சரை ரொம்பப் பிடிக்கும் எனக்கு.

நான் முதலாம் ஆண்டுக்கு செல்லும் போதே அவர் அங்கிருந்தார். எங்கள் ‘பெரிய சேரின்’ மனைவி தான் அவர். சேருக்கும் என் மீது பிரியம் அதிகம். மொண்டசூரி போகும் போதும் உம்மா அந்த பாடசாலைக்கு என்னை கூட்டிச் சென்றிருப்பதால் பெரிய சேரை நானும் அறிந்திருந்தேன். அவர் எனக்கு சொக்கலேட் தராத நாட்களில் அவருடன் பேசாமல் வந்ததை நினைத்தால் இப்போதும் எனக்கு சிரிப்பு வருகிறது. அன்றும் அப்படித்தான். சேருடன் கதைத்துக் கொண்டிருந்த போது டீச்சர் வந்தார்.

‘டீச்சர் கொஞ்சம் வெளியில போங்க சேருடன் தனியா பேசணும்’ என்றேன்.

கோபம் வந்திருக்காது தானே? சிரித்து விட்டு பேசாமல் பைலை பார்த்துக் கொண்டிருந்தார் டீச்சர். எனக்கோ கோபம் தலையுச்சிக்கு ஏறியது. மேசைக்கு முன்னால் சுவாரசியமாக என் கதைகளை கேட்டுக் கொண்டிருந்த பெரிய சேரிடம்,

‘சேர் இவங்கள வெளிய போக சொல்லுங்க’ என முறையிட்டேன்.

சேரும் என்ன நினைத்தாரோ ‘நசீமா டீச்சர் கொஞ்சம் அங்கால போங்க’ என்று கதவு இருந்த பக்கத்தைக் காட்டினார்.

எனக்கோ மிகவும் சந்தோஷம். மழலை மொழியில் மிச்ச மீதியிருந்த கதைகளை சொல்லிவிட்டு உம்மா படித்துக் கொடுத்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்புக்கு ஓடிவிட்டேன். டீச்சர் என்னை வாஞ்சையோடு அணைத்துக் கொள்வார். பல கதைகள் சொல்லித் தருவார்.

வீட்டில் செய்து கொண்டு வரும் சிற்றுண்டிகளையும்  எனக்குத் தருவார். ஸ்டாப் ரூமில் அனைத்து ஆசிரியைகளும் சாப்பிடும்போது சிலநேரம் என்னையும் உம்மா கூப்பிட்டுக் கொள்வார். அப்போது  நசீமா டீச்சர்;, தான் செய்து கொண்டு வந்த உணவுகளையும் தந்து என்னை சாப்பிடச் சொல்வார்.

கொஞ்சம் என் சுட்டித் தனங்கள் குறைந்தது தெரிந்த போது, உம்மா டீச்சரின் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அங்கு அவரது இரண்டு மகன்மார் இருந்தார்கள். நளீர் நானா மீதுதான் நான் அதிகமாக இரக்கம் வைத்திருந்தேன். அவர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். பழகுவதற்கு இனிமையானவர். மற்றவர் காமில். அதிகம் பேசமாட்டார். கழுவும் மீனில் நழுவும் மீனைப் போல சிரித்தும் சிரிக்காமலும் சென்றுவிடுவார்.

உம்மாவுக்கு அப்போது என் தம்பி பிறந்திருக்கவில்லை. அதனால் ஆண் பிள்ளையின் கனவை டீச்சரின் மகன்மாரிடம் நனவாக்கிக் கொண்டிருந்தார் உம்மா. டீச்சருக்கு பெண் பிள்ளைகள் இல்லை. நான் தான் நானாமார் இருவருக்கும் தங்கை என கூறி மகிழ்வார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சித்தியடைந்தவுடனேயே நானும் வேறு பாடசாலைக்கு போய்விட்டேன். அதன் பிறகு டீச்சர் பென்ஷன் போயிருக்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது டீச்சரின் தரிசனம் பெறாமல் போவதில்லை. நானும் சிறுமி என்ற ஸ்தானத்தில் இருந்து ஒரு படி உயர்ந்திருந்ததால் எனக்கும் பெரிய சேருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி இருந்தது.

என் உம்மாவுக்கோ டீச்சருக்கோ நானும் நானாhமாரும் முன்போல் பழகுவதில் சங்கடங்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் யௌவன வயதுடையவர்கள் என்பதால் எம்மிடையே வேரூன்றப்பட்ட சகோதர உறவு கூட ஒரு சிரிப்புடன் மாத்திரம் மட்டுப்பட்டுவிட்டது.

காலச் சக்கரம் வேகமாக சுழன்றது. சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஊருக்கு வந்திருந்தபோது நளீர் நானா வேலை கிடைத்து கொழும்புக்கு போயிருப்பதாய் சொன்னார்கள். காமில் ஏ.எல் செய்து கொண்டிருந்தார். எனக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று தினமும் அல்லாஹ்விடம் வேண்டுவதாக டீச்சர் சொல்லும் போதெல்லாம் என் காதோரம் சிவத்துப் போகும்.

***************

நானும் தற்போது திருமணம் செய்;து தலைநகரம் வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. என் திருமணத்துக்கும் டீச்சர் வரவில்லை. ‘என்னை பார்க்க வராமல் என்ன செய்தாராம்’ என்று நான் அழுதேன். இதற்கிடையில் டீச்சரும் குடும்பம் சகிதம் மட்டக்குளியில் இருப்பது தெரிந்தது. நளீர் நானாவின் திருமணம் முடிந்துவிட்டது.

ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் இடம் தேடியலைந்து வீட்டைக் கண்டு பிடித்தபோது பெரியதொரு சாதனையை செய்துவிட்டது போல இருந்தது. போதாத குறைக்கு மதிய உணவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் டீச்சர். அங்கு போய் டீச்சரைப் பார்த்த முதல் வினாடியே மனசைப் போட்டு பிசைவது போல வலித்தது. ஏன் வந்தோம் என்று எண்ணினேன். டீச்சர் முகம் வெளுத்து தலை நரைத்து, வேறு யாரோ போல் இருந்தார்.

கடந்த இரு வருடங்களுக்கு முதல் டீச்சருக்கு சுகவீனம் ஏற்பட்டதாம் அதனாலேயே என் திருமணத்துக்கு வரவில்லை என்றபோது என் முகத்தை வேறெங்காவது கொண்டுபோய் வைக்க முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

நாம் வரும் மகிழ்ச்சியில்தான் இன்று இந்த அளவுக்காவது எழுந்து நடமாடுவதாக சேர் சொன்னபோது ஆனந்தம் பரவினாலும் சமையல்காரியின் உதவியுடன் எமக்காக அனைத்தும் தயாரித்ததை அறிந்து துடித்துப் போனேன். செல்லமாக கோபித்தேன். உம்மாவும் வெகுவாக கலங்கித்தான் போனார்.

உம்மாவுக்கும் டீச்சருக்கும் தேநீர் கொடுப்பதற்காக டீச்சரின் அறைக்கு நுழைந்தபோது, தாம் இளம் ஆசிரியைகளாக இருந்தபோது பாடசாலையின் அபிவிருத்திக்காக பட்டபாட்டை இருவருமாக கதையளந்து கொண்டிருந்தனர். நானாமாரும் வெளியில் போயிருந்ததால் பெரிய சேர்தான் என் கணவருக்கு பிஸ்கட், தேனீர் முதலியவற்றை கொடுத்துக்கொண்டிருந்தார்.

நிறைய நேரம் உம்மாவையும் டீச்சரையும் பேசவிட்டு நாம் முன் அறையில் இருந்தோம். வீட்டுக்கு வர வேண்டிய நேரம் நெருங்கவே டீச்சருக்கு தெரிவித்துவிட்டு அவரின் நலனுக்காக ப்ரார்த்தித்தவாறு வெளியே வந்தோம். பெரிய சேரின் கண்கள் கலங்கியதை காணத் தவறவில்லையாயினும் காட்டிக்கொள்ளவில்லை. கேட்டை விட்டு வெளியே வந்ததும் பீறிட்டுப் பாய்ந்த கண்ணீரை கணவருக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன்!!!

கானல் நீர் !


தேவாவின் மனைவி முதலில் அதிர்ச்சியடைந்தாலும் கணவனது உள்ளம் குழுந்தைகளுக்காக ஏங்குவது கண்டு தலையாட்டினாள். அதனால் நாளை காலை கேட்டுவிட வேண்டும் என திடசங்கற்பம் பூண்டவனாக உறங்கினான் தேவா. அவன் கனவில் அந்தக் குழந்தையை தூக்கி முத்தமிட்டு, விளையாட்டுப் பொருட்களாய் வாங்கி அடுக்கி.. எத்தனை ஆசைகள்? எத்தனை கற்பனைகள்?

***************

மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தனர். பிச்சைக்காரப் பெண்ணை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர். அந்த பிஞ்சு முகம் இன்று நிர்ச்சலமாக இருந்தது. சதாவும் முகத்தை சுருக்கிக்கொண்டு சிணுங்கும் அந்தக் குழந்தை இன்று இப்படி அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பதை எல்லோருமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள். குழந்தை அழவில்லை என்பதற்காக அதைப்போட்டு அடித்த அடியில் மூர்ச்சையாகி...

பிச்சைக்காரியின் முகத்தில் சிறிதும் சலனமிருக்கவில்லை. அவளைப் பார்க்கும் போது தாய்ப் பாசம் என தரணியில் பேசப்படும் யாவும் பிழைத்துப் போனது போல் தோன்றிற்று. தாயின் சேலையை சப்பிக்கொண்டும் அடம் பிடித்தழுது கொண்டும் வலம் வரும் அந்த குழந்தை.. தாயைப் போலவே எப்போதுமே கையை விரித்து பணம் கேட்டவாறு வரும் அந்தக் குழந்தை இப்படி பேச்சு மூச்சற்று கிடக்கிறதே!

அன்றும் அப்படித்தான். தேவா அலுவலகம் செல்வதற்கு வழக்கமாக ஏறும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். அயன் பண்ணிய நீளக் கை ஷேர்ட், பேர்ப்யூம் வாசனை என அழகனாகச் செல்லும் அவன் வசதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான்.

கழிந்து போன இளமையின் நினைவுகளில் மூழ்கிப் போயிருந்த அவன் அக்குழந்தை அவனது தோற்பட்டையை தொடும் வரை சுய நினைவுக்கு வரவில்லை. திரும்பிப் பார்த்தான். அவன் கண்களில் அனல் தெரித்தது. இளையான்கள் மூக்கைச் சூழ்ந்திருக்க ஏதோ மிச்சம் மீதிகளை சாப்பிட்ட கையுடன் அவனைத் தொட்டதால் ஷேர்ட் அழுக்காகி இருந்தது. குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும்போது அது உதைத்தால் நாம் மீண்டும் குழந்தையை உதைக்கிறோமா? இல்லையே. அவனும் அந்தரப்பட்டுப் போனான். ஒரு கணம் முறைத்துப் பார்த்தான். இவன் முறைக்கிறானா சிரிக்கிறானா என அறியாத குழந்தை அவனைப் பார்த்து அழகாய் சிரித்தது. அதைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சுரீர் என்றது.

‘ச்சீ... பச்ச புள்ளய போய் கோவிச்சிக்கிறமே?’

அப்படியே பாசம் வந்து கொட்டினாலும் தூக்கிக் கொஞ்சத்தான் முடியுமா? பஸ்ஸிலுள்ளவர்கள் இவனை வினோதமாக பார்க்க மாட்டார்களா? பேசாமல் திரும்பிக்கொண்டான். அன்றைய நாள் முழுவதும் அந்த குழந்தை அவனது நினைவுகளில் வந்துபோனது. வேலை முடிந்து வீட்டுக்குப்போகையில் வழக்கம் போலவே அன்றும் மனைவி அழுது கொண்டிருந்தாள்.

ஆண்டவா! இந்த பிரச்சினைக்கு முடிவு எப்போது வருமோ? சில வேளைகளில் நேரம் கெட்ட நேரத்தில் அழுது கொண்டிருக்கும் மனைவியை பார்த்து கோபம் வரும். என்றாலும் இவளை சதாவும் குறை சொல்லும் அயல் வீட்டுப் பெண்களையும்; எத்தனை முறை கண்டித்தாயிற்று? இவனிலும் அவளிலும் எந்தக் குறையுமில்லை. ஏனோ ஆண்டவன் குழந்தை பாக்கியத்தை இவர்களுக்குக் கொடுக்கவில்லை. இவளது தங்கையின் பிள்ளைகளை வாரியணைத்து இருவருமாக கொஞ்சும் போது அதைப் பார்ப்பவர்களுக்கும் இயற்கை மீது கோபம் கோபமாய் வரும்.

கவனிப்பாரற்று கிடப்பதால்தானே அந்தக்குழந்தை இப்படி இருக்கிறது? ஒழுங்காக குளிப்பாட்டி அழகாய் அணிவித்தால்? இவன் ஆசைப்பட்டு என்ன பயன்? மனைவியும் அம்மாவும் சம்மதிக்க வேண்டுமே? அது சாத்தியப்படக் கூடிய ஒன்றா? பலவாறு சிந்தித்தான். தினமும் அழுது கொண்டே பஸ் ஏறும் பிச்சைக்காரியிடம் என்னவென்று போய் பேசுவது? வாய்க்கு வந்தது போல அவள் ஏதாவது சொல்லி விட்டால் பெருத்த அவமானமாக போய் விடுமே.

அன்றொருநாள் கூட யாரோ ஒரு பெண் தன் பிள்ளைக்கு வைத்திருந்த பிஸ்கட்டை இந்தக் குழந்தைக்கு கொடுத்ததற்காக எப்படியெல்லாம் வசைபாடினாள் இந்தப் பிச்சைக்காரி? அந்த பெண்ணின் முகம் வெட்கத்தால் அப்படியே சிவந்து போயிற்றே. அப்பேர்ப்பட்ட இவளிடம் போய் ‘உன் பிள்ளையை தத்ததெடுக்கவா?’ என்று கேட்க முடியுமா? இன்னொரு நாள் வழக்கமாக அவள் அந்த குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது குழந்தை. அதை தட்டியெழுப்பினாள் அந்தத்தாய். பார்த்துக் கொண்டிருந்த இவனுக்கு பெரும் ஆச்சரியமாய் போயிற்று.

வேலையில்லாத நாட்களிலும் அவன் நேர காலத்துடன் எழும்பினால் இன்னும் கொஞ்சம் தூங்கி எழுமாறு கூறும் இவனது அம்மா எங்கே? தூங்கும் பச்சைப் பிள்ளையை எழுப்பி விடும் அவள் எங்கே? மீண்டும் கவனித்தான். குழந்தை மீண்டும் அவளது தோளில் சாயும் போது அவள் அங்குமிங்கும் நோட்டம் விட்டாள். இவன் ; பார்ப்பதை அவள் காணவில்லை போலும். யாரும் அறியாத வண்ணம் குழந்தையின் தொடையில் கிள்ள, குழந்தை வீறிட்டுக் கதறி அழுதது. அவன் மலைத்துப் போனான். அழும் குழந்தையை காட்டி அவள் பணம் பெற்றுக்கொண்டிருந்தாள்.

வேலை விட்டு ஒரு தினம் வந்து கொண்டிருந்தான். கையில் வைத்திருந்த டொபி மனதை என்னவோ செய்தது. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். மனைவியிடம் பேசி அவள் சம்மதம் பெற்று நாளைக்கு எப்படியாவது இந்த பிள்ளையை தனக்கு தர முடியுமா என இவளிடம் கேட்டுவிட வேண்டும். எனினும் ஒரு பிச்சைக்காரியின் பிள்ளை என்றால் யாரும் விரும்பப் போவதில்லை என்பதை நன்கறிவான். அதனால் தனது அலுவலக நண்பனுடைய தோழியின் பிள்ளை என கூறியே வீட்டாரிடம் சம்மதமும் வாங்கிக்கொண்டான்.

***************

இப்போது குழந்தையும் தாயும் வழமையாக நடமாடும் இடத்திற்கு தேவா வருகின்றான். பொலிசார் ஏதோ விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அழ வைப்பதற்காக தாய் அடித்த அடியால் திணறிய குழந்தை இறந்து கிடக்கின்றது!!!

கனவுகள் !


இளையராணிக்கு இருப்பு கொள்ளவில்லை. வாழ்வு குறித்து அவள் கண்ட கனவுகள் இனிமேல் நிலைத்திருக்க வேண்டும் இறைவா. மானசீகமாக கடவுளை வேண்டினாள். இன்று அவர் வரப் போகிறார். வந்த பின் குளித்து சாப்பிட்டு குழந்தையை கொஞ்சும் அழகை அவள் இன்று தானே முதன் முதலாகப் பார்த்து ரசிப்பாள்?

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள்??

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்ததோ? எந்த ஜாதிமத பேதம் ஒழிய வேண்டும் என நினைத்தாளோ, அதே ஜாதிப் பிரச்சனை இந்தளவுக்கு விசுவரூபம்; எடுத்து தன்னையும் தன் கணவனையும் ஏழு வருடங்கள் பிரித்து விட்டிருக்கிறதே? இத்தனை வருடங்களிலும் வேட்கை மிகுந்து திரியும் கயவர்களை சமாளிக்க எத்தனை போராட்டங்களை நடாத்த வேண்டியிருந்தது. தாலியிருந்தும் வேலியில்லாத பயிர் போல் தன்னைத் தானே எண்ணி அந்தரப்பட்டாளே. தத்தமது மனைவியருடனேயே வந்து பிள்ளையை தூக்கும் சாட்டில் இவளை திருட்டுத்தனமாக ரசிக்கும் எத்தனை பேர்? இளமை வாட்டத்தில் கணவனது படம்; பார்த்து எத்தனை இரவுகள் ஏக்கமாய் இருந்திருப்பாள்?

***************

இளையராணி இளம் பராயத்தில் இருந்தபோது பசு தோலுரிக்கப்பட்ட மனிதர்களின் முகங்களை முழுமையாகக் கண்டு அதிர்ந்து போனாள். உலகத்தில் யாருமே செய்யாத ஒன்றை அவள் செய்தாளா? இல்லையே. ஆனால் உலகத்தில் அரங்கேறும் மிகப் பிரதான குற்றமும் இதுதானே?

காதல்!

இந்த மந்திர வார்த்தையின் சுகத்தை முழுமையாய் உணருமுன்பே காலம் அதன் கை வரிசையை எப்படியெல்லாம் காட்டிப் போயிற்று? ஊருக்குள்ளேயே எப்பேர்ப்பட்ட அவமானங்கள்? உண்மையில் இவற்றுக்கெல்லாம் காரணம் அவளுடைய காதலா? காலம் தொட்டு பேசப்பட்டு வரும் ஜாதிகளுக்கிடையிலான வேறுபாடா?

பாடசாலை காலத்திலிருந்தே வாளிப்பான அவளது உடலமைப்பு மேல் மையல் கொண்டிருந்தவன் சரவணன். காதலை காரணம் காட்டி அவளை அடையும் அவனது நோக்கம் புரியாதளவுக்கு இவளென்ன முட்டாளா? எக்காரணம் கொண்டும் அவனது காதலை ஏற்க அவள் தயாரில்லை. அதையும் விட அவளுக்குள் ஓர் உணர்வு சதாவும் ஓடி ஓடி உயிரை வதைத்துக் கொண்டிருந்ததே? மனசுக்குள் போட்டு பூட்டி வைத்திருந்த காதல் புகையை மறைக்க அவளால் முடியாமல் போன போது சாடைமாடையாக குமரனிடம் ஒப்பேற்றினாள். அவன் வரும்போது நாணிச் சிவந்தாள்.

ஆதிகால சமூகம் தொட்டு குலம் கோத்திரம் பார்த்து மக்கள் தங்களுக்குள் பிரிவினைப்பட்டுப் போவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரே இறைவனின் படைப்பு, ஒரே நிற இரத்தம். இது தான் மனித இனம் என்று அவள் எண்ணினாள்.

வண்ணாண் அழுக்ககற்றி கழுவும் ஆடையை ஆடம்பரமாய் உடுத்தும் அவளது தந்தை, வீட்டு வாசலுக்குத் தானும் அவர்களை வரவிடாது படலை வரை மட்டுமே அனுமதித்து காசு கொடுப்பதை பார்த்து மனம் வெதும்பியிருக்கிறாள். மா இடிக்க வருகிற கூலிக்காரியையும் கொல்லைப் புறத்தில் நிற்க வைத்து வேலை வாங்குவதைப் பார்த்துப் பொறுக்காமல் பெற்றோரிடம் வாதாடியிருக்கிறாள். தமது இனங்களுக்கு இடையிலேயே ஏன் இத்தகைய வேறுபாடுகள் என எதிர்வாதம் புரிந்து இருக்கிறாள்.

அப்போதெல்லாம் ஷநீ சின்னப் பொண்ணு இதையெல்லாம் பற்றி நீ பேசக்கூடாது| என்று அதட்டப்பட்டாள். இயற்கையிலேயே இரக்க குணம் கொண்ட அவள் இப்படிப்பட்ட அரக்க குணங்களை அடியோடு வெறுத்தாள். அதன் காரணமாகவோ என்னவோ குமரனை விரும்பினாள். ஆனால் அவனோ தப்பித் தவறியேனும் அவள் பக்கம் பார்ப்பதேயில்லை. எதேச்சையாக கண்டுகொண்டாலும் கூட திரும்பிக் கொண்டு போய்விடுவான். அப்போதெல்லாம் பச்சைப் புண்ணில் மிளகாய்பட்டது போல அவளது உள்ளம் துடிக்கும்.

எனினும் இளையராணி தளர்ந்து போய்விடவில்லை. புற்றீசல் போல் வெளிப்பட்ட அவள் காதல், குமரனின் இதயத்தில் புற்றை அமைக்க அவா கொண்டது. காலம் அதன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. நான்கு மாதங்களின் பின் அவளது முயற்சிக்கு பலன் கிடைத்தது போல் அவனது புன்னகை கிட்டியது. விட்டில் தானாய் வலிய வலம் வந்தால் எந்த விளக்கு விரட்டியடிக்கும்? என்றாலும் வேண்டுமென்று அவள் விழுந்து அல்லல் படுவதை குமரன் விரும்பவில்லை. பக்குவமாக எடுத்துச் சொன்னான். அவளும் அவன் மட்டுமே வேண்டும் என்று உறுதியாகவே நின்றாள்.

ஆறு மாதங்கள் ஆனந்தமாய் கழிந்தன. அதற்குப் பிறகு புயலடிக்கும் என்று யார் கண்டது? இந்த விவகாரத்தை முதலில் எதிர்த்த சரவணன்; குமரனை மிரட்டினான். அவளை இனி சந்திக்கவே கூடாது என்றான். ஆனால் இளையராணியின் அன்பு நதியில் நீச்சலடித்துக்கொண்டிருந்த குமரன் இவற்றையெல்லாம் துளியளவும் பொருட்படுத்தவில்லை. எதற்காகவும் இந்த காதல் ஜோடி அஞ்சவில்லை.

தம் காதல் மூலமாகவேனும் சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து போகட்டும்; அல்லது நம்முடன் சேர்ந்தே இந்த ஜாதிப் பிரச்சனைகள் அழிந்து சாகட்டும் என சபதம் எடுத்துக் கொண்டனர். எதிர்ப்புகள் காதலை மேலும் வலுவடையத்தானே செய்கின்றன. இவர்களும் தம் காதலில் இன்னும் உறுதியானார்கள்.

இது இளையராணியின் பெற்றோரின் காதுகளுக்கு எட்டிய போது பதை பதைத்துப் போனார்கள். சமூக கட்டுப்பாட்டிலிருந்து அவர்கள் என்றுமே விலகி நடந்ததில்லை. அப்படி ஏடாகூடமாய் எதுவும் நடந்தால் ஊர் தம்மை தள்ளி வைத்துவிடுமே எனப் பயந்தார்கள். முழு ஊருக்கும் தெரியும் முன்பே இளைய ராணியையும் அழைத்துக் கொண்டு எங்காவது கண்காணாத தேசத்துக்கு ஓடிவிட அவர்கள் முடிவெடுத்தார்கள்.

இருபது வருடமாய் வளத்த வளர்ப்புக்கு அவள் தேடித்தந்த வெகுமதியா இது? ஒரே பெண் என்று எப்படியெல்லாம் பாசத்தை ஊட்டி வளர்த்தார்கள் அவளது பெற்றோர். அவளுக்கு குறை வைக்கக் கூடாதென்று இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்று கூட அவர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்தார்களே. அத்தகைய அன்பிற்கு இந்த தண்டணை போதுமா? எத்தனை பெற்றோர்கள் இன்று இந்த பாட்டைப் படுகிறார்கள்? காரணமென்ன காதலா? சாதி மத பேதமா?

அவளாவது யோசித்திருக்கலாமே? தன்னைக் கேட்காமல் படிக்க வைத்து, தன்னைக் கேட்காமல் சாப்பிடத் தந்து, தன்னைக் கேட்காமல் ஆடை அணிகலன் தந்த பெற்றோர் தனக்குத் தேவையான வயதில் வரன் தேடித்தராமல் இருப்பார்களா? காதல் இவ்வளவு வலிமையானதா? எப்படியோ ஊரை விட்டு போகும் முடிவை இளைய ராணியே நிறைவேற்றிவிட்டாள். ஆம்! அவள் குமரனுடன் ஓடிப் போனாள். ஊரார்களுக்கு முன்னே நின்று தலைவிரி கோலமாய் அவளது அம்மா அவளை திட்டிக்கொண்டிருந்தாள். தான் பெற்ற பிள்ளையை ஒரு தாய் இப்படி திட்டுவாளா என்று ஊர் வம்பை அவல் தின்னும் பெண்களே மனம் கலங்கினர். ஆனால் அதன் உள்நோக்கம் மற்றவர்கள் திட்டுவதைவிட தானே திட்டுவது போல நடித்ததுதான் என்பது யாருக்குத் தெரியப் போகிறது?

இந்த சம்பவம் சரவணனை மிருகமாக்கி விட்டிருக்கும் என்று யாருமே நம்பியிருக்கமாட்டார்கள். சாதி வெறி பிடித்தலையும் ஒருவன் என்றே இளையராணி போன்றோர் நினைப்பார்கள். சமூக கட்டுப்பாடு மீறாதவன் என ஊரார் எண்ணுவார்கள். தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனுடன் போய்விட்ட அந்த அவமானத்தை அவன் ஏற்றுக் கொள்ள திக்கித் திணறினான். நண்பர்களிடம் கேலிக்காளானான்.

இவனைப் போன்றே அவள் மீது காதல் கொண்டவர்கள் ஷஅவங்களை சும்மா விடக் கூடாது| என கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய்விட்டு வேடிக்கை பார்த்தனர். ஒரு குழுவாக இயங்கி அவர்களை கண்டுபிடித்துத் தருவதாக அவள் பெற்றோரிடம் வாக்களித்தனர். இனிமேலும் இந்த ஊரில் இப்படிப்பட்ட தவறுகள் இடம் பெறக் கூடாதென்று மேடை அமைத்துப் பேசினர்.

எதுவுமே தெரியாமல் குமரனுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள் இளையராணி. தாய் தகப்பனை விட்டுவிட்டு வந்த சோகம் குடிகொண்டிருந்தாலும், குமரனின் அணைப்பில் அவளது கவலைகள் கட்டுப்பட்டிருந்தன. இல்லற வாழ்வின் இனிமை இத்தனை சுகமா என அவள் எண்ணியிருந்தாள். அதற்கு கண் வைத்தாற் போல இவர்களின் வாழ்க்கையில் மீண்டும் பேரிடியாக வந்தான் சரவணன்.

தான் மணமுடிக்க இருந்த பெண்ணை கூட்டிக் கொண்டு வந்ததற்காக முதலில் சரவணன் வசை பாடினான். பிறகு கையோங்கினான். கீழ் சாதியான் தனக்கு பயப்படுவான் என்று எண்ணியே அவன் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும். முதலில் செய்வதறியாமல் பின்னே நகர்ந்தான் குமரன். அதை கண்ட சரவணன் உடனே இளையராணியை நெருங்கி பிள்ளை வயிற்றுக்காரி என்று கூட பாராமல் சட்டையை கிழித்து மானபங்கப்படுத்தினான்.

காதல் தந்த தைரியமோ என்னவோ வெறி கொண்டவனாய் எழுந்து சரவணனை தாக்கினான் குமரன். இந்த திடீர் தாக்குதலால் சரவணன் நிலை குலைந்து போனான்.

ஒரு நிமிடத்துக்குள் தனக்கு நடக்கவிருந்த அவமானத்தை எண்ணி உயிர் நடுங்கிய இளையராணி குமரனின் வெறியைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். எல்லாவற்றிற்கும் அவள் தான் முதலில் அத்திவாரம் போடுவாள். அவன் திறமையாக கட்டி முடிப்பான். அவனாக ராகமிசைத்து அவளை வழிக்கு எடுப்பதில்லை.

அப்படிப்பட்டவன் இவ்வாறு வெறித்தனமாக நடந்துகொண்டால் யாருக்கு ஆச்சரியமிருக்காது? ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம் ஆனந்தப்பட்டவளுக்கு தன் கண் முன்னே நொடிப் பொழுதில் அரங்கேறிய அந்தக் கோரக் காட்சி ஈரலை குளிரச் செய்தது. கடவுளே.. கத்தியில் இரத்தம் சொட்டச் சொட்ட அவள் கணவன் உடல் நடுங்கிக் கொண்டிருந்தான். அருகில் சரவணண் இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தான்.

***************

ஏழு வருடங்களின் பின் இன்று குமரன் விடுதலையாகி வருகிறான். நீண்ட  காலமாக குமரனைப் பிரிந்திருந்த இளையராணி அவனது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறாள்!!!